STORYMIRROR

StoryMirror Feed

Classics Fantasy Others

3  

StoryMirror Feed

Classics Fantasy Others

சாலப் பலபல நற் பகற்கனவில்

சாலப் பலபல நற் பகற்கனவில்

2 mins
192

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே

வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;

மூலைக் கடலினையவ் வான வளையம்

முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;

நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,

நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே

சாலப் பலபல நற் பகற்கனவில்

தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.


ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,

ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,

பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்.


பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்,

ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்;

ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;

''வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!

மாய மெவரிடத்தில்?'' என்று மொழிந்தேன்.


சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே

திருமித் தழுவி ''என்ன செய்தி சொல்'' என்றேன்;

''நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?

நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?

திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?

சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?

பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே

பெற்ற நலங்கள் என்ன? பேசுதி'' என்றாள்.


''நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;

நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;

திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;

சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;

பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே

பெற்றுதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;

சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே,

திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்''.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Classics