அன்பை வீசுவோம்
அன்பை வீசுவோம்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
தாய் நாடு, தாய் மொழி,
பூமித்தாய், பூமா தேவி,
கடல் அன்னை, நீதி தேவதையென
அனைத்திலும் முதன்மைபடுத்தப்படுவது
பெண்மைதான்!
இமயம் முதல் குமரி வரை பாயும்
பெரும்பாலான நதிகளின்
பெயர்களில் பெருமைபடுத்தப்படுவதும்
பெண்மைதான்!
உலகை என்றும் இயக்கும்
உந்து சக்தி பெண்கள்!
உலகம் இன்றும் வியக்கும்
இந்தியக் குடும்ப அமைப்பை
விழாமல் தாங்கும்
விழுதுகள் பெண்கள்!
பூக்களோடு பூர்வீக சொந்தம்
கொண்டவர்கள் பெண்கள்!
பூக்களையே மிஞ்சும் புன்னகைக்கு
சொந்தமானவர்களும் பெண்கள்!
தேகத்தால் செய்த
பூங்கொத்து பெண்கள்!
ஒரு தேசம் முன்னேற
பெரும் சொத்து பெண்கள்!
உயிரைச் சுமக்கும்
உரிமம் பெற்றவர்கள் பெண்கள்!
உதிரத்தை உணவாய் ஊட்டும்
உன்னதமானவர்கள் பெண்கள்!
அலங்காரம் மட்டுமல்ல,
ஆட்சியும், ஆளுமையும் செய்யும்
ஆற்றல் கொண்டவர்கள் பெண்கள்!
மென்மைக்குள்ளும் பெரும் வலிமை
கொண்டவர்கள் பெண்கள்!
சோதனைகளையும், வேதனைகளையும்
சாதனைகளாக்கும்
சக்தி கொண்டவர்கள் பெண்கள்!
பெண்மையின் மகத்துவம் அறிய
முயற்சிப்போம்!
தாயாய், தாரமாய், தோழியாய்,
சகோதரியாய் அவர்கள்தம் பொறுப்பை
இன்னும் சிறப்பாய் செய்ய துணை நிற்போம்!
பெண்மையின் மேன்மை உணர்வோம்!
வன்மம் தவிர்த்து, வளமாய் வாழ
வழி விடுவோம்!
அமிலம் தவிர்த்து, அவர்கள் மீது
அன்பை வீசுவோம்...!