வேப்பம்பூவின் வாசம்
வேப்பம்பூவின் வாசம்
வெயில் சுட்டெரிக்கின்றது. அதே சமயத்தில் எங்கள் வீட்டின் அருகில் உள்ள வேப்பமரத்தில் பூத்துக் குலுங்கும் வேப்பம்பூவின் வாசம் காற்றில் நிறைந்து மனதினை தொடுகின்றது.
சின்னஞ்சிறு வயதில் மனதில் நிற்கும் சில நினைவுகளில் இந்த வேப்பம்பூவின் வாசமும் ஒன்று. இரவினில் விடாமல் ஒலிக்கும் சின்னஞ்சிறு பூச்சிகளின் சில்லென்ற சத்தத்தில் ஒரு லயத்தினை உணர்ந்த போது இயற்கையின் மாறுபட்ட உருவங்களும் மனக்கண்களில் நிழலாடின.
வீட்டின் அருகினில் வேப்பமரம் இருந்த வரை நாங்கள் மகிழ்ச்சியாகவே இருந்தோம். கண்களுக்குத் தெரியாத ஒரு பாதுகாப்பு வலயத்தினை அது தந்தது. காற்றில் பரவியிருக்கும் வேம்பின் வாசனை நோய் எதிர்ப்பு சக்தியினைத் தந்தது.
வேப்ப மரத்திலிருந்து உதிரும் வேம்பு மலர்கள் மரத்தினை சுற்றிப் படர்ந்து மென்மையான படுக்கையினை அமைத்திருந்தது இந்த இயற்கையின் கலைத்திறமையினை எனக்கு சொல்லியது.
வேப்பம்பூக்கள் சின்னஞ்சிறு காய்களாக உருமாறி மஞ்சள் நிறம் கொண்ட பழங்களாக மாறும்போது கிளிகளும் காக்கைகளும் அவற்றை உண்ண வரும். மரத்தின் கீழ் விழும் பழங்களை பொறுக்கி எடுத்து அதை காயவைத்து விதைகளை எண்ணெய் எடுக்கவும் பயன்படுத்துவார்கள்.
மறுபடியும் எனக்கு வேப்பம்பூவின் வாசம் என் இளமைக்கால நினைவுகளையும் அதனுடன் ஐயா என்று அழைத்த என் அப்பாவின் நினைவுகளையும் ஒன்று சேர்ந்து கொண்டு வந்ததில் எனக்கு எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.
பள்ளியில் படிக்கும் போது மதிய உணவினை வேப்ப மரத்தின் நிழலில் அமர்ந்து தான் உணவினை உண்போம். வரிசையாக நிற்கும் வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிட இடம் தேடிய காலங்கள் நினைவிற்கு வருகிறது.
சாப்பிட்டு முடித்தவுடன் வகுப்பிற்கு செல்லாமல் அங்கு அமர்ந்து மற்றவர்களை வேடிக்கை பார்த்ததும் நினைவில் இருக்கிறது. காலையில் பொது பிராத்தனைக்காக கூடியிருக்கும் போது மரத்தின் உச்சியிலிருந்து விடாமல் கேட்கும் பருந்தின் குரலும் கேட்கிறது.