STORYMIRROR

Sowmiya Chemistry

Crime

5  

Sowmiya Chemistry

Crime

விதையாகி வாழ்கிறாள் ..

விதையாகி வாழ்கிறாள் ..

7 mins
445

          " விதையாகி வாழ்கிறாள் " .

  

        அம்மா ..........நான் இந்த பத்தாம் வகுப்புல பள்ளிக்கூடம் முதலாவதா வந்து என் செல்ல அம்மாவுக்கு எந்த கஷ்டத்தையும் இனிமே தரமாட்டேன் நானே ஃப்ரீயா படிச்சு பெரியாளா வந்ததுக்கு அப்றம் , " என் அம்மாவோட கண்ண பார்த்து ' கவி ஓட அம்மாவா நீங்கன்னு' " ஒட்டுமொத்த ஊரே கேட்கற மாதிரி இந்த கவி என் 'லட்சுமி' அம்மாவுக்கு பெருமைய தேடிக்கொடுப்பேன் என கண்களை உருட்டி குறுஞ்சிரிப்புடன் சொல்லி தன் அம்மாவை அணைத்து நெற்றியில் முத்தம் இட்டாள் கவி (எ) கவிதா .


          கவி ..............என்று வேகமாக கத்திய லட்சுமி விழிகளை திறந்து எழுந்து அமர்ந்தவள் முகத்தில் உடம்பில் என வியர்வை துளிகள் முத்து முத்தாக பூத்து இருக்க இரண்டாக கிழிந்து தொங்கி கொண்டிருந்த முந்தானையை நடுங்கிய கைகளால் எடுத்து தன் முகத்தை துடைத்தவளின் இதய துடிப்பு படபடவென்று செவிகளுக்கு கேட்க அவிழ்ந்து கலைந்து கிடந்த கூந்தலை வாரி முடிந்தபடி சுற்றியும் பார்க்க வெறும் இருட்டு மட்டுமே விழிகளில் தென்பட்டது ! இதழ்கள் கவி ...கவி ....என மூச்சு விடாமல் தன் மகளின் பெயரை உச்சரித்த லட்சுமி மெதுவாக கால்கள் தடுமாற எழுந்து சிறிது நாட்களுக்கு முன்பு போடப்பட்ட புதிய ரோட்டில் , தான் பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்த மகளை தேடி சென்றாள் லட்சுமி 

ஒரு மாதத்திற்கு முன்பு 

      யாதவூர் என்னும் சிறு ஊரில் ரோடு என்பதே கிடையாது பலமுறை அரசிடம் மனு கொடுத்த பிறகு இன்று தான் அதற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது . அரசாங்கம் இந்த ஊரில் ரோடு போடுவதற்கான அரசாணையை வெளியிட அதற்கான பணிகள் ஆரம்பம் ஆனது பொதுப்பணி அமைச்சர் தலைமையில் . அவ்வேலைக்காக அவ்வூரை சேர்ந்த மக்களையே வேலை செய்வதற்கு அழைத்திருந்தார் கான்ட்ரேக்டர் .எல்லோரும் சந்தோஷத்துடன் தங்கள் ஊருக்கும் ஒரு ரோடு (சாலை) வரப்போகிறது என்னும் ஆசையோடும் கனவோடும் வேலைக்கு சென்றார்கள் .


        ஆயிரம் அறைகள் இல்லையென்றாலும் படுப்பதற்கு ஒரு இடம் அதிலே சமைக்கும் பகுதி என்னும் வகையில் அமைந்திருக்க மழை வந்தால் சாரலாக கீற்று வழியாக உள்ளே அருவி போல் கொட்டும்படியாக கீற்றுமட்டை மேயப்பட்ட சிறு குடிசை வீடு அதன் உள்ளே தரையில் பாயை விரித்து போட்டு கடுமையான காய்ச்சலும் வயிற்று வலியோடும் படுத்திருந்த லட்சுமி மெதுவாக எழுந்துகொள்ள முயற்சி செய்ய ...அவளுக்கு எதிரே சிறு அடுப்பில் கஞ்சி காய்ச்சி வடிக்க போன கவி தன் அம்மாவை பார்த்துவிட்டு வேகமாக எழ சரியாக பாத்திரத்தை நிமிர்த்தாதனால் கஞ்சி லேசாக அவள் கையில் கொட்டிட அதனை அவசரமாக துடைத்துப்படி தன் அம்மாவிற்கு உதவி செய்தாள் .

          அம்மா ....அதான் நான் செஞ்சு தரேன்னு சொன்னேனே நீ படும்மா என லட்சுமியை படுக்க வைக்க போனவளின் கன்னத்தை தடவி கொடுத்துக்கொண்டே ' இல்ல கவி ...என்னால நீயும் இன்னைக்கு பள்ளிக்கூடம் போகல இப்படியே சும்மாவே படுத்திருந்தா நாளைக்கு சாப்பாட்டுக்கு என்னடா பன்றது இருந்த அரிசியும் தீந்து போய்டுச்சு ரேஷன்ல கூட அடுத்த மாசம் தான் அரிசி போடுவாங்க இப்போ ரோட் போடற வேலைக்கு என்ன வரச்சொல்லி இருக்காங்க கான்ட்ரேக்டர் ஐயா பக்கத்துல கூட எல்லாரும் போறாங்க கவி ! நான் அங்க போனா சாய்ந்தரம் நூறு ருபா கொடுப்பாங்க காய்ச்சலும் வலியும் பார்த்தா அந்த நூறு ருபாயும் போய்டும் கவி புரியுதா என்று மெதுவாக பேசக்கூட முடியாமல் கூறிய லட்சுமி எழபோக திடிரென இரண்டு வேலை சாப்பிடாததால் மயக்கம் வேறு வர கண்ணை கட்டியது லட்சுமிக்கு . 

         பதறிய கவி அம்மா .......உட்காரும்மா என்றவள் வடிகட்டிய கஞ்சியை ஒரு டம்ளரில் ஊற்றி உப்பு போட வேண்டி டப்பாவை எடுத்து பார்த்த கவி முகம் வாடி போனது காரணம் காலி டப்பாவாக சிறு துளி கூட உப்பு இல்லை . வேறு வழியில்லாமல் வெறும் கஞ்சியை மட்டும் தன் அம்மாவிற்கு கொடுத்து குடிக்கும் படி பாசமாக சொல்லிட அவரும் மகளுக்காக குடிக்க ஆரம்பித்தார் உப்பில்லாத ரேஷன் அரிசியால் வடிக்கப்பட்ட கஞ்சியை . 

         அம்மா .....நான் வெனா ஒன்னு செய்றேன் நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு போறேன் இன்னைக்கு சாயங்காலம் வந்து பரிட்ச்சைக்கு படிச்சிக்குறேன் ...இப்போ ரோடு போடற வேலைக்கு உனக்கு பதிலா நான் போறேன் ம்மா நீ செஞ்சாலும் அதே நூறு ருபா தான் நான் செஞ்சாலும் அதே காசு தான் ம்மா அதுமட்டும் இல்லாம " நம்ப ஊருக்கு வரப்போற முதல் ரோடு ம்மா " என்று விழிகளாலும் தன்னுடைய பேச்சாலும் லட்சுமியிடம் கெஞ்சி கேட்க . உனக்கு எதுக்கு கவி இந்த நிலமை நான் போறேன்டா நீ படி சரியா என்று லட்சுமி சொல்ல சொல்ல கவி தன் அம்மாவின் கஷ்டத்தை உணர்ந்து பள்ளிகூட பையை ஓரமாக வைத்துவிட்டு வெளியே வந்தவள் எல்லோருடனும் ஆசையோடு 

      " தன் ஊருக்கு புதுசா ரோடு வரப்போகுது " என்கிற எண்ணத்தில் ரோடு போடும்

வேலைக்கு சென்றாள் .பலமுறை அந்த மனுவை எழுதி அரசாங்கத்திற்கு அனுப்பியதே கவி தானே . " 

     மாலை ஆறு மணி ஆகிவிட்டது ..... எல்லோரும் வெயில் என்று பாராமல் தன் உழைப்பை முழுவதும் கொடுத்துவிட்டு கலைப்பாக அவர் அவர்கள் வீட்டை நோக்கி சென்றார்கள் கையில் கான்ட்ரேக்டர் கொடுத்த சம்பளம் நூறு ருபாய் நோட்டை எடுத்துக்கொண்டு ஊர் மக்கள் . காய்ச்சல் குறைந்திருக்க தன் மகள் இன்னும் வராததால் குடிசையில் இருந்து வெளியே வந்து வெகு நேரமாக காத்துக்கொண்டிருந்தாள் லட்சுமி . 

         இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது இன்னும் கவி வரவே இல்லை நெஞ்செல்லாம் அடித்துக்கொள்ள மகளை பார்க்காமல் கண்கள் கலங்கிய தாய் ஒவ்வொரு வீடாக கதவை தட்டி கவியை பற்றி விசாரித்தாள் . ஆனால் ஒருவருக்கும் கவியை பற்றி தெரியவில்லை யாரிடம் கேட்டாலும் நாங்கள் பார்க்கவில்லை தெரியாது என்பதே பதிலாக வந்தது .திக்கு திசை தெரியாமல் தட்டு தடுமாறி தன் மகள் வேலைக்கு சென்ற இடத்தை நோக்கி பயத்துடனும் பதட்டத்துடனும் ஓடிய லட்சுமி முன்னால் கிடந்த கருங்கல் தடுக்கிவிட்டு கீழே விழுந்து மயங்கி விட்டாள் .


( லட்சுமிக்கு கவி தான் அதே போல் கவிதாவுக்கு தன் அம்மா மட்டுமே உலகம் . எப்படியாவது தன் மகளை படிக்க வைத்து பெரிய ஆளாக ஆக்கி இந்த சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என பல ஆசைகளை தனக்குள் புதைத்துக்கொண்டு கிடைத்த வேலைகளை இதுவரை செய்து வந்தாள் லட்சுமி )


       அழகாக ஆதவன் உதயமாகியது , மயங்கி கிடந்த தன்னுடைய முகத்தில் நீர் துளிகள் வந்து விழுந்ததை உணர்ந்து மெதுவாக விழிகளை திறந்த லட்சுமி வேகமாக எழுந்து பார்க்க ஒரு பக்கம் ஜல்லி இன்னொரு பக்கம் தார் சிமெண்ட் கலவை என்று ரோடு போடும் வேலை தொடங்கி இருந்தார்கள் . தூரத்தில் நின்றிருந்த கான்ட்ராக்டரை பார்த்துவிட்டவள் முந்தானையை இழுத்து பிடித்துக்கொண்டு அவர் அருகே ஓடிச்சென்று மூச்சு வாங்கிய நிலையில் " ஐயா என்னோட பொண்ணு நேத்து இங்க வேலைக்கு வந்தா ஆனா வீட்டுக்கு திரும்ப வரவே இல்லைங்க ஐயா ......" என்று கண்ணீரோடு தலையில் அடித்தப்படி லட்சுமி கேட்க . ஒரு தாயின் அழுகுரல் சத்தத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஒட்டுமொத்த பேரும் அப்படியே நின்றுவிட்டார்கள் மெஷின்களும் நிறுத்தப்பட்டுவிட 

       இதனால் கோபம் அடைந்த கான்ட்ரேக்டர் " ஏன்ம்மா ...காலையிலையே வந்து உயிர எடுக்குற உன்னோட பொண்ணு பேரு என்னம்மா " என்று கோவத்துடன் அவர் கடுப்பாக கேட்க . கவி .... என்னோட பொண்ணு பேர் கவிதா நேத்து ஆசையா நம்ப ஊருக்கு புது ரோடு முதல் தடவ வரபோகுதுன்னு சொல்லிட்டு எல்லாரோட சேர்ந்து இங்க தான் வேலைக்கு வந்தா ஐயா ஆனா இன்னும் என்னோட கவி என்ன பார்க்க வரவே இல்லங்கையா என்று கதறி அழுதுகொண்டே லட்சுமி சொல்லிட . ச்ச ச்ச நிறுத்தும்மா காலங்காத்தாலையே ஏன்ம்மா இப்படி இம்சை பன்ற இதோ பாரு நீ சொல்ற கவிதா ன்னு யாருமே வேலைக்கு நேத்து வரல என்று அனைவரும் கையெழுத்து போட்டு பணம் வாங்கிய ரெஜிஸ்டர் நோட்டை விரித்து லட்சுமியிடம் கோவத்துடனே காட்டினார் .


         பத்தாம் வகுப்பு வரை படித்திருந்த லட்சுமியால் ரெஜிஸ்டரில் எழுதியிருந்த பெயரை படிக்க முடிந்தது வரிசையாக கைவைத்து பார்த்தவளுக்கு பேர் இடியாக இருந்தது அதில் தன் மகளின் பெயர் இல்லை என்பதே . ஏதும் புரியாமல் இதயம் ரணமாக வலித்திட சிலையாக நின்றிருந்தவளின் கையை ஒரு பெண் பிடித்து தள்ளினார் அவ்விடத்தை விட்டு ... மற்றவர்கள் வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள் .

       கவி ....கவி .... கவி.... எங்கம்மா போன உன்னோட லட்சுமி கிட்ட வந்துரும்மா எனக்கு பயமா இருக்கு கவி . இந்த அம்மாவ கஷ்டப்படுத்தாம வந்துரு கவி நான் எதாவது தப்பு பன்னிருந்தா மன்னிச்சிடும்மா இன்னைக்கு உனக்கு பரிட்சை இருக்குன்னு சொன்னியே கவி என்று தரையில் கையை ஊன்றி கதறி அழுது தன் மகளை அழைத்தாள் .ஒரு நாள் ஒருவாரம் ஆனது இரண்டு வாரம் ஆனது கடைசியாக ஒரு மாதமும் ஆனது ரோடும் போட்டு முடித்துவிட்டார்கள் கவியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவே இல்லை ....காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் எந்த பயனும் இல்லாமல் போனது .

தற்போது         

          அந்த இரவில் தன் மகளை தேடி புதிதாக போடப்பட்ட ரோட்டில் சேலையெல்லாம் ஆங்காங்கே கிழிந்து நெற்றியில் காயம் கால்களில் காயம் என அடிப்பட்ட நிலையில் ஒவ்வொரு அடிகளாக எடுத்து வைத்து சென்றவளை எதிரே அனைத்து வேலைகளையும் முடிந்த நிலையில் மீதம் இருந்த ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி அடித்து தூக்கி எறிந்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்றது . லாரி மோதிய வேகத்தில் அந்திரத்தில் வீசப்பட்டு கீழே தூக்கி எறியப்பட்டவள் ரோட்டில் விழுந்துவுடன் தலையில் அடிப்பட்டு இரத்தம் பீறிட்டு ஆறாக ஓடிட கால்கள் திருப்பி கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழக்க ஆரம்பித்தாள் ...

    அச்சமயம் " அம்மா ...... என்னும் கவியின் குரல் ரோட்டில் இருந்து வெளிவர அது லட்சுமியின் இதயத்திற்கு சென்றடைய கண்களை திறக்க முடியாமல் திறக்க எதிரே அறுவமாக தன் அன்பு மகள் கவி(எ) கவிதா நிற்பதை போல் உணர்ந்தாள் லட்சுமி . அம்மா ........என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம் கடைசி வரைக்கும் நம்பளால சந்தோஷமா இருக்க முடியலையேம்மா

         என்னால இப்போ பத்தாம் வகுப்புல முதல் மார்க் எடுக்க முடியாது உனக்கும் பெருமைய தேடி தர இந்த கவியால முடியாது ம்மா என்று தன்மகள் விழி நீரோடு தன்னிடம் பேசுவது போல் ஒரு விதமான உணர்வு லட்சுமியின் இதயத்தில் ஏற்பட்ட அந்த நொடி நீர் துளிகள் கீழே ரோட்டின் மீது பட்ட உடன் அவளின் உயிரும் போய்விட்டது ஏனோ அந்த கண்ணீர் துளிகள் அந்த ரோட்டிற்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த கவியின் மீது பட்டுவிட்டது .

    **************

          ஆசையோடு தன் சால்வையை இடுப்பில் கட்டிக்கொண்டு முகத்தில் வழிந்த வியர்வை துளிகளை ஒரு கையால் துடைத்தப்படி நாளை நடக்கவிருக்கும் பரிட்சைக்காக படித்த பாடத்தை மனதில் அசை போட்டுக்கொண்டே கீழே முட்டிக்கால் போட்டு அமர்ந்து சிமெண்ட் கலவையை கலக்கி வேலை செய்ய ஆரம்பித்தாள் கவி . 

          ரோட் ரோலர் அதன் வேலை செய்ய திடிரென தன்மீது வரிசையாக கூர்மையான ஜல்லி கற்கள் படபடவென வந்து விழ ஆரம்பிக்கவும் ஏதும் புரியாமல் திரும்பிய கவியின் மீது லாரியில் இருந்த மொத்த கற்களும் அவளை மூடியது நொடி பொழுதில் . அதில் இருந்து வெளிவர முடியாமல் மூச்சு தினற ஆரம்பிக்க தொடர்ந்து இரண்டு மூன்று லாரிகளில் வந்து இறங்கிய ஜல்லிகளை அதே இடத்தில் கொட்டினார்கள் கிட்டதட்ட ஆள் உயரத்திற்கும் மேல் கற்கள் நிரம்பியது . கவி என்னும் ஒரு உயிர் துடித்து கொண்டிருப்பதை கவனிக்காமல் அனைத்து வேலைகளும் நடைப்பெற்றது . இதனை ஒருவர் கூட கவனிக்கவில்லை ......

          சிறிது சிறிதாக ஜல்லி கற்கள் குறைய ஆரம்பிக்க அன்றைய வேலை முடியவும் எல்லோரும் கூலியை வாங்கிக்கொண்டு புறப்பட்டு சென்றார்கள் . அப்போது சார் ......என்னும் ஒரு ஆணின் குரல் கேட்க டீ குடித்து கொண்டிருந்த கான்ட்ரேக்டர் வேகமாக ஓடிச்சென்று பார்க்க அங்கே " தலை மட்டும் வெளியே தெரிந்த நிலையில் முகம் எல்லாம் கற்கள் குத்தி கிழித்து இரத்தம் வடிந்த நிலையில் கிடந்தாள் கவி ..கவிதா "

          தலையில் கைவைத்து என்ன செய்வதென்று யோசித்த கான்ட்ரேக்டர் சுற்றியும் முற்றியும் தன் கண்களால் அளந்தவர் கீழே குனிந்து கற்களை தூக்கி எறிந்துவிட்டு கவியின் நாடியை பிடித்து பார்க்க " உயிர் இல்லை " ... அதனை பார்த்து அங்கிருந்த மூவர் பயந்து போய் கான்ட்ரேக்டரிடம் ' சார் ...இப்போ என்ன பன்றது லாரி ட்ரைவருங்க இந்த பொண்ணு இருக்கிறது தெரியாம ஜல்லியை கொட்டிட்டாங்க போல இந்த விசயம் யாருக்காவது முக்கியமா இந்த ஊர் மக்களுக்கு தெரிஞ்சா நம்ப உயிரோட போக முடியாது ' என தன் இதயத்தின் மீது கைவைத்து ஒருவன் பயத்தில் கூறியவன் கைகால்கள் எல்லாம் வெடவெட நடுங்க ..கான்ட்ரேக்டர் உடனடியாக '

         அங்கிருந்த நான்கு பேரை அழைத்து ' சரி நடந்தது நடந்து போச்சு இந்த விசயம் வெளிய தெரிய கூடாது உடனே பாடியை தூக்குங்க என அவசரமாக கையை ஆட்டி சொல்ல மூவரும் ஜல்லி கற்களை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி கவியின் உடலை வெளியே எடுத்தார்கள் . சார் இப்போ என்ன பன்றது என்பது போல் ஒவ்வொருவரின் பார்வையும் இருக்க .... தலையில் கைவைத்து யோசித்தவர் இந்த நடுராத்திரியில வேறெங்காவது பாடியை எடுத்துட்டும் போக முடியாது என சிந்தித்தவர் ஒரு முடிவுடன் 

         " இங்க பாருங்க நான் சொல்றத கேட்டுக்கோங்க ...நம்பளுக்கு எந்த ப்ரச்சணையும் வரக்கூடாது அதுக்கு ஒரே வழி ரோட்டோட ரோடா வச்சி கலவையை போட்டு தார் ஊத்தி புது ரோட போட்றவேண்டியது தான் ஒருத்தனாலையும் கண்டுபிடிக்க முடியாது கொஞ்சம் நாலு இன்ச் ஏத்தி கலவையை போடுங்க கேட்டா ரோடு ஸ்ட்ராங்கா இருக்க போட்டோம் ன்னு எக்ஸ்ட்ரா அமௌண்ட் கூட ட்ரேன்ஸ்வர் பன்ன சொல்லிக்கலாம் என்று கூறி சாதுர்யமாக செயல்பட்டார் கான்ட்ரேக்டர் .....

      அவர் சொன்னபடியே கவியை படுக்கவைத்து அவள் மீது கலவை தார் என அனைத்தும் போட்டு மெஷினால் நிறுவப்பட்டது எக்ஸ்டா வேறு நாலு இன்ச் உயரம் ஏற்றப்பட்டது . கான்ட்ரேக்டர் சரியாக நாடி பிடித்து பார்க்காமல் போகவே " உயிருக்கு போராடிய கவியை உயிரோடு சமாதி கட்டிவிட்டார்கள் அந்த ரோட்டில் " . அதன் பிறகு எதுவும் தங்களுக்கு தெரியாதது போல் அதிகாலை மூன்று மணி அளவில் அனைவரும் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டார்கள் .

   *****************

         தாயின் உயிரும் மகளின் உயிரும் ஒரே ரோட்டில் பிரிந்து போனது . ஆக்ஸிடென்ட் என்று லட்சுமியின் உடலை மயானம் என்னும் நவீன சுடுகாட்டில் சாம்பலாக எறித்துவிட்டார்கள் .


 அடுத்த நாள்


அந்த ஊர் மக்கள் அனைவரும் தங்களுக்கு புது ரோடு கிடைத்த சந்தோஷத்தில் எல்லோரும் தங்கள் பாதங்களை ரோட்டின் மீது வைத்து நடந்து சென்றார்கள் ' இல்லை ' கவியையும் அவளது தாய் லட்சுமியையும் மிதித்து நடந்தார்கள் . அவர்கள் எல்லோரை பொறுத்தவரை கவி எங்கோ சென்றுவிட்டால் தாயை ஏமாற்றிவிட்டு லட்சுமியோ பைத்தியம் ஆகிவிட்டாள் .

யாரின் மனதிலும் லட்சுமி மற்றும் கவி என்கிற இருவர் தங்களுடன் வாழ்ந்த ஒன்றையே மறந்து போய் இருந்தார்கள் .

     இருவரின் உயிரும் வெரும் தூசியை போல் காற்றில் கலந்தது அவர்களுக்கான நியாயம் எப்போது ? யாரால் ? கிடைக்கும் கிடைக்கப்படும் என்பது கேள்விக்குறி ...‌..........? 

         தன்னால் போடப்பட்ட ரோட்டில் (அ) சாலையில்  விதையாகி வாழ்கிறாள் .

     __________முற்றும் __________

        



Rate this content
Log in

Similar tamil story from Crime