பறப்போமா...
பறப்போமா...
மேகங்களுக்கு மேலே
பறவையாக நானும்...என்னுடன்
சக பயணிகளும்...
காற்றில் மிதந்தபடி
வானுயர உச்சியில்
பூமியின் கால் சுற்றளவு
பரப்பு
என் கண்ணெதிரில் தெரிந்தபடி...
ஜன்னலோர இருக்கை
எமக்கு வரம் அளித்துக்
கொண்டிருந்தது அந்த
கண்கொள்ளாக்
காட்சியைக் காண...
பறவைகள் கூட
இரை தேடித்
பல்லாயிரம் மைல் கல்
பயணிக்கும்...
வறுத்தெடுக்கும்
சூரிய ஒளியோ...
குளிர் உணர்த்தும்
சந்திர ஒளியோ ...
புழுதி பறக்கும்
காற்றோ ...தென்றலோ...
மழையோ... புயலோ...
ஆங்காங்கே அவர்களையும்
பதம் பார்க்க காத்திருக்கும்
மற்றொரு பறவை இனமோ...
இத்தனையும் தாண்டி
உணவு வேண்டி
பூமிக்குத் தான் திரும்பணும்...
எங்களுக்கோ ...
குளிர் சாதனை அறை ...
சாய்ந்து கொள்ள நாற்காலி...
போர்த்திக்கொள்ள போர்வை...
தலைக்கு தலைகாணி...
படிக்கப் பார்க்க...
புத்தகமும் காணொளியும்...
ப்ளூடூத் வழியே
இளையராஜாவின் இன்னிசை...
பரிமாற சேவை செய்ய
பணியாட்கள்...
இருந்த இடத்திலேயே
சுடச் சுட உணவு...குடிநீர்...
தேநீர்...பழரசம்...
இன்னும் என்ன வேணும்
இத்தகு பாக்கியத்தைப் பெற !
மலைகளின் முகடுகளையும்...அதன் தொடர்ச்சிகளையும்...
ஆறுகளின் நீள அகல அழகையும்...
பரந்து விரிந்த பூமியின் நிலப்பரப்பையும்...
மின்மினிப் பூச்சிகள் போலத்
தென்படும் மனிதர் தம் வீடுகளும்...
கடல் பரப்பும்...
ஏரிகள் இருப்பும்...
பாலைவனங்களும்...
பசுமைக் காடுகளும்...
வளைந்து நெளிந்து செல்லும்
மண்பாதைகளும்...
அனைத்துக்கும் மேலாய்
நுரைத்துத் ததும்பும்
மேகக் கூட்டங்களும்...
அவற்றினூடே கிழித்துச் செல்லும்
எங்கள் விமானமும்...
காலத்தில் இலக்கைக் நோக்கி
இறக்கை விரித்து
முன்னோக்கிப்
பயணித்துக் கொண்டிருக்க...
நெஞ்சம்
நன்றியில் உறைந்து
கண்கள் பனித்து
இறைவனுக்கு காணிக்கை ஆக்கியது !
இந்த அற்புதப் பேற்றை
அளித்தமைக்காக !
