தென்னாட்டு செல்வங்கள் சில்பி
தென்னாட்டு செல்வங்கள் சில்பி
வகை: நாவல்
பக்கங்கள்: 590
சில்பி (1919 - 10 ஜனவரி 1983) என அறியப்பட்ட பி. எம். சீனிவாசன் தமிழகத்தின் பிரபல கோட்டோவியராக வாழ்ந்து மறைந்தவர். கும்பகோணம் அருகிலுள்ள புலியூரில் பிறந்தவர். நாமக்கல் கவிஞரால் இவரது திறமை அடையாளம் காணப்பட்டு ஓவியக்கல்லூரியில் சேர ஊக்குவிக்கப்பட்டார்.
திருக்கோயில்களுக்கு நேரடியாகச் சென்று தங்கியிருந்து அங்குள்ள சிற்பங்களின் அழகையும் தெய்வத் திருவுருவங்களையும் ஓவியமாக வரைந்தவர். இவரது படைப்புகள் ஆனந்த விகடன் போன்ற தமிழிதழ்களில் வெளிவந்தன.
இந்த நூல் முழுக்க ஓவியர் சில்பியின் கைவண்ணத்தாலும் தெய்வீக அருட்கடாக்ஷத்தாலும் மிளிர்கிறது நூல்.
இந்த நூலில் சற்றேறக்குறைய ஐம்பது கோவில்களுக்கு சென்று தானே அமர்ந்து கருவறையில் உள்ள தெய்வத்தின் உருதனை தன்னுள் நிறுத்தி தெய்வத்திருவருளுடன் மிக நேர்த்தியாக தெய்வீக அருட்கடாக்ஷத்துடன் ஓவியமாக வரைகிறார் ஓவியர் சில்பி.
இங்கு நான் சில ஆலயத்தில் உள்ள கடவுள்களின் உருவத்தை வெகு நேர்த்தியாக உருவாக்கியுள்ளார் ஓவியர் சில்பி.
முதலில் ஞானமுதல்வனாம் மதுரையம்பதியில் உள்ள நர்த்தன விநாயகர், நடராஜர், காளியம்மன் உருவங்கள் உண்மையில் அதனழகில் நம்மை மிரட்டி விடுகிறது.
மதுரை எனக்கு தனிப்பட்ட முறையில் கனவு தேசம் கள்ளழகர் எம் மனம் கவர்ந்த கள்வன்.
கிளரொளியிளமை கெடுவதன்முன்னம் *
வளரொளிமாயோன் மருவியகோயில் *
வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை *
தளர்விலராகில் சார்வதுசதிரே
எனும் பாசுரப்படியே எம் உள்ளம் கவர்ந்த கள்வன் கள்ளழகர்.
மதுரை தொடங்கி திருநெல்வேலி, விஷ்ணுபுரம், சுசீந்திரம், தாடிக்கொம்பு, இன்னும் இன்னும் பட்டியல்கள் நீள்கிறது.
இதில் நான் சில தலங்களில் உள்ள சில சிற்ப வேலைப்பாடுகள் குறித்து இந்த நூலில் சொல்லபடுகிற சில செய்திகளை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால்
நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு
திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.
என்று பெரியோர்களால் கொண்டாடபடுகின்ற ஊர் திருவில்லிபுத்தூர்.
பெரியாழ்வார் பிறந்த மண்.
மனிதனாக பிறந்து கடவுளையே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆண்டாள் பிறந்த ஊர்.
தமிழ் நாடு அரசு முத்திரை இந்த கோவிலின் ராஜகோபுரம் தான்.
இவ்வளவு சிறப்புகளை கொண்டுள்ள இந்த கோவிலின் சிற்பங்களை குறித்து விவரிக்கிறது இந்த அத்தியாயம்.
ஓவியர் சில்பியின் இந்த நூலில் கருணை என்றால் கருணையே வடிவாக, கோபம் என்றால் உச்சகட்ட கோப முகம்,
சாந்தம் என்றால் சாந்தமே ரூபமாக சிலைகளை பார்த்து பார்த்து வடிக்கிறார் சில்பி. இந்த நூலில் பெருமாள்,சிவன், தேவர்கள், மன்மதன்,ரதி சிற்பங்கள் எல்லாம் அபாரமன ஓவிய கலைவண்ணம்.
ஓங்கி உலகளந்த பெருமாள் சிற்பம் எல்லாம் எனக்கு திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளை நினைவுபடுத்துகிறது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் எளியேன் யான்.
நாலாயிரத் திவ்ய பிரபந்தத்துக்கு விதை போட்ட ஊர்.
அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.
முதல் திருவந்தாதி'யில் பொய்கையார் -
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று
என்கிறார்.
இரண்டாம் திருவந்தாதி'யில் பூத்தாழ்வார் -
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.
மூன்றாம் திருவந்தாதி'யில் பேயாழ்வார் -
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று
என்று அருள்கிறார்
இப்படி பெருமாளே தன் அடியார்களுக்கு காட்சி தர எண்ணி இடைகழியில் காட்சி தந்து நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தத்தை இந்த உலகிற்கு தர எண்ணிய தலம்.
சுமார் பதினோரு அடி உயரத்திற்கு மூலிகை வண்ணத்துடன் இடது கால் மேல் தூக்கி சங்கு, சக்கரம் மேல் இரு கைகளில் மாறி இருக்க அவன் திருவடிக்கீழே மகாபலி தேவாதி தேவர்கள் இருக்க ஈரேழு உலகையும் ஆள்பவன் நான் என்று மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஆயனார் உண்மையில் இது கண்ணன் கோவில் என்பதை விஷயம் அறிந்தவர்கள் அறிவார்கள்.
பெரும்பாலான பெருமாள் கோயில்களில் சிவ, சக்தி சன்னதிகள் இருக்காது ஆனால் இங்கு மட்டும் விதிவிலக்காக கொற்றவை எனப்படும் துர்க்கைக்கு மூலாஸ்தானம் கட்டிற்குள்ளயே தனிச்சன்னதியில் சர்வாலங்கார பூஷிதையாக காட்சி தருகிறார் .
உலகளந்த பெருமாள் சிற்பத்தை கண்டு நான் வியந்து தான் போனேன் அந்தளவுக்கு நேர்த்தியாக வரைந்துள்ளார் ஓவியர் சில்பி.
ஓவியர் சில்பி வடித்ததில் தான் இந்த ரூபமா இல்லை நிஜமாகவே இந்த ரூபங்கள் இவ்வளவு நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளனவா? என்று வியக்க வைக்கிறார் ஓவியர் சில்பி.
இந்த நூலை படிக்கும் யாவர்க்கும் இந்த நூலில் குறிப்பிட்டுள்ள சகல தலங்களுக்கும் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும் என்று எண்ணம் ஏற்படுவதை தவிர்க்கவே இயலாது.
வெறுமனே கோவில் மூலஸ்தானத்தை மட்டும் சேவித்து விட்டு மண்டபங்களில் உட்கார்ந்து விட்டு வராமல் அந்த மண்டபங்களில் உள்ள சிற்பங்களை பார்த்து விஷயத்தை புரிந்து கொண்டு மண்டபங்களை வெறுமனே ஓய்வெடுக்கும் இடமாக அல்லாமல் கலைகளின் கூடமாக இருக்கிறது என்பதை நினைவில் வைத்து கொண்டு வருவோம்.
எழுத்தாளனுக்கு மறைவேது ஏது என்பார் கி.ரா இந்த நூலை படித்தவுடன் இதை கொஞ்சம் மாற்றி கலைஞர்களுக்கு மறைவேது என்று சொல்ல தோன்றியது.
வாசிப்பை நேசிப்போம்! தொடர்ந்து பயணிப்போம்!
உங்களின்
தினேஷ் கண்ணா
