நடுநிசியில்...
நடுநிசியில்...
இருளில்,நிலவின் ஒளியில், எண்ணற்ற எண்ணங்கள்; பலவகை உணர்வுகள்... உன் சிந்தனைகள், உன் புன்னகைகள், எல்லாமே என் பார்வையில் படமாக, மனதில் மயக்கம் கொள்கிறேன்! அறிவில் அச்சமும் காண்கிறேன்! புரியாத கணக்குகள் இதயத்தை குழப்ப, உந்தன் காதல் புரியவைக்கின்றது! எந்தன் ஐம்புலன்களும் ஐயம் கொள்கின்றது, அவற்றை உன்னிடம் நான் தொலைத்து விடுவேனோ என்று! என் எழுத்துக்கள் அத்தனையும் என் எதிரியாக, உன் பாசங்கள் எனக்கு ஆறுதலாய் வருகின்றது!
என் கண்ணீர் வெட்கமும் தெளிக்கின்றது, என் சிரிப்பு பொய்யும் தூவுகிறது! கடல் அலையின் நுரை என என்னை நீயும் தீண்டி ஒளிந்தே கொள்கிறாய்! வானம் தாண்டி வந்த விண்மீனாய் தொலைவில் தெரிகிறாய்! கோடைகால இளநீர் போல், தாகம் தீர்கிறாய்! குளிரில் அனலாய், மழையில் குடையாய், இரவில் கனவாய் நீயே வருகிறாய்!!! கண்கள் கேட்டுக் கொல்லும் கேள்விகளுக்கு, கண்ணீர் விடைகூற, தலையனையும் தலை சாய்க்கிறது! வண்டுகளின் ரீங்காரமாய், உன் ஒருவனின் சத்தம் தலைக்குள் யுத்தம் நடத்த, நடுநிசியில் மட்டும் சாந்தி இழக்கின்றேன்!
கண்களில் கலவரம் நடக்க, காதல் குழம்பட்டும், நம் இருவரில் யாரிடம் வயப்படுவது என்று? ஒரு நொடியில் மணமாற்றங்கள் லட்சம் நடக்கிறதே! வண்ணங்களின் வகைகளை, மனதிற்கு மழை புரியவைக்கின்றது! இரவில் தனியே நான் கழிக்கும் நேரங்கள் சேமித்து, உன்னோடு நான் இருக்கும் நேரங்களில் செலவழிக்க வரம் வேண்டுகிறேன்! நடவாது என தெரிந்தும், தேவையில்லா அசைகளுடன் நீயும் வருவதேனடா? மாலை நேர தேனீரில், உன்னை கலந்தது யாரடா? கோடி மழைத்துளிகள் உன்னுடன் நான் நனைய, என் கற்பனைகள் கரையுதடா!!!
இத்தனை யோசனைகளும் சற்றே தெளிவடையட்டுமே, இவை எல்லாம் என் கனவுகளே என்று! மதியின் ஒளியில், மதி பெருக, என் இதயமும் கண்ணாடியானது! கோடி கதைகள் கண்ணை சுழற்ற, நித்தம் நித்திரை இழக்கின்றேன்! மாய உலகின் நடுக்கடலில் தனியே தத்தளிக்கின்றேன்! சொப்பனம் என தெரிந்தும் அதில் சொர்க்கம் காண்கிறேன்... இருதயத்தின் கவிதைகளை மூளை மறந்து விட, அதிகாலையில் இரண்டும் அடித்துக்கொண்டது யார் மீது தவறென்று! அந்த ஆதவனும் அந்தி பிறையும், நகைக்கின்றது என் நிலையை கண்டு... கதிரவன் பார்க்கையில் ஞானியாய், புவி சுழல பித்தனாய் மாறுகிறேன் தினந்தினம்! இத்தனை கதைகளும் , காலையில் பாயுடன் சுருடப்பட்டு, தொடர்கதையாகிறது!