வசீகரன்
வசீகரன்
வசீகரன்
அன்று வெள்ளிக்கிழமை வேலை முடிய நடுநிசி ஆகிவிட்டது குருவிற்கு, தன் முதலாளியை திட்டிக்கொண்டே வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினான். அவன் வீடு நல்ல சொகுசு பங்களா வீட்டு பகுதியில் உள்ளது. அவன் வீட்டை நெருங்கும் நேரம் நல்ல காற்று, மழை பெய்யும் அறிகுறியுடன் எங்கும் ஆள் நடமாட்டம் இல்லை. தெருவிளக்குகள் மட்டும் மின்னிக்கொண்டிருந்தன, காரை நிறுத்திவிட்டு அவன் கட்டிடத்தின் உள்ளே சென்று அவன் வீட்டு கதவை திறக்கும் முன், ஏதோ கீழே விழுந்தது போல பெரிதாக சத்தம் கேட்டது. என்னவென்று எட்டி பார்க்க பக்கத்து பங்களாவில் காற்று பலமாக வீச ஒரு சின்ன பூச்செடி சட்டியுடன் மேலிருந்து கீழே விழுந்திருந்தது எதேச்சையாக காற்றில் விழுந்தது என்று நினைத்து வீட்டிற்குள் சென்றான்.வெகு நேர வேலை என்பதால் அசதியில் தூங்கிவிட்டான்.
அடுத்த நாள் காலை 7 மணி அவன் வீட்டு பெல் அடித்தது, தூக்கக்கலக்கத்துடன் சென்று பார்த்தால் , வெளியே போலீஸ். "பக்கத்து பங்களாவில் கொலை நடந்திருக்கு எல்லோரையும் விசாரிக்கணும் கீழே வாங்க" என்றனர்."என்னது கொலையா?" என்ன ஆயிற்று என்ற பதட்டத்துடன் அவசர அவசரமாக பல் தேய்த்து சட்டையை மாட்டி கொண்டு கீழே இறங்கினான்.
பக்கத்து பங்களாவில் ஒரே போலீஸ் கூட்டம், கீழே நான்கு போலீஸ் நேற்று ஏதாவது சத்தம் கேட்டதா என்று விசாரித்து கொண்டிருந்தது. குரு போலீஸிடம் என்னவென்று விசாரிக்கையில் அந்த வீட்டில் வசித்து வந்த 70 வயது கடந்த வயதான தம்பதியினர் மற்றும் 50 வயதை கடந்த தம்பதியினர் நால்வரும் கோரமாக கொலை செய்யப்பட்டிருந்தனர். வீடெங்கும் ரத்த வெள்ளம், அனைவரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருந்தனர்.
குருவிற்கு ஒன்றும் புரியவில்லை ஒரு வேலை நேத்து ராத்திரி அந்த சத்தம் வந்த நேரத்தில் தான் நடந்திருக்குமோ, என்னாச்சு எப்டியாச்சுன்னே புரியலையே. இன்ஸ்பெக்டர் சுபாஷ் குருவின் அபார்ட்மெண்ட் உள்ளே வந்து சேர்ந்தான்.
குரு, சுபாஷை பார்த்தவுடன் அவனை பார்த்து கை அசைத்தான், சுபாஷ் அவன் பள்ளி தோழன்.
"ஹாய் குரு நீ இங்கே தான் இருக்கியா??" சுபாஷ் விசாரிக்க.
"என்னாச்சு ஏதாவது தெரிஞ்சுதா? நீ இப்போ இந்த ஏரியா ஸ்டேஷன் வந்துட்டியா?"
"போன மாசம் தான் மாறினேன்".
அனைவரையும் விசாரித்துவிட்டு அனுப்பிவிட்டனர். குருவோடு மட்டும் பேசி கொண்டிருந்தான்.
"டேய் நேத்து ராத்திரி நான் வந்தபோது பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டுது, ஒரு செடி மேலிருந்து கீழே விழுந்துச்சு, நானும் காத்துல தான் விழுந்துச்சுன்னு நினைச்சேன், இப்படி ஆகும்னு நினைக்கவேயில்லை. நான் உள்ளே பார்க்கலாமா?" குரு நடந்ததை சொன்னான்
"வேண்டாம் வேற யாரும் உள்ள அனுமதியில்லை.சற்று யோசித்துவிட்டு ஹ்ஹம்ம்ம் நான் உன்னை மட்டும் கூட்டிட்டு போறேன் வா".
இருவரும் உள்ளே செல்ல அங்கே இரண்டு அறைகளை பார்வையிட்டனர். பிரேத பரிசோதனை ஆட்கள் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
படுக்கையில் நால்வருக்கும் நெஞ்சில் துளை போட்டிருந்தது. இறந்து ஆறு மணி நேரம் இருக்கும் என்று சொன்னார்கள்.
"அப்போ நீ வந்த நேரம் தான் கிட்டத்தட்ட கொலை நடந்த நேரம், வேற ஏதாவது சத்தம் தெரிஞ்சுதா".
"இல்லையே".
பால்கனி சென்று பார்வையிட்டனர், சரியாக அவர்கள் அறையின் ஜன்னல் வெளியே இருந்த பூச்செடி கீழே விழுந்திருந்தது, விழுந்த பூச்செடியை கண்காணித்தனர் புல்லட் ஏதாவது தென்படுகிறதா என்று. காற்றில் விழுந்தது போல் தான் இருந்தது.
சிறிது நேரத்தில் போலீஸ் constable ஒரு மடித்த பெரிய பேப்பர் கைக்குட்டையில் பிடித்தபடி எடுத்து வந்தார்.
"என்ன இது?".
Constable இது அவங்க போர்வை அடியில் இருந்தது சார்
சுபாஷ் சுற்றி பக்கத்து வீடுகளில் இருக்கும் மக்கள் பார்வையிடுவதை பார்த்துவிட்டு இங்க வேணாம் உள்ளே போய் பிரிங்க.
மாடி ஹாலுக்கு சென்று அந்த பேப்பரை பிரித்தனர், அவர்கள் எல்லோருக்கும் ஆச்சிரியம். அது ஒரு சினிமா போஸ்டர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் பட போஸ்டர்.எல்லோருக்கும் குழப்பம் இது எப்படி இங்கே வந்திருக்கும், இதுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தமிருக்கும்.
குரு சுபாஷை அழைத்தான் தனியாக பேச.
"சுபாஷ் இந்த வீட்டில் இருந்த விக்ரம் என் காலேஜ் ஜூனியர், அவன் வீட்டை விட்டு போய் நாலு வருஷம் ஆச்சு என்ன ஆனான் தெரியலை. ஏதோ காதல் விவகாரம்னு மட்டும் தெரியும். அவன் சொல்லி கேள்வி பட்டிருக்கேன் அவன் அப்பா மிக பெரிய ரஜினி ரசிகர்ன்னு. ஒரு வேலை அதனால...." என்று குரு இழுத்தான்.
"அப்படியே இருந்தாலும் இவ்ளோ பெரிய பணக்காரங்க எதுக்காக போஸ்டர் இங்கே வைக்கணும், வீட்டில் பெருசாவே ஓட்டலாமே. இவங்க தான் பரம்பரை பணக்காரங்களாச்சே. முதலில் விக்ரம் பற்றி விஷயம் சேகரிப்போம் அப்போ ஏதாவது தகவல் கிடைக்க வாய்ப்பு இருக்கு. காதல் விவகாரம்னா அந்த பொண்ணு யாருன்னு தெரியுமா?
"அந்த பொண்ணும் பணக்கார வீட்டு பொண்ணு தான் ஆனால் வேற ஜாதி, இவங்க ரொம்ப ஜாதி பார்ப்பங்கன்னு அவன் சொல்லிருக்கான். அதனால அவன் அந்த பெண்ணோடு ஓடி போனதாக செய்தி வந்தது மட்டும் தான் தெரியும். அந்த பொண்ணு வீடும் இங்கே தான் இரண்டு தெரு தள்ளி இருக்கு. இவங்க இரண்டு குடும்பமும் வியாபார விதமாகவும் எதிரிகள் தான்.அந்த பொண்ணு பெயர் சாருமதி".
"சூப்பர் நல்ல பாயிண்ட் சொல்லிருக்க, என் விசாரணையை நான் அந்த பொண்ணு வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறேன்"
இன்ஸ்பெக்டர் சுபாஷ் மும்முரமாக வேலையில் இறங்கினான்.சாருமதியின் வீட்டிற்கு சென்று பார்த்தால் யாரும் இல்லை, வாட்ச்மன் வெளியூர் போயிருக்காங்க இன்று இரவுக்குள் வருவாங்க என்றான்.நாளை மீண்டும் வருவோம் என்று மற்ற வேலைகளை பார்க்க சென்று விட்டான் சுபாஷ்.
அடுத்த நாள் விடியலும் பரபரப்பாகவே ஆரம்பமானது சுபாஷிற்கு. அழைப்பு மணி வந்தவுடன் கிளம்பினான். நேராக அவன் சென்றது சாருமதியின் வீட்டிற்கு உள்ளே 50 வயதை கடந்த தம்பதியர் ரத்த வெள்ளத்தில், அது சாருமதியின் பெற்றோர் என்று தெரிந்தது சுபாஷ் உடனே குருவை அழைத்தான்.
"குரு உன்னை உடனே பார்க்கணும், விக்ரம் பற்றி என்ன செய்தி இருக்குதோ அது உடனே எனக்கு தெரியணும். நீ சொன்ன அந்த பொண்ணோட வீட்டில் அவங்க அப்பாவும், அம்மாவும் கொலை செய்ய பட்டிருக்காங்க, நேத்து பார்த்த அதே முறையில், இன்னும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னனா இங்கேயும் ஒரு ரஜினி போஸ்டர் இருக்கு".
"Constable இப்போ இங்கே எங்கே எந்திரன் படம் ஓடுது, போஸ்டர் ஓட்டினது யாரு அவங்களை முதலில் விசாரிக்கணும். கொலை நடந்த இரண்டு தெருவும் பெரிய வீடு இருக்கிற தெரு தான் யார் வீட்டிலாவது கேமரா இருக்கா பாருங்க, ரோட்டில் கேமரா இருக்கா பாருங்க. உடனே செய்யுங்க".
சிறிது நேரத்தில் குரு சுபாஷை பார்க்க ஸ்டேஷன் வந்தான்.
"சுபாஷ் நான் கல்லூரி முடிச்ச அடுத்த வருஷம் தான் விக்ரம் கல்லூரியை முடிச்சது அடுத்த ஒரு வருஷத்தில் தான் அவங்க ஓடி போயிருக்கணும். அந்த நேரத்தில் கண்டிப்பா இவங்க போலீஸ் கேஸ் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கு, நாலு வருஷம் முன்னாடி இந்த ஸ்டேஷன்ல யாரு இருந்தாலோ அவங்களை கேட்டால் கண்டிப்பாக விஷயம் தெரிய வாய்ப்பிருக்கு, இல்லை பழைய ரெகார்ட் பார்த்தால் தெரியும்.
"நீ சொல்றது சரி தான் இதை தான் நானும் இப்போ பார்த்திட்டு இருக்கேன். நாலு வருஷம் முன்னாடி இங்க இருந்தது இன்ஸ்பெக்டர் செல்வா, இப்போ அவர் மதுரையில் துணை கமிஷனராக இருக்கார். அவரோட பேசினால் ஏதாவது துப்பு கிடைக்கும்னு நம்பறேன்".
இவர்கள் பேசி முடிப்பதற்குள் Constable ஒரு ரிப்போர்ட் தயார் செய்து வந்திருந்தார். அதை படித்து பார்த்தவுடன் சுபாஷ் சற்று கோவமானான்.
"என்னாச்சு சுபாஷ் ஏன் கோவமா இருக்க?"
"இது ஏதோ திட்டமிட்ட சதி மாதிரி தெரியுது, ஒருத்தர் செய்த மாதிரி தெரியலை. ஏதோ வஞ்சம் தீர்க்க செய்த கொலையாக இருக்குமோன்னு நினைக்கிறேன்.
"எதை வைத்து அப்படி சொல்ற?".
"அந்த பொண்ணு சாருமதி வீட்டு தெருவில் இருக்கும் கேமரா அன்று இரவு 7 மணி முதல் வேலை செய்யலை உடைக்க பட்டிருக்கு. இரண்டு கொலைக்கும் அதே மாதிரி தான் இருக்கு, யாரோ இவங்களுக்கு உதவி செய்றாங்க, இல்லைனா இவ்வளவு தைரியமாக ஒரு பெரிய இடத்து வீட்டில் கொலை செய்திருக்க முடியாது. கண்டிப்பாக ரொம்ப நாள் தொடர்ந்து வந்து அவங்க மட்டும் இருக்கும்பபோது கொலை செய்திருக்காங்க. அப்படி இல்லைனா இவங்க நடவடிக்கைகள் நல்லா தெரிஞ்சவங்க கொலை செய்திருப்பாங்க. கண்டிப்பாக கொலை செய்தவனுக்கு துப்பாக்கி சுடுவது எப்படின்னு தெரிந்திருக்கும், சைலென்ஸர் உபயோகித்திருக்க வாய்ப்பிருக்கு சத்தம் வெளிய தெரியாமல் இருக்க".
"அப்போ இந்த கொலைகளை விக்ரம் அல்லது சாருமதி செய்திருப்பாங்கன்னு சொல்றியா?".
"அப்படி தோணலை, ஆனாலும் அப்படி இருந்தால் இருக்கலாம் இல்லையா. இரண்டு குடும்பத்துக்கும் ஆகாது, காதல், ஓடி போய் கல்யாணம், போலீஸ் கேஸ் எல்லாமே நடந்திருக்கு.விக்ரம் மற்றும் சாருமதி என்ன ஆனாங்கன்னு ரிப்போர்ட் ஏதும் இல்லை. ஒரு வேலை இவங்களோட சதியால் பிரிந்திருந்தால் கொலை செய்ய வாய்ப்பு இருக்கு இல்லையா".
"அப்படி கோவம் என்றாலும் பெத்தவங்களையே கொலை செய்யும் அளவுக்கு விக்ரம் போவான்னு தோணலை".
"ஜாதி மாற்றி கல்யாணம் செய்த பிள்ளைங்களை எத்தனை ஆணவ கொலை செய்திருக்காங்க அது மாதிரி இருக்கலாம் இல்லையா.
"சூப்பர் இது யோசிக்க வேண்டிய விஷயம், அப்போ அந்த துணை கமிஷனரிடம் பேசினால் விவரம் தெரிய வாய்ப்பு இருக்கு, இதில் குழப்பமான ஒரே விஷயம் எதுக்காக ரஜினி போஸ்டர் இவங்க வீட்டில் இருந்திருக்கு.காரணம் என்னவா இருக்கும்?"
"அதுவும் விசாரணை செய்தாச்சு, யாரோ ஒரு சின்ன பையன் ரஜினி போஸ்டர் வீட்ல ஓட்ட வேணும்னு சொல்லி கேட்டு வாங்கிட்டு போனதாக போஸ்டர் ஓட்டற ஆள் ஒருத்தன் வாக்கு மூலம் கொடுத்திருக்கான், இப்போ அந்த பையன் யாருன்னு கண்டுபிடிச்சா ஏதாவது விளங்கும். நான் இப்போ அங்கே தான் போறேன், உன் உதவி ஏதாவது தேவைன்னா நான் கூப்பிடறேன்".
சுபாஷ் அந்த சிறுவன் வீடு எங்கே என்று தேடி விசாரணைக்கு சென்றான்.எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை, போஸ்டர் அடித்த சாலை எங்கும் உள்ள கேமரா மூலம் சோதனை செய்ய ஆரம்பித்தனர். ஒன்றும் நடக்கவில்லை.
குரு அழைத்தான்....
"சொல்லு குரு"
"ஒரு முக்கியமான விஷயம், இந்த வழக்கு தான் என் மூளையில் ஓடிட்டு இருக்கு அதனால இன்னிக்கு லீவு போட்டேன், எதேச்சையாக என் கல்லூரி நாட்கள் புத்தகம் எடுத்து பாத்திட்டு இருந்தேன் அதில் விளையாட்டு துறையில், வில்லு, அம்பு எறிதல், மற்றும் துப்பாக்கி சூட்டில் எங்க கல்லூரிக்காக தங்க பதக்கம் வாங்கியிருக்கான் விக்ரம். அதை புகைப்படம் எடுத்து உனக்கு அனுப்பியிருக்கேன், இது ஏதாவது உதவியாக இருக்கும்".
"சூப்பர் இது ஒரு நல்ல சாட்சி, அனுப்பு".
அந்த நேரம் துணை கமிஷனர் செல்வா அவனை அழைத்தார்.
"குரு நான் திரும்ப கூப்பிடறேன், அந்த கமிஷனர் செல்வா கூப்பிடறார்".அழைப்பு மணியை எடுத்தபின்....
"சார் குட் ஈவினிங் நான் நீலாங்கரை இன்ஸ்பெக்டர் சுபாஷ் பேசறேன்".
"என்ன விஷயமாக கூப்பிட்டீங்க சொல்லுங்க",
"சமீபத்தில் நடந்த தொழிலதிபர் கொலை வழக்கில் விசாரணை செய்திட்டு இருக்கோம், இதை அவங்க மகனும், மகளும் காதல் திருமணம் செய்து ஊரை விட்டு போனதாக தெரியுது அவங்களை பற்றி வேற எந்த தகவலும் இல்லை அந்த நேரத்தில் இந்த கேஸ் பார்த்தது நீங்க தான் அதான் சில தகவல்கள் வேணும்".
"அவங்க பேரு என்ன?"
சுபாஷ் சொல்ல அந்த பக்கம் பெறும் அமைதி.
"நாம இதை நேரில் பேசலாமா, நீங்க சேகரித்த தகவலோடு என்னை நாளைக்கு வந்து மதுரையில் பார்க்க முடியுமா?".
"சரி சார், நான் வரேன்".
அன்று இரவு அந்த வழக்கிற்கான பைலை எடுத்து கொண்டது மதுரைக்கு பஸ் ஏறினான் சுபாஷ்.
சுபாஷ் நேராக துணை கமிஷனர் வீட்டிற்கு செல்ல அங்கே பெருங்கூட்டம், உள்ளே சென்று பார்த்தால் அங்கே துணை கமிஷனர் செல்வா இறந்து கிடந்தார். நெஞ்சில் தோட்டா பாய்ந்திருந்தது அருகிலே ஒரு ரஜினி எந்திரன் போஸ்டர்.
சுபாஷ் மிகவும் குழம்பி போனான் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.இங்கேயும் ரஜினி போஸ்டர் இதற்கும் கொலைக்கும் என்ன சம்பந்தம் என்று மண்டை குடைந்து யோசித்தான், ஒரு விஷயம் விளங்கியது மூன்று போஸ்டரும் ஒரே ரஜினி போஸ்டர், எந்திரன் படத்திலிருந்து அதுவும் ரோபோ போஸ்டர் இல்லை, டாக்டர் வசீகரன் போஸ்டர்.அப்போ இந்த கொலைகளை செய்தது ஒரு டாக்டராக இருக்கலாம் அல்லது வசீகரன் என்ற பெயர் கொண்டவனாக இருக்கலாம் என்று சுபாஷ் யோசித்தான். அப்போ இந்த இரண்டு குடும்பத்துக்கும் துணை கமிஷ்னருக்கும் நடுவில் ஏதோ நடந்திருக்கு அந்த மர்மம் என்ன???"
துணை கமிஷனரை கொலை செய்தது மிகவும் பரபரப்பாகி போனது, கமிஷ்னரிடமிருந்து சுபாஷுக்கு அழைப்பு வந்தது.
என்ன பண்ணிட்டு இருக்கீங்க, தொடர்ந்து மூன்று நாளில் ஏழு கொலை. அதும் ஒரு துணை கமிஷனர் உட்பட. இன்னும் யாருன்னு தெரியலையா.
"விசாரணை செய்திட்டு இருக்கோம் சார், கண்டிப்பாக அந்த இரண்டு குடும்பத்துக்கும் சம்பந்தமான ஒருவர் தான் கொலை செய்திருக்காங்க.அந்த சமயத்தில் இவர் கூட இந்த கேஸ் பார்த்த மற்ற Constable யாருன்னு பார்த்து விசாரிச்சா ஏதாவது கிடைக்கும் சார்".
"உடனே முடிக்கணும், சீக்கிரம் வேலையை பாருங்க".
நான்கு வருடத்திற்கு முன்பு இந்த வழக்கை பார்த்தது இன்ஸ்பெக்டர் செல்வா மற்றும் Constable ரத்தினம் மற்றும் முத்து.முத்து ஒய்வு பெற்ற காவலாளி உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஒரே வருடம் முன்பு இறந்துவிட்டார். ரத்தினம் ஒய்வு பெற்று விட்டார் இப்போது அவர் மகனுடன் துபாயில் வசிப்பதாக செய்தி கிடைத்து அவரை தொடர்ப்பு கொண்டனர்.
"ரத்தினம் நான் நீலாங்கரை இன்ஸ்பெக்டர் சுபாஷ் பேசறேன். நாலு வருஷம் முன்னாடி நீங்க இங்க இருந்தபோது விக்ரம், சாருமதி என்ற காதல் வழ்க்கை இன்ஸ்பெக்டர் செல்வா, முத்துவோடு பார்த்தீங்க அதை பற்றி தகவல் வேணும்".
"தம்பி இது பெரிய இடத்து சமாச்சாரம் வெளிய தெரியாமல் பார்த்துக்கணும், எதுக்காக கேட்கறீங்க".
சுபாஷ் ஏழு கொலைகள் நடந்தது பற்றி சொன்னான்.
அதை கேட்ட ரத்தினமிற்கு வேர்க்க ஆரம்பித்தது.
"தம்பி இந்த வழக்கு பார்த்தது நாங்க தான், அந்த காதல் ஜோடியை நாங்க தேடி எல்லா இடமும் போனோம், கடைசியாக விசாகப்பட்டினத்தில் இருப்பதாக தகவல் வந்தது, அவங்க இருப்பிடத்தை கண்டு பிடிச்சோம் ஆனால் கைது பண்ணலை. இன்ஸ்பெக்டர் செல்வா அவங்க பெத்தவங்களிடம் ஏதோ பேச்சு வார்த்தை பேசினார், ஒரு பெரிய தொகை அவருக்கு தருவதாக சொன்னாங்க, எனக்கும் முத்துக்கும், அதிலிருந்து மூன்று லட்சம் கொடுத்தார், VRS கொடுத்து வேலையை விட்டு நிற்க சொன்னார், வேறு யாருக்கும் ஏதும் தெரிய கூடாது என்று சொன்னார். அதுக்கு பிறகு என்ன ஆச்சு என்று தெரியாது. ஒரு வருஷத்தில் அவருக்கு பதவி உயர்வு கிடைத்து மதுரையில் துணை கமிஷனர் ஆனார் அது தான் தெரியும். அப்படினா அந்த கேஸை முடிச்சிட்டார்னு நினைச்சேன், இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம் வெளிய தெரியாமல் பார்த்துக்க வேணும், இப்போவும் அவங்க யாரும் உயிரோட இல்லைனு சொன்னதால் மட்டுமே வெளியே சொல்றேன். நிஜமாக அந்த ஜோடிகளை கொன்னுட்டாரான்னு எனக்கு தெரியலை யாரு இந்த கொலைகளை பண்ணாங்கன்னும் புரியலை" .
சுபாஷ் ஏதோ ஒரு தெளிவுக்கு வந்தான் பெற்றவர்களே ஜாதி மாற்றி திருமணம் செய்ததால் சொந்த மகனையும், மகளையும் கொலை செய்ய சொல்லி இன்ஸ்பெக்டர் செல்வாவிடம் பணம் கொடுத்திருக்கின்றனர், அவரும் அவர்களை கொன்று விட்டு அவர்களின் செல்வாக்கு மூலம் பதவி உயர்வும் பெற்று விட்டார். இப்போது எங்கிருந்து யார் இந்த கொலைகளை செய்கிறார் என்று புரியவில்லை,
ஒரு வேளை யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் இப்படி நடக்க வாய்ப்பிருக்கு, அப்போ அவர்களின் சடலத்தை தான் இனி தேட வேண்டும்.
போலீஸ் படை விசாகப்பட்டினம் விரைந்தது அவர்கள் புகைப்படத்தை வைத்தும், ரத்தினம் சொன்ன தகவலை வைத்து சேகரித்தும் தேட ஒரு பலனும் இல்லை, அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு மட்டுமே செல்ல முடிந்தது.
கையில் கிடைத்த அனைத்து ஆதாரமும் வீணாக போனது, அவர்கள் இருவரின் புகைப்படத்தை செய்தித்தாளில் போட்டு இவர்களை பற்றிய தகவல் சொல்பவர்க்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று இந்தியா முழுக்க விளம்பரம் செய்தது போலீஸ்.ஒரு மாதம் ஆகியும் ஒரு தகவலும் வரவில்லை, இரண்டாவது மாதம் நாக்பூர் நகரில் இருந்து ஒரு பெண் ஹிந்தியில் பேசினாள், அவள் கூறியதாவது, இது எங்கள் பள்ளி PET வாத்தியார் விக்ரம் . இவர் இரண்டு வருஷம் முன்பு வரை எங்க பள்ளியில் தான் வேலை பார்த்தார் திடீரென்று வருவதில்லை என்று கூற, சுபாஷ் அவர்கள் குழுவுடன் நாக்பூர் சென்றான், நாக்பூர் போலீஸ் உதவியுடன் அவர்களை பற்றி விசாரிக்க, இரண்டு வருடம் முன் நடந்த ஒரு தீ விபத்தில் அவர் குடும்பத்துடன் இறந்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.
இறந்தவர் பட்டியலில் இருந்த பெயர்கள் விக்ரம், சாருமதி மற்றும் ஒரு வயது குழந்தை வசீகரன்.சுபாஷிற்கு இப்போது தான் சில விஷயங்கள் விளங்கியது இவர்களையும் அந்த குழந்தை வசீகரனையும் கொலை செய்திருக்கிறார்கள் அதற்கு யாரோ மீண்டும் பழி தீர்த்திருக்கிறார்கள், இவர்களே இறந்த பிறகு இவர்களுடைய விஷயங்கள் தெரிந்த ஒருவர் மட்டுமே கொலை செய்திருக்க முடியும் யார் அந்த இன்னொரு ஆள்?? அப்போ இந்த கொலைகள் எல்லாம் நடந்தது வசீகரன் என்ற குழந்தைக்காக.
இந்த கேஸ் இன்னும் பரபரப்பாக செல்ல தொடங்கியது, விக்ரம் வேலை செய்த பள்ளி கூடம் சென்று விசாரிக்க அங்கே அவர்கள் கூறியதில் ஒன்று மட்டும் விளங்கியது. விக்ரம் அவர் வீட்டில் வேலை செய்யும் சஞ்சிதா சிங்க் என்ற வேலைக்காரி அவர்களோடு இருந்தது தெரிய வந்தது அவளின் மகள் அம்ரிதாவை விக்ரம் அந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார், அந்த பெண் மிகவும் துடுக்கான பெண் விளையாட்டு போட்டிகள் அனைத்திலும் சிறந்து விளங்குபவள் துப்பாக்கி சுடுதலில் திறமைசாலி. அவளும் பள்ளி முடித்து இப்போது கல்லூரியில் படிப்பதாக நினைக்கிறேன் என்று கூறினர்.
அப்போ இவ்வளவு கொலையும் செய்தது ஒரு பெண். அவர்களுக்காக இவள் பழி தீர்த்திருக்கிறாள், என்று புரிந்து கொண்டான்.அவளை பிடித்தால் மட்டுமே முழு விபரம் தெரிய கூடும் என்று புரிந்தது. ஒரு சில நாட்கள் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
ஒரு சில நாட்களில் இந்த கொலைகளுக்கெல்லாம் காரணம் ஒரு பெண் அவள் பெயர் சஞ்சிதா சிங்க் துப்பாக்கி சுடுவதில் கெட்டியனவர். ஜாதி மாறி திருமணம் செய்த காரணத்திற்காக பெற்றவர்களே போலீஸிடம் பணம் கொடுத்து அவர்களை கொலை செய்து வஞ்சம் தீர்த்தனர், இவர்களிடமிருந்து தப்பி ஓடிய அந்த காதல் ஜோடி விசாகப்பட்டினம் சென்று அங்கிருந்து நாக்பூர் சென்று தஞ்சமடைநதனர். அவர்களை வேவு பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வா அவர்களை கொலை செய்து விபத்து போல் மாற்றி தப்பித்து விட்டார். இவரக்ளின் சதி வேலைகளை அறிந்த அவள் வீட்டு வேலைக்காரி சஞ்சிதா சிங்க், அவர்கள் இறந்த பிறகு அவர்கள் பெற்றோரையும், போலீஸ் செல்வாவையும் கொலை செய்து பழி தீர்த்தார். இன்று அந்த சஞ்சிதாவும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்று வழக்கை முடித்து இருந்தான் இன்ஸ்பெக்டர் சுபாஷ்.
நாட்கள் நகர தொடங்கின, இந்த வழக்கை பற்றிய சில விபரங்களை நண்பன் குருவிடம் மட்டுமே சொன்னான் சுபாஷ். அந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் மீண்டும் வழக்கை மூடி வைத்தது போலீஸ்.
சில மாதங்கள் கழித்து சுபாஷும், குருவும் டார்ஜிலிங் ஊருக்கு சுற்றுலா சென்றனர். அங்கே பனி பொழியும் வேலையில் உற்சாகமாக இருந்தனர்.
"உனக்கு எப்போ கல்யாணம்? பொண்ணு பாக்கறீங்களா இல்லையா?".
"அட போடா கல்யாண ஆசையே போயிருச்சு வர பொண்ணு எல்லாமே அது வேணும், இது வேணும் தான் கேட்கறாங்க, யாரும் சரி சொல்ல மாட்றாங்க, எல்லாம் இருந்தும் இது மட்டும் நடக்கவே இல்லை".
"நீ யாரையும் காதலிக்கலயா?"
"அப்படி யாரும் கிடைக்கலையே".
"பொய் சொல்லாத".
"அட நிஜமா தான் சொல்றேன்".
"அப்போ இது என்ன?"
குரு சாருமதியுடன் அருகில் நின்ற புகைப்படத்தை காட்ட அந்த பனி பொழிவிலும் குருவிற்கு வேர்க்க தொடங்கியது.
"நீ ஒரு தலையாய் காதலிச்சது சாருமதியை,இந்த போட்டோ அவளுக்கு தெரியாமல் நீ எடுத்தது. அவளை விக்ரம் காதலித்தது உனக்கு தாங்கலை. அவங்க இரண்டு பேரு வீட்டிலேயும் ஜாதி பிரச்சனையால் சண்டை வந்ததால் அதை உனக்கு சாதகமாக்க பாத்திருக்க.அவங்க போலீஸ்க்கு பணம் கொடுத்தது உண்மை தான் ஆனால் இன்ஸ்பெக்டர் செல்வா கொலை செய்தது விக்ரமை மட்டும் தான், Constable முத்து மூலம் செல்வா எங்கு போனாலும் அவனை வேவு பார்த்து அவன் பின்னாலேயே நீ போயி நாக்பூரில் சாருமதியை கொன்னுருக்க அவங்களுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை இருந்தது உனக்கு தெரியவேயில்லை, விக்ரமும் இறந்துட்டான், சாருமதியையும் கொன்னுட்டே அந்த நேரத்தில் அங்கே வந்த வீட்டு வேலைக்காரியை உள்ளே வைத்து பூட்டி வீட்டை தீ வைத்து கொளுத்தியிருக்க. நீ செய்த ஒரே தப்பு Constable முத்து இதையெல்லாம் அவர் டைரியில் எழுதி வெச்சிட்டு தான் இறந்து போயிருக்கார் என்று தெரியாமல் இருந்தது தான்" சுபாஷ் சொன்னதும் குரு அதிர்ச்சியானான்.
குரு நடுங்கியபடி "இதை நான் தான் செய்தேன்னு உனக்கு என்ன ஆதாரம் இருக்கு. நான் எதுவும் செய்யலை".
"ஆதாரம் இருக்கு, அர்பிதா அவங்க வீட்டு வேலைக்காரியோட பெண், விக்ரமோட பெத்தவங்க அவங்க இரண்டு பேரையும் பிரிக்க சொல்லி தான் இன்ஸ்பெக்டர் செல்வாவிடம் பணம் கொடுத்தாங்க, சாருமதியின் பெத்தவங்க தான் விக்ரமை கொலை செய்ய சொல்லி பணம் கொடுத்தது. அன்றைக்கு இன்ஸ்பெக்டர் செல்வாவிற்கு தெரியாமல் நீ விக்ரம் வீட்டிற்கு போயிருக்க, விக்ரம் வீட்டிற்கு வரும் நேரம் செல்வா விக்ரமை சுட்டு விட்டு செல்ல, சாருமதியும் அவங்க வீட்டு வேலைக்காரி சஞ்சிதா சிங்கும் காப்பாற்ற முயற்சி செய்யும் நேரம் நீ உள்ளே போயி சாருமதியை கத்தியால் குத்தி கொலை செய்திருக்க. தடுக்க வந்த வேலைக்காரியை அடிச்சிட்டு வீட்டை கொளுத்திட்டு வந்திருக்க. இதையெல்லாம் அந்த நேரத்தில் பள்ளி கூடம் விட்டு வந்த அவங்க பொண்ணு அர்பிதா பார்த்துவிட்டாள். ஆனால் இந்த கொலை செய்தது போலிஸ்ன்னு நினைத்தாள் ஏன் என்றால் சாருமதி அவங்க பட்ட கஷ்டத்தை அவளிடம் பலமுறை சொல்லியிருக்கிறாள். நீ செய்த ஒரு தப்பு உன்னோட கை ரேகை அந்த கத்தியில் இருந்ததை கவனிக்கலை. நாக்பூர் ஸ்டேஷனில் உன் கைரேகை மட்டும் கண்டு பிடிக்காமல் இருந்திருக்காங்க. அர்பிதா நீ தான் அவங்க பெத்தவங்க அனுப்பின ஆள் என்று தப்பாக புரிந்து கொண்டு அவங்க எல்லோரையும் கொலை செய்திருக்காள். இன்ஸ்பெக்டர் செல்வா தான் கொலையாளின்னு நினைத்த அவளுக்கு நீ தான் அந்த கை ரேகைக்கு சொந்தமானவன்னு தெரியலை. இப்போவாவது உண்மையை சொல்லு.இதுல ஒரு சின்ன குழந்தையை கொலை செய்தது தான் மிக பெரிய பாவம், அந்த குழந்தை வசீகரன் அவள் வீட்டு வேலைக்கார பெண் அர்பிதா தான் வளர்த்தாள்.
"ஏதோ தெரியாமல் கோவத்தில் செய்துட்டேன் என்னை மன்னிச்சிரு, என்னை எப்படியாவது காப்பாத்து. அங்கே குழந்தை இருந்தது எல்லாம் எனக்கு தெரியாது" குரு பதட்டமானான்.
"நான் காப்பாற்றினாலும் நீ அவளிடம் இருந்த தப்ப முடியாது".
சுபாஷ் துப்பாக்கியை பிடித்து குருவை குறி பார்க்க புல்லட் பாய்ந்து வந்து குருவை வதைத்தது,
துப்பாக்கி அமுக்கவேயில்லை எப்படி புல்லட் பாய்ந்தது என்று திரும்பி பார்க்க அங்கே அர்பிதா கையில் துப்பாக்கியுடன் இருந்தாள்.
வசீகரன், விக்ரம் மற்றும் சாருமதியின் சாவிற்கு நியாயம் வழங்கியதற்காக அர்பிதா சுபாஷிடம் மண்டியிட்டு நன்றி சொன்னாள்.
டார்ஜிலிங் மலை சறுக்கில் குரு தவறி விழுந்ததாக கேஸ் மூடப்பட்டது, சில ரகசியங்கள் ரகசியமாகவே காப்பாற்றப்பட்டது .
அர்பிதா காஷ்மீர் சென்று துப்பாக்கி சூட்டில் தன்னை மேலும் வலுவாக தயார் படுத்திக்கொண்டாள், சுபாஷ் அடுத்த வழக்கை பார்க்க கிளம்பினான்.
