பண பலம்
பண பலம்
பண பலம்
சென்னை கமிஷனர் ப்ரகாஷுடன் அவசர ஆலோசனையில் மும்முரமாக இருந்தார் இன்ஸ்பெக்டர் வசந்த்.
"ஒரு வழக்கு கொடுக்கிறேன், இதை தனியா பார்க்கணும், போன ஒரு வாரத்தில் மட்டும் 10 கோடி ரூபா காசு திருடு போயிருக்கு. பெரிய இடத்து சமாச்சாரம் அதனால யூனிபோர்ம்ல போகாதீங்க, கம்பிளைன்ட் எதுவும் கொடுக்கலை".
"எங்கே திருட்டு நடந்திருக்கு சார்?".
"இரண்டு வாரம் முன்னாடி சினிமா கலை நிகழ்ச்சிக்காக ஒரு கூட்டம் மலேஷியா போனாங்க. அந்த நிகழ்ச்சி தயாரிக்கறது ௩ தயாரிப்பு கம்பெனி. அவங்க ஊருக்கு போன அந்த நாள் அவங்க வீட்ல கோடி கணக்குல பணம் திருடி இருக்காங்க. எல்லாமே கருப்பு பணம் அதனால வழக்கு ஏதும் கொடுக்காம பார்க்க சொல்லி இருக்காங்க. இதை எப்படியாவது கண்டுபிடிச்சு தர வேண்டியது உங்க பொறுப்பு. வெளியே விஷயம் தெரியவே கூடாது, புரியுதா?".
"புரியுது சார், விவரம் கொடுங்க நான் வேலையை ஆரம்பிக்கறேன்".
பிரகாஷ், திருட்டு வழக்கை பத்தின விஷயம் இந்த கவர் உள்ளே இருக்கு, நேர்ல போய் பாரு சீக்கிரம் முடிக்கணும்.
வசந்த் வழக்கை பற்றின விவரங்களை மொத்தமும் படித்துவிட்டு வேலையில் இறங்கினான்.
முதல் வழக்கு, தயாரிப்பாளர் கண்ணப்பன். கண்ணன் film productions .அவரை விசாரிக்க அவர் வீடு சென்றான். பெரிய வீடு ஆனால் கொஞ்சம் பழைய வீடு தான். 10 வருஷமாவது பழசா இருக்கும்.
"சார் நான் இன்ஸ்பெக்டர் வசந்த், கமிஷனர் சார் அனுப்பினார் திருட்டு கேஸ் விஷயமா".
"அப்பாடா எங்கே யூனிபோர்ம் போட்டு வருவீங்களோன்னு பயந்தேன், வாங்க இங்கே வந்து பாருங்க என் அலமாரியை".
அலமாரியை திறந்து காட்டுகிறார், லாக்கர் மொத்தம் உடைக்க பட்டு இருந்தது.
"உங்க வீட்ல திருடினது ஒரு கோடி தானே?"
"ஆமாம் அடுத்த படத்துக்கு ஹீரோக்கு அட்வான்ஸ் கொடுக்க வெச்சிருந்தேன்"
"காசா தான் தருவீங்களா, பேங்க்ல போட மாடீங்களா?"
"இல்லை அந்த ஹீரோக்கு ஏதோ வரி பிரச்சனை அதான் காசா கேட்டிருந்தார் எடுத்து வெச்சிருந்தேன்"
"யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா?"
"எல்லார் மேலயும் சந்தேகம் இருக்கு, யாரைன்னு சொல்றது புரியலை. இப்போ தான் ஏன்டா தயாரிப்பாளர் ஆணோம்னு இருக்கு. ஒழுங்கா என் விவசாயமே பார்த்திருக்கலாம்"
"சொந்த காரங்க யாராவது எடுத்திருப்பாங்க சொல்றீங்களா?"
"ஆமாம், திடீர்னு பணக்காரன் ஆகிட்டேனு வயித்தெரிச்சல். நடிகர் தாஸ் அவர் தான் எனக்கு வாழ்க்கை பிச்சை போட்டது, நிலத்தை வித்து அவர் படம் எடுத்தேன் ரொம்ப பெரிய லாபம், அதுலேந்து தொடர்ந்து 5 படம் பண்ணிட்டேன் நடிகர் பரத், விஷ்வா, பாண்டி & ராகவ் எல்லார் படமும் ஹிட் ஏதோ பொழப்பு நல்லாதான் போயிட்டு இருந்துச்சு, இப்போ இந்த திருட்டு சம்பவம் ரொம்ப மன உளைச்சல் ஆகிருச்சு.மானம் போனா கூட கவலை படமாட்டேன் பணம் போச்சே!! இப்படி வசதியா ஒரு வாழ்க்கை வாழ்வேன்னு கூட நினைக்கலை எல்லாம் பணம் வந்த நேரம், என் சொந்தக்காரன் விபரம் எல்லாம் தரேன் எல்லாரையும் விசாரிங்க எவனையும் விடாதீங்க".
அவரிடம் விபரம் வாங்கிவிட்டு அவர் சொந்தக்காரன், நண்பர்கள் என்று எல்லோரையும் விசாரித்தும் ஒரு பயன் இல்லை, யார் மேலும் பெரிதாக சந்தேகம் வரவில்லை. இதை பார்ப்பதற்கே ஒரு மாதம் ஓடி விட்டது.
இதை சற்று ஓரம் வைத்துவிட்டு, அடுத்த வழக்கை கையில் எடுத்தான் வசந்த்.
இரண்டாம் வழக்கு, தயாரிப்பாளர் பீம் மேனன், Kairali films Private Limited அவர் வீடு சிறியதாக இருந்தாலும் நல்ல வசதியுடன் இருந்தது.
"கமிஷனர் சொன்னாரு நீங்க வருவீங்கன்னு, இவ்வளவு பெரிய தொகை திருடு போகும் நினைக்கலை, எப்போவும் சென்னைல காசு வைக்கவே மாட்டேன். நான் கேரளா, அங்கே தான் படம் எடுத்தேன், ஒரு மாற்றத்துக்கு தமிழ் படமும் எடுக்கலாம்னு இங்க வந்தேன் எல்லாம் காசு சம்பாதிக்கிற ஆசை தான் கேரளா விட இங்கே லாபம் அதிகமா கிடைக்குமே என்கிற நப்பாசை தான், இது வரை 10 படம் எடுத்திருக்கேன், தமிழ் படத்தில் நினைச்ச மாதிரி நல்ல லாபம் பார்க்க முடிஞ்சது, எடுத்த 10 படமும் மலையாள ரீமேக் தான்".
"மலேஷியா கலை நிகழ்ச்சிக்கு நான் தான் தயாரிப்பாளர் அதிக ஷேர் என்னுது 12 கோடி செலவு பண்ணேன். மீதி இரண்டு தயாரிப்பாளர் பெருசா செலவு பண்ணாம என் தலையிலே மிளகாய் அரைக்கிற மாதிரி தோணிச்சு அதனால 5 கோடி இங்கே வீட்ல வெச்சிட்டு மலேஷியா போயிட்டேன்.திரும்ப வந்து பார்த்தா அலமாரி உடைஞ்சிருக்கு, பணம் காணோம். வேற எந்த பொருளும் இங்க வைக்க மாட்டேன் எல்லாமே என் ஊர்ல தான் பாதுகாப்பா இருக்கும். அன்னிக்கு அவசரத்துக்கு இங்கே இருக்கட்டுமேன்னு வைத்தேன் திருடி இருக்காங்க".
வசந்த் குழம்பியபடி, "இங்க பணம் வெச்சது வேற யாருக்காவது தெரியுமா? இங்கே வேற யாராவது தங்குவாங்களா?."
"ஒரு சின்ன பையன் மட்டும் இடத்தை பார்த்துக்க இருப்பான் அவனும் நான் வரும்போது மட்டும் தான் வருவான். அன்னிக்கு அவனும் இல்லை, இங்கு வேற யாரையும் தெரியாது பெருசா எனக்கு, இதான் எனக்கு ஆபீஸ் & வீடு. சென்னைக்கு படம் வேலையா வந்தா இங்கே தான் தங்குவேன்".
"எங்கேயும் கேமரா இல்லையா?"
"சின்ன இடம் தானேனு நான் ஏதும் கேமரா வாங்கி போடலை.என் தப்பு தான்".
"அந்த பையன் எடுத்திருக்க வாய்ப்பு இருக்குமோ?" வசந்த் சந்தேகித்தான்.
"தெரியலை, ஒரு தள்ளற பெட்டி தான் எடுத்துட்டு வருவேன் எப்போதும், அதுல பணம் இருக்குன்னு தெரிய வாய்ப்பு இல்லை, அலமாரி சாவி எப்போதும் என்கிட்டே தான் இருக்கும்"
"சரி, அந்த பையனை விசாரிக்கறேன் அப்புறம் தகவல் சொல்றேன்".
"சீக்கிரம் சொல்லுங்க ஒன்னு இல்ல, இரண்டு இல்லை 5 கோடி, கருப்பு பணம் படம் எடுத்து வெள்ளை பணமா ஆக்கலாம் இருந்தேன். எல்லாம் போச்சு"
அந்த பையனை விசாரித்ததில் அவனுக்கு ஏதும் விவரம் தெரியவில்லை இவர் பெட்டியோடு வந்ததை அந்த மலேஷியா கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் மட்டும் கூறியதாக தெரிந்தது.
மூன்றாவது வழக்கு, தயாரிப்பாளர் பாரி வேந்தன், 4 Star Studios அவர் ஆபீஸ்ல் அவர் மச்சான் மாரி தான் இருந்தார்.
"யோவ் போலீஸ், எப்போ சொன்னோம் எப்போ வரீங்க? அதுக்குள்ள மத்த பணத்தையும் அடிச்சிருவாங்க போல இருக்கே".
"சார் கோவப்படாதீங்க, வேற அவசர வேலை இருந்துச்சு".
"நான் ஆளுங்கட்சி மினிஸ்டர் பினாமி,அவர் காசை எவனோ அடிச்சிட்டான்னு அவருக்கு தெரிஞ்சா நிலைமையே வேற".
"கண்டு பிடிச்சிரலாம் எனக்கு சில தகவல் மட்டும் சொல்லுங்க போதும்".
"என்ன வேணும் கேளு".
"பணம் 4 கோடி திருடினதா சொல்லிருக்காங்க, ஆபீஸ்ல கேமரா ஏதும் இல்லையா".
"அதான் சொன்னேனே, நான் மினிஸ்டர் பினாமி எங்கேயும் கேமரா வெச்சு எங்களையே காட்டி கொடுக்கவா. அடிக்கடி பணம் வரும் அதை வைத்து படம் எடுத்து வெள்ளை பணமா ஆக்குவோம். 20 வருஷமா இதை தான் பண்றோம். போன ஆட்சி நடந்தப்போ சில படம் சரியாய் போகாம நஷ்டமா போச்சு, சில படம் எடுக்கவே விடலை ஆளுங்கட்சி காரன். இப்போ நாங்க தான் ஆளுங்கட்சி அடுத்த தேர்தல் வர இன்னும் சில மாசம் தான் இருக்கு அதுக்குள்ள காசை கண்டுபிடிச்சியாகணும்".மாறி பேச்சிலேயே கோவம் கொப்பளித்தது.
"உங்க கூட்டமே நிறைய பேரு இருக்கும்போது எப்படி காசு எடுத்தாங்க, காசு ஆபீஸ்ல வெச்சிருந்தால் யாராவது இருந்திருக்கணும் இல்லையா".
"நான் தான் இருந்தேன் ராத்திரி 11 மணி வரைக்கும், பக்கத்துல நமிதா படம் ஷூட்டிங் ராத்திரி 12 மணிக்கு சொன்னாங்க அதை பார்க்க போயிட்டு வந்தேன் போற அவசரத்துல சரியாய் பூட்டிட்டு போகலை, கொஞ்சம் அசந்த நேரத்தில திருடிட்டாங்க. யாருன்னு கண்டுபிடிச்சி என்கிட்டே கொடுங்க நாங்க பார்த்துகிறோம் அவனை".
வசந்த் அவன் கூட்டாளிகள் முதற்கொண்டு அனைவரையும் விசாரித்தான், பெரிதாக ஒன்றும் துப்பு கிடைக்கவில்லை.
மூன்று வழக்குகளையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தான்.
கமிஷனர் அழைத்தார்....
"என்ன வசந்த், கேஸ் விஷயமா அப்புறம் ஒரு தகவலும் இல்லை".
"விசாரிச்சிட்டு இருக்கேன் சார்"
"இன்னுமா, 4 மாசம் ஆக போகுது"
"இது வரை விசாரணை பண்ணது மட்டுமே 40 ஆட்கள் மேல அதான் கொஞ்சம் நேரமாகுது".
"சீக்கிரம் முடிங்க".
தான் சந்தேகிக்கும் ஒரு விஷயத்தை கமிஷனரிடம் சொல்லாமலே இருந்தான் அது உறுதியான பிறகு சொல்லலாம் என்ற எண்ணம்.
அவன் கணக்கு சரியாக இருந்தால் இன்னும் ஒன்று அல்லது இரண்டு தயாரிப்பாளர் வீட்டில் திருட்டு நடக்கும் என்று முடிவு பண்ணி இருந்தான் அந்த இரு தயாரிப்பாளர்களையும் கண்காணித்து கொண்டிருந்தான்.
ஒருவர் RV பிலிம்ஸ் வர்மா, அவர் ஷூட்டிங் வேலையாக வெளியூர் செல்ல தயாரானார், வீட்டில் யாரும் இல்லை நன்கு பூட்டிவிட்டு காமெராவை பார்த்துவிட்டு அவர் கிளம்பி போன சில மணி நேரத்தில் நடு இரவு இருக்கும் ஒரு இரு சக்கர வண்டி வந்து நின்றது தூரத்தில் ஒளிந்திருந்து வசந்த் பார்த்து கொண்டிருந்தான்.
வண்டியை மரத்திற்கு அடியில் நிறுத்திவிட்டு சுவர் ஏறி குதித்தார்கள், கையில் சவரம் செய்யும் கிரீம் எடுத்து வாசல் காமெராவை மறைத்தார்கள், பால்கனி பக்கம் ஏறி மாடி கண்ணாடி கதவை அழகாக உடைத்து உள்ளே சென்றனர். ஒரு மணி நேரம் ஆனது கையில் ஒரு பெரிய பையுடன் வெளியே வந்தனர்.
வண்டியில் உட்கார்ந்தவுடன் வசந்த் பின்னால் இருப்பவனை அமுக்கி பிடித்தான், அவன் பையோடு கீழே விழுந்தான் இன்னொருவன் வண்டியோடு தப்பிக்க முயல வண்டி பெரிதாக நகரவில்லை இரண்டு டைர் காற்று பிடுங்கியிருந்தது. இன்னொருவனை அந்த பக்கமிருந்து ஒருவன் வந்து மடக்கி பிடித்தான்.இருவரையும் ஒரு இருட்டு அறையில் பூட்டி வைத்தான் வசந்த்.
அடுத்த நாள்.....
நடிகர் தாஸை நேரில் பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்தான். இன்று நடிகர் தாஸ் நடித்த "என் உரிமை" புது படம் ரிலீஸ், திரையரங்கம் எங்கும் விழா கோலமாக காட்சியளித்தது கடந்த நான்கு படம் சரியாக போகாததால் அவரின் வளர்ச்சி இறங்கியது. இந்த படம் மீண்டும் அவருக்கு கை கொடுக்கும் என்று நம்பிக்கையுடன் ரசிகர்கள் ஆரவாரத்தில் இருந்தனர்.
இரண்டு நாள் கழித்தே நடிகர் தாஸை பார்க்க முடிந்தது.
"சொல்லுங்க இன்ஸ்பெக்டர் என்ன உதவி வேணும் உங்களுக்கு?"
"உங்க கூட தனியா பேசணும்".
தாஸ் சுற்றி உள்ளவரை பார்க்க....அனைவரும் வெளியே சென்றனர்..." சொல்லுங்க"
"சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் வீட்டு திருட்டு வழக்குக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இருக்குனு எனக்கு தெரியும்".
தாஸ் சிரித்தபடி, "ஒருத்தன் பெரிய மனுஷன் ஆனா பிடிக்காதே ஏதாவது வழக்கு சொல்லி சம்பந்தம் இருக்கு சொல்வீங்களே".
"உங்க ஆள் இரண்டு பேரும் என் பாதுகாப்புல இருக்காங்க. உண்மையை சொல்லிட்டாங்க".
தாஸ் சிறிது நேரம் மௌனம், "யாரோ இரண்டு பேரு பிடிச்சிட்டு என் பெயர் சொன்னா நான் குற்றவாளி ஆகிடுவேனா?.எனக்கு கோடி கணக்குல ரசிகர் இருக்காங்க என் பெயர் சொல்றது வைத்து நான் குற்றவாளி ஆக முடியாது. எதை வெச்சு நான் குற்றவாளி சொல்ற?"
"திருடப்பட்ட மூன்று தயாரிப்பாளருக்கும் நீங்க படம் பண்ணிருக்கீங்க அதுல நல்லா சம்பாதிச்சிருக்காங்க அவங்க, ஆனால் சமீபமா உங்க படம் சரியாய் ஓடலை உங்க மார்க்கெட் இறங்கிருச்சு. இதே தயரிப்பாளர் மூலம் மறுபடியும் படம் பண்ண நினைசீங்க ஆனால் அவங்க யாரும் முன் வரலை.அரசியலுக்கு போகணும்னு ஆர்வம் வேற இருந்துச்சு, உங்களுக்கு எல்லா கட்சியும் அழைப்பு வேற விட்டாங்க, ஆனால் படம் சரியாய் போகாம உங்க நல்ல பெயர் இறங்க, எல்லோரும் உங்களை விட்டுட்டு போயிட்டாங்க. எப்படியாவது மேல வரணும் நீங்களே ஒரு தயாரிப்பாளர் கம்பெனி ஆரம்பிச்சு ஒரு பினாமி மூலம் தயாரிச்சு இப்போ ஒரு படம் வெளியிட்டிருக்கீங்க. இந்த படம் எடுத்தது எல்லாமே அந்த திருட்டு காசுல, இன்னும் பணம் தேவை பட்டிருக்கு அடுத்த தயாரிப்பாளரை குறி வெச்சிருக்கீங்க ஆனால் மாட்டிகிட்டாங்க. வெளிய நல்லவன் மாதிரி வேஷம் போடறீங்க" வசந்த் முடித்தான்.
தாஸ் சில நேரம் மௌனம்....சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தண்ணீர் குடிக்கிறார், "உங்க திறமையை பாரட்டறேன், யாரும் கண்டு பிடிக்க முடியாது நினைச்சேன் தமிழ் நாடு போலீஸ் திறமையானவங்கன்னு நிரூபிச்சிடீங்க. ஆமாம் நான் தான் செஞ்சேன், என் படம் ஓடி தான் அந்த தயாரிப்பாளருக்கு வாழ்க்கையே கிடைச்சது என்னால தான் முன்னுக்கு வந்தாங்க, தொடர்ந்து படம் நல்லா ஓடிச்சு, மக்கள் செல்வாக்கு ஜாஸ்தி ஆச்சு, கோடி கணக்குல சம்பளம் கொடுத்தாங்க. ஒரு படம் ஓடலை அப்படியே வாழ்க்கை தலைகீழா மாறிச்சு. கோடி கணக்குல காசு பார்த்த அப்புறம் கம்மி சம்பளம் வாங்க மனசு ஏத்துகலை. பணம் பணம் பணம் இதை இறங்க விட்டோம்னா நம்மளை தூக்கி எரிஞ்சிருவாங்க. பணம் தான் முக்கியம் அது இருந்தா என்ன வேணா பண்ணலாம். ஒரு புது இயக்குனர் நல்ல கதையோட வந்தான் அந்த கதை நடிச்சா மறுபடியும் விட்ட இடத்துக்கு வர முடியும் தோணிச்சு, பல தயாரிப்பாளர் போய் கேட்டு பார்த்தேன் யாரும் முன் வரலை. அதான் நானே ஒரு கம்பெனி ஆரம்பிச்சு என்னை ஏமாற்றின, என்னால பெரிய அந்தஸ்துக்கு வந்த தயாரிப்பாளர் எல்லார்கிட்டேந்தும் என்னால சம்பாதிச்ச பணத்தை திருடினேன். புது படம் எடுத்தேன் இப்போ ரிலீஸ் ஆகிருச்சு நல்ல பெயர் கிடைச்சிருக்கு, விட்ட இடத்தை மறுபடியும் பிடிச்சிருவேன். அடுத்து தனி கட்சி ஆரம்பிக்க இருக்கேன்".
"உங்களை விட்டாதானே கட்சி ஆரம்பிப்பீங்க".
"நீ யாரு என்னை தடுக்க. உன்கிட்ட வாரண்ட் இருக்கா?"
"இல்லை"
"முதல்ல அதை வாங்கிட்டு வாங்க அப்புறம் பேசலாம்.பணம் பாதாளம் வரை பாயும் தம்பி!!"
"உங்க பணத்துல யாரையும் விலைக்கு வாங்க முடியாது".
வெளியே வந்து கமிஷ்னரை அழைத்தான்....நடந்தவற்றை கூறினான்....
"முட்டாள் உன்னை யாரு அவரை பார்க்க போக சொன்னா?"
"சந்தேகத்தில் தான் வந்தேன் அவன் உண்மையா ஒத்துக்கிட்டான். நீங்க உடனே ஆர்டர் கொடுங்க நான் கைது பண்றேன் சார்".
"இது பெரிய இடத்து சமாச்சாரம்னு ஏற்கனவே சொன்னேன் இப்படி பொறுப்பு இல்லாம நடந்துக்கிறீங்க, கைது பண்ண அந்த இரண்டு பேரையும் உடனே பக்கத்து ஸ்டேஷன் லாக் அப்ல வைங்க.உடனே என்னை வந்து பாருங்க வாரண்ட் தயார் பண்ணி தரேன்" கமிஷனர் கடுப்பில் பேசி வைத்து புரிந்தது.
வசந்த் கூறிய இடத்திற்கு இரண்டு கான்ஸ்டபிள் அனுப்பினார் கமிஷனர். அவர்களை பத்திரமாக அவர்களிடம் ஒப்படைத்தான்.
அடுத்த 2 மணி நேரத்தில் கமிஷனரை சென்று பார்த்தான்.....
"உங்களோட அவசரத்தினால் என்ன ஆச்சு பார்த்தீங்களா?"
"என்னாச்சு புரியலை நீங்க சொல்றது"
"அந்த இரண்டு பேரும் செத்துட்டாங்க, கான்ஸ்டபிள் அடிச்சு போட்டு கொன்னுட்டாங்க".
"சார் என்ன சொல்றீங்க?"
"ஒரு அந்தஸ்து மிக்க ஆள்கிட்ட போய் இப்படி சொன்னா இதை தான் செய்வான். இப்படி கோட்டை விட்டுடீங்க. போங்க....நான் இப்போ என்ன பதில் சொல்றது தெரியலை".
மனம் உடைந்து போனான் வசந்த், வண்டியில் போகும்போது அவன் மனம் அதையே நினைத்து கொண்டிருந்தது எங்கோ தப்பு நடந்திருக்கு என்று நினைக்கையில் ஒரு கார் வேகமாக வந்து அவனை இடித்தது.......
நான்கு முறை வண்டியோடு உருண்டு கீழே விழுந்தான்.....உடல் எங்கும் ரத்தம் வழிந்தோடியது....மூச்சு விட சிரமம் ஆனது....
காரிலுருந்து ஒருவன் இறங்கி வந்தான் வசந்த் காதில் தொலைபேசியை வைத்தான்....அதில் ....
"தம்பி நான் தான் சொன்னேனே பணம் பாதாளம் வரைக்கும் பாயும்னு, உங்க கமிஷனருக்கு பாயாதா என்ன? போகிறதுக்கு முன்னாடி கேட்டுக்கோங்க, என் புது படம் 100 கோடி மேல வசூல் ஆகியிருக்கு விட்ட இடத்தை பிடிச்சிட்டேன், கண்டிப்பா கட்சி ஆரம்பிப்பேன் மக்களுக்கு நல்லது செய்யுற மாதிரி இன்னும் பணம் சம்பாரிப்பேன், பணம் தான் எனக்கு முக்கியம்!!போங்க மேல போய் சௌக்கியமா இருங்க..."
இதை கேட்ட நொடியில் அவன் தலையில் அடி விழ அவன் மூச்சு சிறிது நேரத்தில் நின்றது.
பணம் பாதாளம் வரை பாய்ந்தது!!
