STORYMIRROR

arvind narayanan

Thriller

4  

arvind narayanan

Thriller

சென்னையில் ஒரு மழை நாள்!

சென்னையில் ஒரு மழை நாள்!

7 mins
7

சென்னையில் ஒரு மழை நாள்!

அன்று மாலை ஏழு மணி இருக்கும் சென்னையில் மழை வெளுத்துவாங்கி கொண்டிருந்தது, சோழிங்கநல்லூர் பக்கம் ஒரு தையல் கடையில் அமர்ந்திருந்தாள் காவ்யா.

"அண்ணா சீக்கிரம் கொடுங்கணா, நான் கண்டிப்பாக இன்னிக்கு வேணும்னு சொல்லியிருந்தேன் இன்னும் முடிக்காமல் இருக்கீங்க. ராத்திரி நான் மதுரைக்கு போகணும், இன்னும் மூணு நாளில் எனக்கு கல்யாணம்" காவ்யா குரலில் சோகம் தெரிந்தது.

"கோச்சிக்காத மா, முன்னாடியே ரெடி ஆகியிருக்கும், நாலு நாளா நல்ல மழை, உடம்பு சரியில்லாமல் குளிர் ஜுரம் மாதிரி ஆகியிருச்சு. இப்போ முடிச்சு கொடுத்திடறேன். இப்படி மழை பேயுதே எப்படி போவீங்க ஊருக்கு?".

"நான் எல்லாத்தையும் எடுத்து என் காரில் வெச்சிட்டேன். நீங்க கொடுத்ததும் நேராக என் ஆபீஸ் போகனும், அங்கே என் பொருள் எடுத்திட்டு என் தோழி கூட சாப்பிட்டு அப்படியே கிளம்ப வேண்டியது தான்".

"நீயே தனியா கார் ஓட்ட போறியா ராத்திரி நேரம், இந்த மழையில்? வீட்ல பெரியவங்க யாரும் வரலையா. கல்யாண பொண்ணு இப்படி தனியாகவா போகனும்?".

"எல்லாம் என் நேரம் தான், என் அப்பா, அம்மா கலப்பு திருமணம் செய்தவங்க அதனாலே சொந்தக்காரங்க யாரும் இல்லை, இருந்தாலும் வர மாட்டாங்க. அப்பா வருவதாக இருந்துச்சு இரண்டு நாள் முன்னாடி கீழே விழுந்து கால் அடிபட்டிருக்கு நகர முடியாமல். அதனால் நான் தான் எல்லாத்தையும் பார்க்கனும். நீங்க சீக்கிரம் கொடுத்தீங்கனா கிளம்பிடுவேன், தாம்பரத்தில் ஒரு டிரைவர் வருவாரு அவர் தான் மதுரை வரைக்கும் ஓட்டிட்டு போவாரு".

அடுத்த அரை மணி நேரத்தில் அவளுக்கான கல்யாண ஆடையை சரியாக தைத்து கொடுக்க, மணி இரவு ஒன்பது ஆகிவிட்டது, மழை நின்றபாடில்லை. அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் அவள் அலுவலகம் வந்தது, அவள் தோழியை அழைக்க அவள் வேறு வேலை இருப்பதாக சொல்லி அவள் பொருளை மட்டும் எடுத்து வந்து கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.

சரி மதுரை போகிற வழியில் சாப்பிடலாம் என்று முடிவெடுத்து டிரைவர் எங்கே இருக்கிறான் என்று கேட்க அழைத்தாள்.

"ஹலோ அண்ணா எங்க இருக்கீங்க, நான் கிளம்பிட்டேன், தாம்பரம் பக்கம் தான் வந்துட்டிருக்கேன். நீங்க சீக்கிரம் வந்திருங்க".

"மேடம், மழை ரொம்ப அதிகமா இருக்கு. இங்கே ஏகப்பட்ட டிராபிக். நான் இன்னும் ஸ்ரீபெரும்புதூர் தாண்டலை, இன்னும் 20 கிலோமீட்டர் இருக்கு. இந்த பக்கம் தான் போகனும் கோச்சிக்காமல் இங்கே வரைக்கும் வர முடியுமா??, நான் இங்கேயே இருக்கேன்"

"என்ன??? இப்போ வந்து இப்படி சொல்றீங்க, மழை வேற, டிராபிக், நான் அவ்ளோவா ராத்திரியில் ஓட்டினதில்லை.நீங்க சீக்கிரம் வர பாருங்க".

"சாரி மேடம், இந்த மழையில் வருவது ரொம்பவே சிரமம் தான். கொஞ்சம் நேரம் ஆகும், நீங்க தனியாக தாம்பரத்தில் காத்திட்டிருக்க வேண்டியிருக்கும். தனியா வேற இருக்கீங்க அதான் யோசிக்கிறேன்".

"ஐயோ!, சரி நான் எப்படியோ பொறுமையாக வரேன், நீங்க அங்கே இருங்க" கடுப்பானாள் காவ்யா.

பொறுமையாக கார் ஓட்ட, பெருங்கொளத்தூரை தாண்டும்போது மணி இரவு 11. மழை அதிகமானதால் சாலை எங்கும் தண்ணீர், ஒரு பக்கம் சாலை பள்ளம் ஏற்பட்டதால் வேறு பக்கம் திருப்பி விட்டனர்.

சிறிது தூரம் புலம்பியபடியே கார் ஓட்ட இருட்டில் அந்த சாலையில் சரியாக தெரியாமல் வேறு ஒரு பக்கம் திரும்பிவிட்டாள், அங்கே வெளிச்சம் ஏதும் இல்லை. அந்த சாலையில் அவள் காரும் மற்றும் இன்னும் தொலைவில் ஒரு கார் மட்டுமே இருந்தது. அலைபேசியில் கூகிள் மேப் போட்டால் அந்த இடம் காட்டவேயில்லை, மழை வேறு பெய்வதால் இன்டர்நெட் வேலை செய்யவில்லை. சற்று தூரம் சென்றவுடன் முன் டயர் டமால் என்று சத்தம் கொடுத்தது.

"ஐயோ டயர் ஒரு பள்ளத்தில் மாட்டிருச்சே, இப்போ என்ன பண்றது. வெளியே வேற இப்படி மழை பேயுதே" கலவரமானாள் காவ்யா.

காரின் வெளியே வர மழையில் மொத்தமாக நனைந்தாள், யாரை கூப்பிடுவது என்று தெரியவில்லை, காருக்குள் சென்று அமர்ந்தாள், அந்த ஏசி காற்று அவளுக்கு குளிரை ஏற்படுத்தியது.

காவ்யா அந்த டிரைவர் நம்பருக்கு அழைப்பு விடுக்க அவன் ரொம்ப நேரம் யாருடனோ பேசிக்கொண்டேயிருந்தான். அவள் அம்மா சுபா அந்த நேரத்தில் அழைத்தாள்.

"என்னடி காவ்யா, போனே பண்ணவேயில்லை, உன்னை நினைச்சு பயந்திட்டு இருக்கேன். கிளம்பின உடனே சொல்ல வேண்டாமா"

கத்தினாள்.

"அட போ மா. நீ வேற நேரம் தெரியாமல். எல்லாமே லேட் இன்னிக்கு. மழை வேற வெளுத்து வாங்குது, குறையவே இல்லை. டிரைவர் வேற ஒரு இடத்தில் இருக்கான், நான் வேற இடத்தில் மாட்டிட்டு இருக்கேன். எப்படியோ வந்து சேருவேன்.கவலைப்படாமல் இரு."

"உனக்கும் இந்த மழைக்கும் என்ன ராசியோ.பிறக்கும்போதும் பேய் மழையில் தான் பிறந்த, சமைஞ்ச அப்போவும் மழை, இப்போ கல்யாணத்துக்கும் மழை. வயித்துல நெருப்பு கட்டிண்டு இருக்க வேண்டியிருக்கு".

"நீ போன் வை. நான் பத்திரமாக வந்துருவேன்".

அவள் அலைபேசி வைக்க ஒரு கார் அவள் முன் வந்து நின்றது, உள்ளிருந்து ஒரு வாலிபன் இறங்கி வந்தான்.

கார் ஜன்னல் கண்ணாடியை திறந்தாள், அவனை பார்த்ததும் முகம் இறுக்கமானது அவன் ராக்கி. பொது பணி துறை அமைச்சர் மகன், ஏற்கனவே இவளை ஒரு தலையாய் காதலிப்பதாக சொல்லி வம்பு செய்தவன், இவள் யாரென்று தெரியாமல் அவனை செருப்பால் அடிக்க அது பெரிய பிரச்சனை ஆகி பஞ்சாயத்தானது அவளது அலுவலகத்தில்.

"என்ன காவ்யா, தனியா இருட்டிலே வந்து சிக்கியிருக்க, இங்கிருந்து இன்னும் இரண்டு கிலோமீட்டர் போனால் தான் மெயின் ரோடு வரும் , இங்கே வேற வண்டியும் வர வாய்ப்பில்லை, நான் உனக்கு உதவி செய்யுறேன், இப்போ என்னால மட்டும் தான் உனக்கு உதவி செய்ய முடியும்".

"உன் உதவி எனக்கு தேவையில்லை எனக்கு உதவி செய்ய ஆள் வராங்க" ஜன்னல் கதவை சாத்தினாள்.

"காவ்யா உனக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன், நான் பழசை ஏதும் ஞாபகம் வெச்சிக்கலை. கீழே இறங்கு ஒரு கை பிடிச்சா சரி செய்திடலாம். சின்ன பள்ளம் மாதிரி தான் தெரியுது, இறங்கி வா" என்று வம்பிழுத்தான் ராக்கி.

ஆபத்து நேரத்தில் ஒன்றும் புரியவில்லை, இதை விட்டால் வேறு வழியும் இல்லை. அவள் கீழே இறங்கினாள், இருவரும் தள்ள கார் பள்ளத்திலிருந்து மேல சாலைக்கு வந்து சரியாகிவிட்டது.

"ரொம்ப தேங்க்ஸ். நல்ல நேரத்தில் வந்து உதவி செய்த".

"உன் தேங்க்ஸ் யாருக்கு வேனும், இப்படி ஒரு அறிய சந்தர்ப்பத்தை வீணாக்க நான் என்ன முட்டாளா?" என்று அவள் கையை இருக்க பிடித்தான் ராக்கி. 

"ராக்கி கையை விடு, எப்போ சிக்குவேன்னு காத்திட்டு இருந்தியா??, ஏற்கனவே உன்னை பற்றி கம்பெனி எம் டிவரை புகார் கொடுத்தேன் ஞாபகம் இருக்குல்ல"

"மறக்க மாட்டேண்டி, அவ்ளோ சீக்கிரம் நீ எனக்கு ஏற்படுத்திய அசிங்கத்தை மறக்க மாட்டேன், பல ரோஜா பறிக்கும்போது ஒரு ரோஜாவில் முள்ளு குத்த தான் செய்யும், அதுக்காக ரோஜாவே வேண்டாம்னு இருக்க முடியுமா? என் அப்பாக்கு இருக்கிற செல்வாக்குக்கு நான் என்ன செய்தாலும் மாட்ட மாட்டேன். இன்னிக்கு உன்னை அடைஞ்சே ஆகனும்னு சோளிங்கநல்லூரிலிருந்து உன் கார் பின்னாடி தான் வரேன். வசமாக மாட்டிக்கிட்ட".

அதை கேட்டதும் அவளுக்கு பகீர் என்றது. கிடு கிடுவென ஓடி காருக்குள் ஏற முயன்றாள் அவளை மீண்டும் இறுக்கமாக பிடித்துக்கொண்டான், அவன் பிடியிலிருந்து அவளால் விலக முடியவில்லை. அவன் கால் மேல் தன் ஹீல்ஸ் செருப்பை வைத்து அமுக்கினாள் அவன் அவளை விடுவித்தான்.

அவள் ஓட ஆரம்பித்தாள் அங்கே சுற்றி காடு போல மரங்களோடு இருந்தது, சாலை எங்கும் தண்ணீரோடு இருந்தது இருட்டில் பெரிதாக என்ன இருக்கென்று தெரியவில்லை, அவள் நெஞ்சம் மிகவும் படபடத்தது.அவன் பின்னால் துரத்திக்கொண்டு வந்தான்.

ஒரு இடத்தில் சேற்றில் வழுக்க அவள் சரிந்தாள், சாலை தண்ணீரில் உருண்டு சென்று ஒரு பள்ளத்தில் விழுந்தாள், மழை தண்ணீர் குபுகுபுவென அந்த பள்ளத்தில் வர தொடங்கியது, அவன் அவளை எட்டி பார்த்து அவளை தூக்க அவனை தட்டி விட்டாள், அவன் வெறியாக அவளை அடிக்க தொடங்கினான், அவனை கீழே தள்ள அவனும் அந்த பள்ளத்தில் விழுந்தான். பக்கத்தில் நிறைய இரும்பு பலகைபோல் இருந்தன. தன்னை தற்காத்து கொள்ள ஒரு இரும்பை கையில் எடுத்து ஓங்கி ஒரு அடி தலையில் அடித்தாள், மீண்டும் மீண்டும் அடித்ததும்  அவன் மொத்த சப்தமும் நின்று போனது".

அதிர்ச்சியான அவளுக்கு பயம் இன்னும் அதிகமானது. அந்த துரு பிடித்த இரும்பை தன் சுடிதார் துப்பட்டா மூலம் துடைத்தாள் கை ரேகை அழிக்க. அதை தூக்கியெறிந்தாள். அழுகையுடன் காருக்கு ஓடி வர ஒரு போலீஸ் ஜீப் அவள் கார் அருகே வந்து நின்றது. அவள் இன்னும் உறைந்து போனாள்.

உள்ளே இரண்டு போலீஸ் மட்டுமே இருந்தனர். இன்ஸ்பெக்டர் மற்றும் டிரைவர். இன்ஸ்பெக்டர் மழையில் இறங்கி உடனே ஜீப்பை கிளம்ப சொன்னார்.

காவ்யா அந்த மழையில் நடுங்கியபடி அழுதாள் பேச்சு வரவில்லை.

"நான் இன்ஸ்பெக்டர் கோபி, என்ன நடந்துச்சு".

காவ்யா அழுதபடி அனைத்தும் சொல்ல.

"நீங்க ஏதும் பேச வேணாம், உங்க காரில் ஏறுங்க, சொல்றேன்" என்றான் கோபி.

சிறிது நேரத்தில் அவன் சடலத்தை இழுத்து கொண்டு வந்து அவன் காரில் அமரவைத்தான். சுற்றி முற்றி பார்த்துவிட்டு நான்குமுறை சுட்டான், காரில் புல்லட் ஓட்டைகள் தெரிந்தன.

அவளை  பக்கத்தில் அமர சொல்லிவிட்டு அவள் காரை கிளப்பினான். காவ்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை என்ன நடக்கிறதென்று. நேராக அந்த கார் ஒரு வீட்டிற்கு சென்று நின்றது.காரை விட்டு இறங்க சொன்னான்.

"சார் நான் போகனும் சார், என்னை விட்ருங்க" காவ்யா கெஞ்சினாள்.

"உங்க பாதுகாப்புக்கு தான் இங்கே கூட்டிட்டு வந்தேன், இறங்குங்க சொல்றேன்".

மிகுந்த பயத்துடன் இறங்கினாள், அந்த வீட்டு கதவில் பெயர் பலகையை படித்தவுடன் சற்று தெம்பானாள். கார்த்திகேயன் (ஒய்வு) கமிஷனர் என்று இருந்தது.

அவரே வந்து கதவு திறந்தார், இருவரையும் உள்ளே அழைத்து சென்று துடைக்க டவெல் கொடுத்தார். சற்று நேரம் அவளை பொறுமையாக அமர செய்தார். கோபி அவரிடம் எதையோ பேசி கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் இருவரும் வந்து அவள் முன்னே அமர்ந்தனர்.

"இதோ பாரு நாங்க கேட்கிற கேள்விக்கு சரியாக பதில் சொல்லனும் அப்போ தான் உன்னை நாங்க காப்பாற்ற முடியும். முதலில் என்ன நடந்ததுன்னு சொல்லு" கார்த்திகேயன் கேட்டதும் காவ்யா அனைத்தையும் சொன்னாள்.

"முன்னாடி விரோதம் இருக்கு சொன்னியே எப்போ அது?"

"நான் சென்னைக்கு வந்த புதுசில், என் ஆபீஸ் நண்பனோட நண்பன் இவன். அப்படி தான் பழக்கம், முதல் முறையே அவனை நான் அடிச்சிட்டேன், ஆபீஸ்ல கம்பிளைன்ட் பண்ணிருந்தேன், அப்போ ஏதோ நல்ல நேரம் தப்பிச்சிட்டேன்".

"இன்னிக்கு கையில் வளையல், காதில் தோடு ஏதாவது போட்டிருந்தியா?".

"இல்லை சார், ஊருக்கு போற அவசரத்தில் இன்னிக்கு எதுமே போடலை".

"எத்தனை மணிக்கு கிளம்பினீங்க, எங்கிருந்து கிளம்பினீங்க?".

"9 மணி இருக்கும் டைலர் கடையிலிருந்து கிளம்பும்போது, என் ஆபீஸ் போயிட்டு அங்கிருந்து நேராக வந்தேன்".

"அங்கே அந்த கடையில் கேமரா ஏதாவது இருக்கா?".

"இல்லை சார் அது ரொம்ப சின்ன கடை".

"உங்க ஆபீஸ் உள்ளே போனீங்களா?".

"இல்லை வெளிய காரில் தான் இருந்தேன், என் தோழி தான் என் பை எடுத்திட்டு வந்து கொடுத்தாள்".

"வழியில் வேற எங்கேயாவது நிறுத்தினீங்களா?".

"இல்லை சார். எதுக்கு இதெல்லாம் கேட்கறீங்க".

" நீங்க வந்தது, போனது எங்கேயாவது காமெராவில் பதிவாகியிருக்கான்னு பார்க்கனும், நீங்க சொல்றது பார்த்தால் பதிவாக வாய்ப்பு இல்லை. உன் ஆபீஸ் கேமரா மட்டும் ஒரு முறை சரி பார்க்கனும், அதுவும் இந்த மழையில் சரியாக தெரிய வாய்ப்பு இல்லை. அதை சரி செய்துட்டா உங்களை காப்பாத்திடலாம்".

"சார் நான் வேணும்னு பண்ணலை, என்னை காப்பாத்த அடிச்சேன் அவ்ளோ தான். அவன் செத்து போவான்னு எதிர்பார்க்கலை".

"நான் உங்களை தப்பு சொல்லவே இல்லையே, இவனை மாதிரி ஆளுங்க சாக வேண்டியவங்க தான். இவன் மேல ஆறு கேஸ் இருக்கு. எங்களுக்கு தெரிஞ்சு ஆறு பெண்கள் வாழ்க்கையை நாசம் செய்திருக்கான், தெரியாமல் எவ்வளவோ யாருக்கு தெரியும். சில வழக்கை நாங்க மறைமுகமா முடிப்போம் அப்படி தான் இவனை எனவுன்டர்ல போட்டு தள்ள நாங்க இரண்டு வருஷம் முன்னாடியே யோசிச்சோம், தப்பிச்சிட்டான் எனக்கு அப்போ வேலை போச்சு. இருந்தாலும் அவனை விடுவதாக இல்லை. தனியாக எங்கே மாட்டினாலும் முடிக்கனும்னு தான் எங்க பிளான். இன்னிக்கு பெருங்கொளத்தூரில் தனியாக காரில் இருந்ததை பார்த்து எனக்கு தகவல் சொன்னாங்க நான் தான் கோபியை அனுப்பினேன். அதுக்குள்ள இப்படி ஆகிருச்சு. நாங்களே அவனுக்கு இன்னிக்கு தான் நாள் குறிச்சோம். இதுல நீயா வந்து சிக்கிட்ட அதான் இப்படி ஒரு சம்பவம் நடக்காத மாதிரியே உன்னை காப்பாத்தனும்னு யோசிக்கிறேன்".

"சார் ரொம்ப பயமா இருக்கு சார், வீட்ல தெரிஞ்சா என் வாழ்க்கையே போயிடும் சார்".

"கவலைப்படாதமா, இன்னிக்கு இங்கேயே தூங்கு, காலைல முதல் விமானம் பிடிச்சு மதுரைக்கு போயிடலாம். உன் வருங்கால புருஷன் எந்த ஊரு இன்னும் ஏன் வரலைன்னு அவர் தேடலையா??"

"அவர் அமெரிக்காவில் இருக்காரு, இன்னிக்கு காலைல தான் விமானத்தில் ஏறியிருக்கார் நாளைக்கு காலை மதுரை வந்து இறங்குறார்.

"அப்புறம் என்ன, பொண்ணும், மாப்பிள்ளையும் ஒன்றாக ஊருக்கு போங்க. உனக்கு எந்த பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக்கிறேன். கல்யாணம் முடிச்சிட்டு நீங்க வெளியூர் போறீங்களா?".

"ஆமாம் இரண்டு வாரத்தில் அமெரிக்கா போறோம், விசா எனக்கும் வந்தாச்சு".

"இந்த இரண்டு வாரம் தாண்டிட்டா உனக்கு எந்த ஆபத்தும் இல்லை. நீங்க இந்த அறையில் ஓய்வெடுங்க".

அடுத்த நாள் காலை அவளை பாதுகாப்பாக மதுரைக்கு விமானத்தில் அனுப்பி வைத்தார் கார்த்திகேயன். போவதற்கு முன்...

"ஒரு விஷயம் ஞாபகத்தில் இருக்கட்டும், யார் எப்போ உங்களை ஒரு வேளை விசாரிக்க வந்தாலும், நீங்க சோளிங்கநல்லூரிலிருந்து பெருங்கொளத்தூர் வரை காரில் போனீங்க, மழை அதிகமாக இருந்ததுனால தோழி வீட்டில் இருந்திட்டு விமானம் மூலமாக மதுரை போனீங்க இப்படி மட்டும் தான் சொல்லனும். பெருங்கொளத்தூர் பக்கம் யாராவது இருந்தால் அவங்களிடம் அங்கே தங்கினது போல சொல்லி வைங்க போதும், மற்றதை நான் பார்த்துக்கிறேன். அந்த இடத்தில் காலையிலேயே அலசி பார்த்தாச்சு எந்த தடயமும் இல்லை, நீங்க தூக்கி போட்ட இரும்பும் எடுத்தாச்சு அதை உருக்கவும் செய்தாச்சு, மழை தான் உங்களை காப்பாத்தியிருக்கு, ரேகை படியாமல், ரத்தம் உறையாமல் எல்லாமே தண்ணீரில் போயாச்சு. நீங்க வருண பகவானுக்கு தான் நன்றி சொல்லனும்".

"ரொம்ப நன்றி சார். இந்த உதவியை வாழ்நாள் பூரா மறக்கவே மாட்டேன்".

நெஞ்சில் ஈரம் இல்லாத ஒரு மனிதனிடம் மாட்டிக்கொண்டு அவள் அவஸ்தை பட்டதை நினைத்து அவளுக்கு அழுகை தான் வந்தது, கார்த்திகேயன், கோபி போல நெஞ்சில் ஈரம் உள்ள நேர்மையான போலீஸ் இருப்பதை நினைத்து சமாதானமானாள்.

மதுரையில் விமானம் இறங்க, அங்கும் கன மழை, இவள் வந்த விமானம் முன்னாள் வந்த விமானத்தில் அவள் வருங்கால கணவனும் வந்து இறங்கியிருந்தான். அவனை பார்த்ததும் எல்லாவற்றையும் மறந்து சந்தோஷமானாள்.

மூன்று நாளில் அவள் கல்யாணம் நல்லபடியா நடந்தேறியது அவர்கள் வீட்டிற்கு சென்றபோது தொலைக்காட்சியில் பரபரப்பாக செய்தி ஓடி கொண்டிருந்தது, பொது பணி துறை அமைச்சர் மகன் ராக்கி சென்ற வாரம் சுட்டு கொல்லப்பட்டதை அடுத்து அவர் கொலை வழக்கை பார்த்த இன்ஸ்பெக்டர் கோபி, சென்னையில் பிரபல ரௌடியான பம்பாய் ரவிக்கும் இவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்தது தெரிய வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ரவியின் தங்கை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ராக்கி தனது அரசியல் பின்புலத்தை வைத்து தப்பியிருந்தார், நேற்று தனியாக ராக்கியிடம் பேச்சு வார்த்தை நடக்கையில் அவர்களுக்குள் சண்டையாகி துப்பாக்கி சூடு நடந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்தார். ரவியின் தங்கை கொலைக்கும் ராக்கி தான் காரணம் என்ற ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்பிக்கப்படவுள்ளது.

தன்னை காப்பாற்றிய நேர்மையான  போலீஸ்க்கும், மழைக்கும் நன்றி சொன்னாள் காவ்யா!.


Rate this content
Log in

Similar tamil story from Thriller