மன்னிப்பாயா
மன்னிப்பாயா
ஆதி உயிரின் ஆரம்பம் நீ..
அனைத்து உயிர்களுக்கும் ஆகாரம் நீ..
உலகப்பரப்பில் மூன்றுபங்கு நீ..
உடல் எடையில் கூட முக்கால்பங்கு நீ..
வண்ணமோ வடிவமோ
தேவையில்லை உனக்கு..
எங்கு நிறைகிறாயோ
அதன் வடிவம் ஏற்கிறாய்..
எதனோடு கலக்கிறாயோ
அதன் வண்ணம் ஈர்க்கிறாய்..
அழுக்கை நீக்கித் தூய்மை செய்கிறாய்..
தாகம் தீர்த்து தாய்மையாகிறாய்..
ஆவியாகி மேகமாகிறாய்..
மழையாகி மண்ணைச் சேர்கிறாய்..
ஏரி, குளங்களில் ஓய்வுகொள்கிறாய்..
நதியாகி நகர்ந்து செல்கிறாய்..
கடலோடு கலந்துவிடுகிறாய்..
உறைபனியாய் உறைந்துவிடுகிறாய்..
நிலத்தடியிலும் நித்திரை கொள்கிறாய்..
உலகில் உயிர்களை நிலைநாட்ட
எத்தனை உருமாற்றங்கள் உன்னில்..
இப்படி உருவங்கள் பலகொண்ட உன்னை சேமிக்கத் தவறினோம்..
வாய்ப்புகள் பல தந்தும் உன்னை
வளப்படுத்தத் தவறினோம்..
தேவை வரும்போது மட்டுமே
உன்னைத் தேடி அலந்தோம்..
தாகம் வரும்போது மட்டுமே
உனக்காய் தவித்துக் கிடந்தோம்..
மூன்றாம் உலகப்போருக்கு
மூலக்காரணமாவாய் நீயென்று சொல்லும் மூடர்களானோம்..
தவறுகள் பல செய்தோம்..
செய்த தவறுகளையும் உணர்கின்றோம்..
பெரும் மழையாய், பேரலையாய் தண்டிக்காமல்,
தயவுசெய்து மன்னியும் எங்களை
தாயுள்ளம் கொண்டு..!