கனவுக்கு உயிர் கொடு பெண்ணே !
கனவுக்கு உயிர் கொடு பெண்ணே !
பெண்ணே...நாளும் நீயே
அன்னையாய் மகளாய்
மனையாளாய் - குடும்பத் தலைவியாய்
பன்முகங்களும் காட்டி
பரிமளிக்கிறாய் !
உன்னையே நீயும்
உணரத் தலைப்பட்டாயோ?
உன்னுள் உறைந்து கிடக்கும்
எண்ணங்கட்கு வண்ணந்தீட்ட
முயற்சி எடுத்தாயோ?
ஆர்வங்களையும் ஆசைகளையும்
கனவுகளையும் இலட்சியங்களையும்
நினைவுகள் அனுபவங்களெனும்
தங்கப் பெட்டகத்துள் போட்டுப் பூட்டி
எப்போதேனும் எடுத்துப் பார்க்கவுமே
நேரமில்லாமல் மறந்தும் மறைத்தும்
விட்டாயோ பெண்ணனங்கே?
தூசு படிந்த ஆசைகளை
புதுப்பித்துக் கொள் !
ஆசைகளை நிறைவேற்றவே
ஓயாமல் ஓடு !
உன் இலட்சியக் கனவுகள்
உனை எப்போதும் உயிர்ப்பிக்கட்டும் !
உயிர்ப்போடிரு ! உயரப் பறந்திடு !