மதுரை முரளி

Classics Fantasy Inspirational

4.5  

மதுரை முரளி

Classics Fantasy Inspirational

ஆசான்

ஆசான்

13 mins
471


                                      “ஆசான்” – மதுரை முரளி

                “  நல்லூர்”  போர்டுடன் பச்சை நிற சிற்றுந்து செம்மண் சாலையில் பயணிக்க,

                   இடையிடையே பரந்துவந்த மண் புழுதி பஸ் கண்ணாடியில் படர்ந்து அதன் நிறத்தை பழுப்பு நிறமாய் மாற்றியது.

                   மாலை நேர சூரியன் சாய்வு கோணத்தில் சற்றும் சூடு குறையாத அக்னியை கக்க,

                   தொப்பலாய் சட்டையில் நனைந்தும்,  மனமகிழ்ச்சியாய் பயணப்பட்டான் பிரகாஷ்.

                   பிரகாஷ் ஒரு தகவல் துறை பட்டதாரி அடிப்படையில்.  அதன் மேல் பல சிறப்புப் பட்டங்கள் பெற்று,  சென்னையில் அயல்நாட்டு கம்பெனியின் தலைமை பொறுப்பில் நிர்வாக அதிகாரி.

                 ஆறு இலக்க சம்பளம். வயசு.. கிட்டத்தட்ட அரை சதம் நோக்கி நெருங்கி விட்டான்.

                  கடந்த ஒரு வாரமாய் ஒரே மன அழுத்தம் அவனுக்குள்.

                  ஓடி,ஓடி  பணத்துக்காக பகல் இரவு பாராது  உழைத்து கால் நூற்றாண்டு காலம் கடத்தியவன்  மனம்.. தளர்ந்து போக,

                  மனைவி இரு மகள்களிடம், தான் பத்துநாள் ஓய்வில் செல்வதாய்க் கூறி விட்டு தான் பிறந்து,  வளர்ந்த கிராமத்தை நோக்கி இப்போது.

                 “ என்னங்க பத்து நாள் லீவு போட்டு, ஏதாவது மேல்நாட்டு சுற்றுலா போனா சரி.  நாம எப்போதும் அப்படித்தானே!  போயும் ,  போயும் உங்க கிராமத்துக்கு போறேங்கறீங்க?  அங்கே என்ன பொழுதுபோக்கு இருக்கு? “  மனைவி மாலா அங்கலாய்க்க

                 “ மாலா,  இதுவரை நானும் உன்னைய மாதிரி தான் நினைச்சேன்.  ஆனா,  திடீர்னு ஒரு வாரமா மனசு பாரமா இருக்கு.  என் சொந்த பூமியில, கால் வைச்சு.. கும்பிட மனசு துடிக்குது.  நான் படிச்ச பள்ளிக்கூடம்.. என்னோட ஒரே வாத்தியார் சுவாமிநாதன் பற்றிய நினைவுகள் என் மனசுல. அதான் நான் கிளம்பறேன்” 

              ‘ படக்’  என முடிவெடுத்தவன் இதோ பயணத்தில்.

               காற்றிலே இலேசாய் மண் வாசனை. ஈரம் கலந்த  மணம் ரம்மியமாய்.

               ஜன்னல் வழியாய் பார்த்தவன் பார்வையில்.. பசுமை போர்த்திய பூமி.  பாசம் விளையும் பூமி .

              விழியோரத்தில் நீர் துளிர்த்து கன்னத்தில் வடிய, கைக்குட்டையை எடுத்து துடைத்து கொண்டான் பிரகாஷ்.

              “நல்லூர்” கிராமம் நுழைவு அறிவிப்பு கண்ணில் பட, தோள் பேக்கை மாட்டிக்கொண்டு இறங்க தயாரானான்.

              கூட இறங்கிய ஆறு பேர் இவனது தோற்றத்தைப் பார்த்து தங்களுக்குள் கிசுகிசுத்தனர். 

              ஊர் பாதை.. அதே பழைய நிலையில்.

              வெள்ளாடுகள் மந்தையாய்.. இவனுக்கு முன்னால் போக,  வேப்பங்குச்சியை கிரிக்கெட் பேட்டாய் சுழற்றியபடி,  ஒரு சிறு பையன் ஏதோ ஒரு பாட்டை முணுமுணுக்க,

             “  தம்பி,  உங்க பேரு என்ன? என்ன  படிக்கிறீங்க? “  சற்று வேகமாய் நெருங்கி வினவினான் பிரகாஷ்.

                தலையில் கட்டியிருந்த முண்டாசை வேகமாய் அவிழ்த்த பையன், 

              “  சார்.. நீங்க?  என் பெயர் முருகன்.  ஆறாம் வகுப்பு படிக்கிறேன்”

              மரியாதை குரலிலும் செயலிலும் தெரிந்தது.

              “  நா.. நான் பிரகாஷ்.  ஆமா.,  நம்ம ஊர் நடுநிலைப்பள்ளி எப்படி இருக்கு?  பாதை எந்த பக்கம்? “  முகத்தில் புன்னகையுடன்  வினவினான்.

             “ சார்.. இதோ இப்படி கிழக்காலப் போய்,  வடக்கால திரும்பினா.. பெரிய பம்புசெட் வரும்.  அதை ஒட்டி நடந்தா.. கொஞ்சம் தொலைவில் இருக்கு.  யாரைப் பார்க்கணும்?  பள்ளிக்கூடம் அடைக்கிற நேரம்”  குறுகுறுப்பாய் பிரகாஷைப் பார்த்துக் கேட்டான்.

            “ அப்ப,  நான் வேகமா போறேன். பை.. பை”  சொல்லிவிட்டு விரைவாய் நடக்க,

             குழப்பமாய் கையை ஆட்டினான் சிறுவன் முருகன்.

            முருகன் கூறிய பம்ப்செட் அடையாளம் கண்ணில் பட , சுற்று முற்றும் பார்த்த பிரகாஷின் பார்வையில்.. மங்கலாய் பள்ளிக்கூடம்.

             பம்ப்செட் தண்ணீராய் உற்சாகம் உடம்பெல்லாம் பற்றிக்கொள்ள, ஓட்டமும் நடையுமாய் பள்ளியை அடைந்தான் பிரகாஷ்.

           “ அரசு நடுநிலைப்பள்ளி”  அரைவட்ட வடிவ வளைவு போர்டு.

           பெயிண்டு உதிர்ந்து வருடங்கள் பல இருக்கும்.

           சற்று யோசனையுடன் உள்ளே நுழைந்தவன்,  முன்னே ஓர் ஆசிரியர் கூடவே ஒரு ஆசிரியை. 

          கைக்கட்டி நின்றவர்களின் முகத்தில் கலவரம் அப்பியிருந்தது.

        “ வ...வணக்கம் சார்.”   இருவரின் பிசிறடித்த குரல்கள்.

         அவர்களின் பின்னால்.. ஓரமாய் குச்சி கிரிக்கெட் பையன் முருகன்.

         “பக்” கென சிரிப்பு வந்தது பிரகாசுக்கு.

         “  டேய் முருகா,  அதுக்குள்ள எப்படிடா இங்கே? அதுவும்  எனக்கு முன்னாடி? “  ஆச்சரியப்பட்டவனாய் பிரகாஷ்.

         “ சார்.. நா.. நான் குறுக்கு பாதையிலே ஓடி வந்து,  நீங்க வர விவரத்தை சொல்லிட்டேன்”  மூச்சு வாங்கினான் முருகன்.

          மீண்டும் “பக்”  பிரகாஷிடமிருந்து.இம்முறை ஆசிரியர்கள் இருவரும் இலேசாக இணைந்தனர்.

          “ சார்.. நான் அகிலன்.  இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர்.  இவங்க ஹேமா.. இன்னொரு ஆசிரியை. “  சொல்லியபடி மீண்டும் வணக்கம் தெரிவிக்க,

         “  நோ.. நோ.  நான் தான் உங்களை கும்பிடணும். என் பெயர் பிரகாஷ். இந்த பள்ளிக்கூடம் .. இல்லை, இந்த கோயிலைப் பார்த்து கும்பிட்டு வழிபடத் தான் நான் சென்னையில் இருந்து வந்திருக்கேன். “  எனத் தொடங்கி,

          தன்னைப் பற்றி.. தன் நிலைப் பற்றி எல்லாம் சுருக்கமாய் விளக்கியவன்,

         “  ஹேமா டீச்சர்,  நீங்க அநேகமா சற்று தொலைவிலிருந்து வருவீங்கன்னு நினைக்கிறேன். “ என இடைவெளி விட,

         “  ஆமா சார் . இப்ப.. அதாவது மாலை 5 மணிக்கு பஸ். இங்கிருந்து  பத்து கிலோ மீட்டர் பயணம் வீட்டுக்கு.  இந்த பஸ்சை விட்டா, அப்புறமா 7 மணி வரை காத்திருக்கணும். “  பதட்டமாய் பேசியவளை இடைமறித்த பிரகாஷ்,

         “ மன்னிக்கணும். நீங்க கிளம்புங்க.  அகிலன் சார்..” அவர் பக்கம் திரும்ப,

        “  அவசரமேயில்லை.  நான் இதே ஊர்ல தான் ஒரு வீட்ல

 தங்கியிருக்கேன்.  இன்னைக்கு இரவு நீங்க விருப்பப்பட்டா.. தங்கலாம்”

        “ ஓ.. மிக்க நன்றி வணக்கம்”  தெரிவித்த பிரகாஷ்,

         “ அகிலன்.. நான் படிச்ச வகுப்பை பார்க்கணும்.  உங்க அனுமதியோட”

         “ நிச்சயமா.  இப்படி வாங்க” என  அழைக்க,

         சற்று நெகிழ்ச்சியுடன் பள்ளிக்கூட அறைக்குள் நுழைந்தவன், 

        “ இ..  இதான் என்னோட வகுப்பு.  ஐந்தாம் வகுப்பு. ஆனா,  அப்பவெல்லாம் மர பெஞ்சுகள்.  இப்போ இரும்பு பெஞ்ச். “  என்று சொன்ன பிரகாஷ்,

         பெஞ்ச்சொன்றில் அமர்ந்து வகுப்பறையின் நிலையை பார்வையிட்டான்.

         வகுப்பறை பெரிதாய் மாறி இருக்கவில்லை.

         புதிதாய் வேயப்பட்ட ஓடுகள்.  அங்கும் , இங்கும் சிறிய இடைவெளி அதன் வழியே சூரிய ஒளிக் கீற்றுகள்.

        கரும்பலகை.. புதியதாய்.  கூடவே “ டஸ்டர்” துணி. பலகை ஸ்டாண்டில் ஓரம் சாக்பீஸ் டப்பா.

        உள்ளே முழுதாய்  இரண்டு சாக்பீஸ்.  சில உடைந்த துண்டுகள் நான்கைந்து வண்ணங்களில்.

        தான் படித்த “ கரும்பலகை”  கவிதை மனதில் நினைவுக்கு வர,

       “  அகிலன் சார், இப்படி உட்காருங்க.    அட,  இது உங்க பள்ளி.  நீங்களே நின்னா எப்படி? சமீபத்தில்  நான்’கரும்பலகை’ கவிதை படிச்சேன்..” அவர் கைப்பிடித்து  அருகில் அமரவைத்து,  கண்களில் ஒற்றிக் கொண்டான்.

       “  அடடா!  என்ன சார் நீங்க?  என் கையை தொட்டு..”  அவசரமாய் கையை  உதறிய அகிலன்,

      “  ஏதோ கரும்பலகை கவிதைன்னு சொன்னீங்க? “ என நினைவுபடுத்த,

       “ ஹ.. இதோ”  பையிலிருந்த கவிதைத் தொகுப்பை எடுத்த பிரகாஷ்.. வாசித்தான்.

"கரும்பலகை " –கவிதை

 அன்று..

முதன் முதலாய்

எழுத்துக்கண்ணை

திறந்த... பலகை.

பறந்த..சுண்ணாம்பு

 துகள்களுக்கிடையே...

குரு சிஷ்யன்

உறவை உலகிற்கு

அறிவித்த

அறிவிப்பு பலகை.

மாதா பிதா

குரு தெய்வம்

மாண்பை மனதில்

நிறுத்திய பலகை

மகிழ்ச்சியை என்றும்

மனதில் செதுக்கிய 

பலகை.

இன்று.. 

காலமாற்றத்தில்

 காணாமல் போய்

தன் உன்னதத்தை

தொலைத்து விட்டது

 நம்மிடையே.

வாழ்வோம்..

 கரும்பலகை

போதித்த போதனைப்படி

என்றும் "

         வேக, வேகமாய் வாசித்து விட்டு, அதனை விட வேகமாய் சுவாசிக்கவும் செய்தான் பிரகாஷ்.

       “  அருமை சார்.”  கைதட்டி பாராட்டினார் தலைமை ஆசிரியர் அகிலன்.

       “ நன்றி சார்.  இந்த கவிதை  தான் என்னை இங்கே கூடி வந்தது.  என் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தை,  என் கண்முன்னே காட்டி.. ஒரு கலகலப்பை கொண்டு வந்திருக்கு எனக்கு”  மகிழ்ச்சியாய் பிரகாஷ் கூற,

       “  ஆச்சரியம் சார்.  பெரிய பதவியில் இருந்தும்,  பழசை மறக்காமல் உங்கள மாதிரி சில பேர்தான் உள்ளுரை மறக்காம  இருக்கீங்க!” 

       “  போன வாரம் வரை,  நானும் மறந்து தான் இருந்தேன்.  திடீரென நல்ல ஞானோதயம் இந்த கவிதையால எனக்கு கிடைச்சது. ஓ , சாரி நாம கிளம்பலாம்.  பள்ளிக்கூடம் அடைக்கிற நேரம் தாண்டிடுச்சே” வருத்தப்பட்டான் பிரகாஷ்.

      “  என்னை பொறுத்தவரை.. எனக்கு இந்த பள்ளிக்கூடம் தான் எல்லாம். நான் தனிமரம்.  வீட்டுக்கு போய் என்ன பண்ண போறேன்?"

      “அப்போ உங்களுக்கு திருமணம்? "

      “ அப்பா,  அம்மா சொந்த ஊர்ல.. தேனியில் இருக்காங்க.  பொண்ணு தேடிக்கிட்டு இருக்காங்க.  நான் வாரம் ஒரு முறை கண்டிப்பா அவங்கள பார்க்கப் போவேன்.  நீங்க தாராளமா உங்க நினைவுகளை பகிரலாம்.  இரவு என் கூட தங்கலாம்.  மெயின் ரோடுல புரோட்டா கடை இருக்கு “ சொல்லிவிட்டு அகிலன் சிரிக்க,

         தானும் கலந்து கொண்டான் சிரிப்பில் பிரகாஷ்.

        “ அகிலன் சார், சந்திச்ச கொஞ்ச நேரத்திலேயே நெருங்கி பழகிட்டீங்க. “ பிரகாஷ் சிநேகமாய் கைநீட்ட,

        நட்போடு கைப்பற்றி குலுக்கினான் அகிலன்.

       “  ரொம்ப போரடிக்கிறேனோ? “ 

       “  சே! சே!  ரொம்ப மகிழ்ச்சியாவும்,  வித்தியாசமான உணர்வாவும் இருக்கு எனக்கு”  ஆழமாய் அகிலன் பார்க்க,

        தொடர்ந்தான் பிரகாஷ்.

       “  நான் படித்தபோது திரு. சுவாமிநாதன் தலைமையாசிரியர். இ.. இல்லை. தலைமை  ஓராசிரியர் பள்ளி இது.  சகலமும் அவரே. ஓ.. மறக்க முடியாத வகுப்பு நினைவுகள். “  இடைவெளிவிட்டு,

       மீண்டும்..

     “  அப்ப .. கல்வி ஆழமா.. நல்ல புரிதலுடன் இருந்தது.  திடீரென முந்தின நாள் பாடத்திலிருந்து வினா எழுப்புவார்.  பதில் தெரியலைன்னா.,  முதல்ல எழுந்து நிற்கணும். வரிசையா..  கேள்வி ஒரு சுற்று வரும்.  யாரு பதில் சொல்கிறார்களோ ,அவங்க பதில் சொல்ல முடியாதவங்க தலையில்   குட்டணும். “

     “ ஓ..ஆஹா”  சிரித்தான் அகிலன்.

     “  ஆமா நிசமா. நான்  பெருமைக்கு சொல்லலை.  நான் நிறைய தடவை நிறைய பேரை குட்டியிருக்கேன். “

      “  ரொம்ப புத்திசாலி சார்.  நீங்க ஒரு தடவை கூட குட்டு வாங்கலையா? “ ஆர்வமாய் அகிலன்.

       “ அது எப்படி சார்?  நானும் சில தடவை குட்டு வாங்கியிருக்கிறேன்.  தப்பு செய்யாதவன் யாருமே இல்லையே... இங்கே.  அனுபவம் தானே பாடம் நம்ம வாழ்க்கையில. “

    “ அசத்துறீங்க சார்.  அருமையா பேசுறீங்க .” அகிலன் சிலாகிக்க,

  “    இன்னொரு விஷயம்.  சில பேரு எனக்கு நெருங்கிய நண்பரான யிருப்பாங்க.  அவங்க தலையில மட்டும் லேசாக குட்டுவேன் “

கூறிய பிரகாஷ்,

     “ ஹா ஹா ஹா” என  வாய் விட்டுச் சிரித்தான்..பல வருடங்களுக்குப்பின்.

      “  ஆமா,  நீங்க சொன்ன சுவாமிநாதன் சாரை பார்த்திருக்கீங்களா? “

 அகிலன் வினவ,

      “ அதுக்குதானே முக்கியமாக வந்திருக்கேன்.  அவர்தான் எனக்கு   கல்விக்கண் திறந்த கடவுள். ஆசான்.. எல்லா வகையிலும். ‘ படிப்பும்,  ஒழுக்கமும் இரண்டு கண்கள்’ எனப் புரிய வைத்த ஒரு புனிதர்.  படிப்பு மட்டுமே ஒருவனை,  நல்ல மனிதனா உயர்த்த முடியாது.  சுய ஒழுக்கம், தேசபக்தி,  சமூக சேவை இப்படி.. பல விஷயங்கள்.  இதை, அவர்.. அந்த ஆசான்,  என்னோட அடி மனசுல பதிய வைச்சதினால தான்.. இப்ப நான் உங்க முன்னாடி நல்ல நிலையில் இருக்கிறேன்.”  படபடவென பேசிய பிரகாஷ்,

      “ நான் அவரைப் பார்க்கணும். உதவி செய்ய முடியுமா? “ எனக் கைகூப்ப,

      “  திரும்ப,  திரும்ப என்னையப் போய் கும்பிட்டு பெரியமனுஷனா ஆக்காதீங்க. சுவாரசியமான விஷயம் என்னன்னா.. எனக்கும் , அவர் தான் ஆசான். நான் நாலு வருஷத்துக்கு முன்னாடி இங்கே வந்தப்போ,  அவர் தான் தலைமை ஆசிரியர்.  எல்லா வகையிலும் என்னோட வழிகாட்டி.  இரண்டு வருடம் முன்னாடி  தான் ஓய்வு பெற்று,  பக்கத்து டவுனுக்கு இடம் மாறிட்டாரு. “

    “ தயவு செய்து, நான்  அவரை பார்க்கணும்.”

    “ நிச்சயமா.  அவரை இன்னிக்கு இரவே பார்த்திடலாம்”  பேசிய அகிலன்,      தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.

      சுவாமிநாதன் சம்மதம் தர,

      பள்ளிக் கூடத்தை சுற்றிப்பார்த்த பிரகாஷ்புறப்பட்டான் அகிலனோடு. 

     “  சார் வணக்கம்.  நான் பிரகாஷ். “

      வாசலிலேயே நின்று வரவேற்ற சுவாமிநாதனிடம்  பிரகாஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள,

      “ வா,  வா.  நல்லா இருக்கியாடா?  என் மாணவனை எனக்கு தெரியாதா.? என்ன பெரிய ஆளாயிட்ட! “  சத்தமாய் சிரித்தார்.

      “  வாங்க,  அகிலன் தம்பி.  நலமா? “  என வினவ,

      “ உங்க  ஆசியில ரொம்ப நலமய்யா. பிரகாஷ் சார் உங்களை பற்றி ரொம்ப , ரொம்ப உயர்வா சொன்னார்.  உங்களைப் பார்க்கணும்னு விருப்பப்பட்டதால,  அழைத்து வந்தேன். “

      “  ரொம்ப சந்தோஷம். பிரகாஷ்... ரொம்ப நல்ல மாணவன்.  படிப்பு,  விளையாட்டுன்னு.. பல வகையில”  பாசத்துடன் பிரகாஷை தட்டிக் கொடுக்க,

       காலைத் தொட்டு வணங்கியவன்,

       ஒரு சால்வையை சுவாமிநாதனுக்கு அணிவிக்க,

      முதலில் மறுத்தவர்,  நிறைய வற்புறுத்தலுக்கு பின் ஏற்றுக்கொண்டார்.

      நெகிழ்ச்சியான நினைவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

      “ ஐயா,  ஒரு சிறிய விண்ணப்பம்.  என்னோட  இந்த நிலைக்கு.. வளர்ச்சிக்கு நீங்களே காரணம்.  பள்ளிப்பருவத்தில் அப்பா,  அம்மாவுக்கு அடுத்து ஆசிரியர்கள் தான் எல்லாம்.  எதிர்கால வாழ்வின் வழிகாட்டி.  ஒளிவிளக்கு. “

     “  அடடா..போறும்பா. நீ சொல்வது உண்மைதான்னாலும்,  உழைப்பு, அறிவு, திறமை வேணுமே.  அது உன்கிட்ட இருந்ததுனால  தான் நீ உயர்ந்திருக்கே.”  பிரகாஷைப் பாராட்டினார் சுவாமிநாதன்.

     “  ஐயா..இப்பவே  இரவு காலதாமதம் ஆகிவிட்டது.  ஒரு விசேஷத்திற்காக விரைவிலேயே , உங்களை நான் மீண்டும் சந்திக்கிறேன்”  விடை பெற்றுக்கொண்டான் பிரகாஷ்.

      அன்றிரவு அகிலன் வீட்டில் பல்வேறு விஷயங்களை பேசியவாறு பொழுது கழிந்தது பிரகாஷிற்கு.

       ஒரு வாரம் ஓட்டமாய் கழிய,

       மீண்டும் அகிலன் உடன்  பிரகாஷ்.. சாமிநாதன் வீட்டில்.

       “ வணக்கம் ஐயா. “  பிரகாஷ்.

       “ வாடா.  ஏதோ விஷேசம்னு சொன்னே.  என்னது? “  சுவாமிநாதன் வினவ, 

      “ வர்ற வெள்ளிக்கிழமை பள்ளியில ஒரு விழா.  நீங்க அவசியம் வரணும் “ சொல்லிவிட்டு பிரகாஷ் சிரித்தான்.

      “  என்ன அகிலன்,   நீங்களாவது சொல்லுங்க? “  புன்முறுவலுடன் கேட்க,

      “ அ..அது.,  வாங்க சார். மாலை ஐந்து மணிக்கு  மறக்காம வந்திடுங்க. அகிலன் நிறுத்திக் கொண்டான்.

        வெள்ளிக்கிழமை..  நல்லூரே விழாக்கோலத்தில் திளைக்க,

        பள்ளிக்கூட வாசல் கலர்கலரான கொடி அலங்காரங்களுடன் .

        ஒரு சிறிய மேடை..  சுவாமிநாதன் சார்.. விழா கதாநாயகன் .

        கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து பேச ஆரம்பித்தார் மாவட்ட கல்வி அதிகாரி .

        “ அனைவருக்கும் மாலை வணக்கம்.  இப்பள்ளியின் முன்னாள் மாணவர் திரு.  பிரகாஷ் அவர்கள் மிகுந்த முயற்சி எடுத்து,  மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் ஆயிரம் நூல்களுடன் கூடிய  நூலக கட்டிடம் மற்றும்  சுகாதாரமான கழிப்பறை வசதி கட்டடம் கட்ட பணம் கொடுத்துள்ளார்.    தன் ஆசான்.. முன்னாள் தலைமையாசிரியர்

 திரு. சுவாமிநாதன் பெயர் பதித்து துவக்கவிழா கல்வெட்டை,  அவரை வைத்தே திறந்து கௌரவப்படுத்த விரும்புகிறார்.  தயவுசெய்து

 உயர்திரு. சுவாமிநாதன் ஐயா கல்வெட்டை திறந்து வைக்க உங்கள் அனைவரின் சார்பில் வேண்டி அழைக்கிறேன்”

        சுற்றி இருந்தவர்களின் கைதட்டல் பாராட்டு மழையில் நனைந்தபடி,  அந்த  “ஆசான் “ தன்  பழைய மாணவனின் அன்பு கட்டளையை நிறைவேத்த,

        ஆகாயம்.. மழைத்துளிகளை சிந்தி,  தன் அன்பை பொழிந்தது தன் பங்கிற்கு.

                                        

                                     



Rate this content
Log in

Similar tamil story from Classics