நெற்கதிரெனும் மகள்
நெற்கதிரெனும் மகள்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
நன்செய் நிலமும் நம்பிக்கை பெற்றிடும்
புன்செய் நிலத்திலும் புத்துயிர் நிறைந்திடும்
மண்வளம் காப்பில் மகத்துவம் கிடைத்திடும்
கண்போல் பேணிக்காக்கும் கடவுளின் ஊழியனே
ஆடுமாடு வளர்ப்பதிலும் ஆளுமை நிறைந்திருக்கும்
காடுமேடு போனாலும் காலத்தோடவே இவைதிரும்பும்
குடும்பத்தில் ஒருவராய் குழந்தைகளும் நேசிக்கும்
இடும்பைகள் அண்டிடுமோ இவன்சூழ் உலகிலே
விளைந்த நாற்றை விசாலமாய் நடவுசெய்து
களைகள் யாவையும் கருத்துடனே களையெடுத்து
தழையும் நாற்றில் தண்ணீருக்காய் சீரமைத்து
உழைப்பையே உரமாக்கி உழவையும் தக்கவைத்தானே
வளர்ந்துவரும் நெற்பயிரை வரவேற்கும் பாட்டமைத்து
களத்திலே வேலையை கனியமுதாய் இவன்சுவைத்து
ஊருக்கே பசியாற்றும் ஊன்றுகோலாய் இவனும்
பார்போற்றும் விவசாயி பாரதத்தின் தலைமகனே
குலைகுலையாய் நெற்பயிரும் குத்தவைச்சு உக்காந்தாச்சு தலைகுனிந்து நெற்பயிரும் தயாராகி நின்னாச்சு
அறுவடை செய்துவைத்து அத்திருநாள் உறுதியாச்சு
இறுதிவரை நன்மகளாய் இவளையும் வளர்த்தாளே
நன்மகளை பெற்றாலும் நன்மதிப்பே கிடைத்திருக்கும்
நின்மகளை வளர்த்ததால் நிறைந்திருக்கும் செல்வமும்
என்மகள்தான் நீயுமே என்னுடைய அங்கமும்
தன்மகளென போற்றுவேன் தகப்பனாய் ஆனதாலே
பிறக்கும் தைத்திருநாளில் பிறந்திடும் நந்நாளாம்
வறட்சியும் மறைந்தே வளர்ச்சியும் பெருகுமாம்
வழிகளும் காட்டுமாம் வளங்களும் ஈட்டுமாம்
செழிப்புடன் நீளுமாம் செந்தமிழின் தைத்திருநாளே