கூதிர் கால விடியல்
கூதிர் கால விடியல்
துயில் கலைய மனமிலாது
விடியலும் பாங்காய்
பனிப்போர்வை போர்த்தியே
ஆனந்தமாய் சயணிக்க -
மெல்ல காற்றும் தான்
திருடன் கைகோர்த்து
வெண்சாமரம் வீசிச் செல்ல -
இறகுகளை போர்வையாக்கி
கழுத்தினுள் தலையையும் குறுக்கியே
உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்
இணைப் புறாக்களும்
அவ்வப்போதே தலைதூக்கி
ஆவலாய் எதையோ எதிர்நோக்க
அதோ ! ஆங்கே
மேகக் கட்டினுள் இருந்தே
தப்பிக்க எண்ணி - ஒளிமுகத்தை
மெல்ல கதிரவன் நீட்ட
சற்றே கதிரொளியும்
கையசைத்தே - தன்
இருப்பினை பதிவு செய்வதற்குள்
மேகமும் திரை போட்டே
மறைத்திடவும் - ஏமாற்றம்
ஆதவனுக்கு மட்டுமல்ல
மண்ணுயிர்களுக்கும் கூடத் தான் !