தாய் மண்ணே, வணக்கம் ( பாகம் 3)
தாய் மண்ணே, வணக்கம் ( பாகம் 3)
போன ஆகஸ்ட் மாதம் 14ஆம் நாள் திடீரென்று போன் அடித்தது.
" யாரு?.. கண்ணனா... எப்படி இருக்கப்பா ? எல்லாம் நலந்தானே..." "நலம் விசாரிப்பதெல்லாம் அப்புறம்... முதலில் எனக்கு பாரதியாரின்,' தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்' இந்தப் பாடலின் அடுத்த வரியைக் கூறுங்கள்.... எழுதிக் கொள்கிறேன். நாளை ஆகஸ்ட் 15; நாங்கள் இந்தியன் ஸ்டூடண்ட்ஸ் அசோசியேஷனில் நடைபெறப்போகும் விழாவில் பாரதியார் பாடலைப் பாடப் போகின்றோம். சீக்கிரம் சொல்லுங்கள்."
இப்போது அவனை போனில் சீண்டிப் பார்க்க ஆசையாக இருந்தது.. "பாட்டு வரிகள் அவ்வளவாக ஞாபகத்தில் இல்லையே ...பாட்டாக பாடினால் தான் ஒருவேளை பாடல் வரிகள் என் நினைவுக்கு வரலாம்."
சரி.. சரி ..ஓகே, பாடியே சொல்லுங்கள்.. சீக்கிரம்.." அம்மா போனில் பாட ஆரம்பித்தாள்,
"தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்
இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்.
எங்கள் தாய்.. எங்கள் தாய்.. (கண்ணனும் சேர்ந்து பாட ஆரம்பித்தான்) எங்கள் தாய்.. எங்கள் தாய்.. ஓகே, அடுத்த பாரா...
150 கோடி முகமுடையாள் உயிர் மொய்புறமொன்றுடையாள்...
(கண்ணன் எழுதுகிறான்)"மொய்புற மொன்றுடையாள்... அப்புறம்..."
" இவள் செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்."
"ஓகே ...அப்பறம்..."
"300 கோடி தடக்கைகளாலும் அறங்கள் நடத்துவள் தாய் தன்னைச் செறுவது நாடி வருபவரைத் துயில் செய்து கிடத்துவள் தாய் எங்கள் தாய்.. எங்கள் தாய்..
அம்மாவும் பையனும் போனில் அருமையாகப் பாடினார்கள்...
" எங்கள் தாய்..எங்கள் தாய்.. இதற்கு மேல் தெரியும்.. ஓகே.."
கண்ணன் போனை வைத்து விட்டான். "அடக்கடவுளே, எப்படி இருக்கமா என ஒரு வார்த்தை கேட்டானா ? சிறிது நேரம் பேசி இருப்பேனே..."அம்மா அங்கலாய்த்துக்கொண்டாள்.
அடுத்த கடிதம்_
" போனில் பேசினால் டாலர் செலவாகும்... தெரியாதா... என்ன ! மேலும் நாளை மறுநாள் எனக்கு டுடோரியல் இருக்கு. இப்போதெல்லாம் நான் பார்ட் டைம் கிளாஸ் எடுக்க ஆரம்பித்து இருக்கிறேன். ஜூனியர் ஸ்டூடண்ட்ஸ்க்கான பயிற்சி வகுப்புகள் தான். இப்படி போனால் தான் ஏர்மெயில் வாங்கும் காசை சேர்க்க முடியும்... தெரியுதா.. அடுத்த லெட்டர் வரும் வரை காத்திருங்கள்..."
தொடரும்...