சிலுவை சுமக்கும் மகவுகள்
சிலுவை சுமக்கும் மகவுகள்
வேண்டாம் ...
போதும் பொண்ணு ....
வேண்டா மணி ....
போதும் பொண் போது ....
வேண்டா வரம் ....
வேண்டா அமிர்தம் .....
வேம்பு .....
எத்தனை வெறுப்பும் ஏமாற்றமும் !
ஏன்?
கருவில் பத்து மாதம் சுமந்த பிள்ளை
பெண் மகவென்றதும்
ஏனோ இத்தனை வெறுப்பு ?
பெற்றவர்களின் உதிரத்தில் விளைந்த
உன்னதம் தானே இம்மகவும் ?
பின் ஏனிந்த ஓரவஞ்சனை ?
ஏமாற்றம் - எதற்கோ?
எதிர்பார்ப்பது பெற்றவர்கள் பிழையன்றோ?
பெற்றவர் செய்யும் பிழைக்கு
ஒன்றுமறியா கிள்ளைக்கு
ஏன் தண்டனை ?
பெற்றவர் செய்யும் பாவம் -
எதிர்பார்ப்பு - ஏமாற்றம் - பேராசை
இவற்றின் விளைவு -
சிலுவை சுமக்கும் பெண் மகவுகள் !
மனதில் சுமக்கும் வலிகளின் பாரமும்
சிலுவைப் பாரத்திற்கு சமமாகாதோ?
இந்த பாரம் தீர வழியும் உளதோ?