மலரும் …. மங்கையரும் ஒன்றே!
மலரும் …. மங்கையரும் ஒன்றே!
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
மலரே
உன்னில் எத்தனை எத்தனை வண்ணமடி!
எத்தனை… எத்தனை சுகந்தமடி!
உன் இதழ் சிந்தும் சிரிப்பில்
என் சிந்தை மயங்குதடி!
அந்தி பொழுதினில்…
உன் அல்லி இதழ் காற்றினில்
அள்ளி விடும் மணம்
என் மனத்தைக் கவருதடி!
மதியவன் முகம் காட்டியதும்…
உன் மலர் முகம் காட்டிச் சிரிக்கிறாய்!
உனைக் கொய்து கூந்தலில் சூடிய போதும்….
பூச்செண்டாய் கைகளில் நின்ற போதும்…
பூமாலையாய் மேனியை அலங்கரித்த போதும்….
இறைவனின் திருவடியில் சேர்ந்த போதும்…
வாடாமல்… முகம் காட்டுகிறாய்!
கண்ணுக்கும் வயிற்றுக்கும் விருந்து படைக்கிறாய்…
காயத்திற்கு (உடல்) மருந்து கொடுக்கிறாய்!
நல் வாசனை திரவியமாகவும் மணம் தருகிறாய்!
உன் சுகந்தத்தை சுவாசித்தவுடன்…
என் அகந்தை நீங்குதடி!
உன்னுள் எத்தனை எத்தனை வாசனையடி!
நினைத்தாலே மனம் சிலிர்க்குதடி!
ஆயுள் ஒரு நாளே என்றாலும்….
மண்ணில் மலர்ந்து உதிரும் வரை….
புன்னகைப் பூக்கிறாய்!
எத்தனை மன வலிமையடி!
நீ பூப்பெய்திய சேதியை
தென்றல் தேடிப் போய் கூறிவிட…
ஓடி வந்த…
வண்டுகள் நாதம் முழங்க…
தேனீக்கள் தேவ கானம் முழங்க…
வண்ணத்துப் பூச்சிகள் வாழ்த்துக்கள் பாடி…
தூவி விடும் அட்சதையோ உன் மகரந்தங்கள்!
விதையாகிய குழந்தை வளரும்
கருப்பையோ உன் சூற்பை!
நல்ல… நல்ல வித்துக்களை….
இம்மண்ணுக்கு ஈன்று தருவதில்….
நீயும் மங்கையரும் ஒன்றே!
நீயின்றி உணவேது? உயிர்கள் ஏது?
வனங்கள் ஏது? இமமண்ணில் வாழ்வும் தான் ஏது?