கருணைக் கடல்
கருணைக் கடல்
படைப்பின் ஒவ்வொரு அங்கமும்
பரிபூரணத்துவத்தோடு
மிளிர்கின்றது...குறைபாடுகள்
என்று நாம் சொல்கின்ற
அனைத்தும் உட்பட...
மனித கண்களுக்கும்
அதன் அறிவுக்கும்
ஆற்றலுக்கும்
அப்பாற்பட்ட
கண்களையும்
அறிவையும்
ஆற்றலையும்
இயற்கை அன்னை
தனதகத்தே
வைத்து
காலமெனும் பேழைக்குள்
கணக்கின்றி விளையாடுகிறாள்...செய்யும்
கணக்கறிந்து!
செயற்கைகள் மார்தட்டிக் கொண்டாலும்
இயற்கை அளிக்கும்
பிராணனை அவள் இன்றி
யார் அளிக்க முடியும்
இப்பேருலகில்...பிரபஞ்ச வெளியில்!
சப்தமின்றி நடக்கும்
அவளின் சுவாசம் தான்
பிரபஞ்ச இயக்கம் என்பது
நம்மில் எத்தனை பேருக்குத்
தெரியும்?!
அணுவுக்கும் முந்தைய நிலையில்
காண்பன
கண்ணுக்கு காணாதவன என அனைத்தும்
உயிர்ப்பில் நடமாடுவது
அவள் அளித்த
கருணையன்றோ !
ஆறறிவே முழுமை பெறாத
மனித மனம்
அனைத்துக்கும் மூலமான
பேரறிவை பகைத்து
அகந்தை கொள்வது
எத்தகைய மடமை?!
மேகங்கள் நகர்வதும்
மலைகள் தவம் செய்வதும்
கடல் அலைகள் ஓயாது
ஆர்ப்பரிப்பதும்
சூரிய சந்திர நட்சத்திரங்கள்
ஒளிர்வதும்
மலர்கள் மலர்வதும்
மனிதம் பிறப்பதும்
சுவாசம் நடப்பதும்
இதயம் துடிப்பதும்
ரத்தம் காற்று நெருப்பு இவற்றோடு
நிலமும் வான் தத்துவமும்
உடலில் தழைக்க நிலைக்க
பின் தளர மெல்ல
ஓய்வெடுக்க வைப்பது
எது? எதனால்?!
எல்லா இயக்கங்களுக்கும்
பின்னே அமைதியாக
ஆர்பாட்டமின்றி
அனைத்தையும் இயக்குவிக்கும்
ஆற்றல் களம் எங்கே? எப்படி?!
என்னிலும் உன்னிலும்
ஒளிர்கின்ற
பரா...சக்தியை
மூச்சுள்ள மட்டும்
போற்றிடுவோம்... காத்திடுவாள்
காலத்திற்கும் நம்
கருணைக் கடலாய் !
