பிரம்மாண்ட இராஜ்ஜியம்
பிரம்மாண்ட இராஜ்ஜியம்
உச்சாணி கொம்பிலே ஓர் அழகிய கோட்டை!
கோட்டைக்குள்ளே பிரம்மாண்ட இராஜ்ஜியம்!
அந்த கோட்டையின் வனப்பை கண்டால்
புரிந்து விடும்....
செதுக்கிய சிற்பியின் கலைநயம்! .....
எத்தனை நேர்த்தி!
அத்தனையும் அளந்து எடுத்தது போல் ஒரே அளவில்!
கோட்டைக்குள்ளே.....
ராஜா..... ராணி.....
வேலைக்காரர்கள்!
ராணியின் கடமையோ....
ராஜ்ஜியத்தின் ஜனத்தொகையை பெருக்குவது!
ராஜாவின் கடமையோ...
ராணியுடன் சேர்ந்து உல்லாசமாய் வாழ்வது!
ராஜா.... ராணி.....
கட்டளையிட்டு..... கடமையாற்றும் சேவகர்கள் இல்லை!
என் கடன் பணி செய்து கிடப்பதே! என்பது போல்
நித்தம்.... நித்தம்...
பணி....
சத்தம் ஒன்று இல்லை!
கோட்டையை செப்பனிடுவது....
வாரிசுகளை வளர்ப்பது.....
மைல் கணக்கில் பறந்து மதுவை உறிஞ்சி
கோட்டையில் சேகரித்து வைப்பது!
கோட்டையை காப்பது....
கோட்டைக்குள் அயலார் நுழைந்து விட்டால் கொட்டி விரட்டி அடிப்பது!
சங்கு ஒலித்தது இல்லை!
சம்பள உயர்வு கோஷம் இல்லை!
கோஷ்டி பூசல் கண்டதில்லை!
வேலை நிறுத்தம் செய்ததில்லை!
உற்பத்தி என்றும் குறைந்ததில்லை!
வயது வரம்பு தேவையில்லை!
வணிகத்தில் நட்டம் ஆனதில்லை! ஆனபோதும் சோர்ந்ததில்லை இறுதிவரை மனம் தளர்ந்ததில்லை
எத்தனை கடமை நிறைந்த பணியாட்கள்!
கண்டதில்லை அவர்களைப் போல் துடிப்பு மிக்க சேவகர்களை!
கோட்டையை கொஞ்சம் நெருங்கித் தான் பாருங்களேன்....!
மதுவை பதப்படுத்தும் வித்தையை கற்றுத் தான் தாருங்களேன்!
அமிர்தமோ? மருந்தோ?
மனதை மயக்கும் மதுவோ?
மலர் படைத்த விருந்தோ?
என் சொல்வேன்?