யதார்த்தம்
யதார்த்தம்
ஒரு கூண்டு எதனால் ஆனது என்பதை உள்ளே சென்றுதான் சொல்ல வேண்டும் என்பதில்லை.அனேகமாக இந்த மனநிலையினால்தான் சில சமூகப் பிரச்சினைகள் வெளிப்படையாகப் பேசப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.
அதிகமான மனிதர்கள் ஆயிரக்கணக்கிலான
ஊராருடன் இணங்கிச்செல்ல,சிற்சிலரே
உள்ள வீட்டாருடன் ஒட்டிப்போவதில்லை.ஏனெனில் நடிப்பது இலகு,இயல்பாக இருப்பது கடினம்.ஆக சமூகத்தில் பலர் நடிக்கிறார்கள்,வீடுகளில் இயல்பாகவே தமது மறுபக்கத்தையும் காட்டிவிடுகிறார்கள்.
இயல்பான வாழ்வை
வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சொல்லப்போவதில்லை,அப்படித் தவறிக்கூட இயல்பு நிலையைக் காட்டிவிட்டால் இந்த சமூகம் அவரைப் பேசாமல் இருக்கப்போவதுமில்லை என்பது இவர்களுக்குத் தெரியும்.
எனது தாய்தானே,எனது தந்தைதானே,எனது சகோதரிதானே,எனது சகோதரர்தானே,எனது கணவன்தானே,எனது மனைவிதானே,....இப்படி நினைத்துத்தான் பல வீடுகளிலும் பல புரிதல்கள் புதைக்கப்பட்டும் சிலபோது உணர்வுகள் மிதிக்கப்பட்டும் விடுகின்றன,இப்படி இருக்க சமூகம் எம்மைப் புரிந்துகொள்ளும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும்.ஒரு மனிதனது குணாதிசயங்களதும்,இயல்பு நிலையினதும் ஆணிவேர் வீடல்லவா?
ரோட்டில் காண்பவர்களுடனும்,வேலைத்தளங்களில் உள்ளவர்களுடனும் மட்டுமல்ல
வீட்டில் உள்ளவர்களுடன் முதலில்
அழகிய முறையில் நடந்துகொள்ளுங்கள்.
உங்களில் சிறந்தவர் உங்களது வீட்டாருக்குச் சிறந்தவர்தான், என முஹம்மது நபியவர்கள் கூறினார்கள்.ஆக ஊரார் பார்க்க ஒழுக்கமாகவும்,கண்ணியமாகவும்,மிருதுவாகவும் நடந்துகொள்பவர்கள் தமது வீட்டாரிடமும் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்.இரட்டை முகம் என்பது
நயவஞ்சகத் தன்மைதானே?
ஒரு வீட்டில் உள்ள
ஒவ்வொருவருக்கிடையிலும் விட்டுக்கொடுப்பு இருக்க வேண்டும்.ஒவ்வொருவரும் வெவ்வேறு வயது,பால்நிலையில் இருக்க விருப்பங்கள் தேவைகள் வித்தியாசப்படலாம்.மற்றும் கருத்துக்களிடையில் வித்தியாசம் இருக்கலாம்.அவற்றினை மோதல் முக்கோணத்தில் கொண்டுபோய் நிறுத்தக்கூடாது.அமைதியான வாழ்க்கை வாழ நினைப்பவர்களுக்கு விட்டுக்கொடுத்தல் என்பது விரும்பியோ விரும்பாமலோ செய்தாக வேண்டிய ஒன்றாக உள்ளது.
வீட்டாருக்கிடையில் கருத்துக்கள் கசப்புக்களாக மாறியிருக்கலாம்,ஆனால் மன்னித்தலை அழகிய பரிசாக வழங்கிவிடலாம்.விளையாட்டில் ஒரு டீம் இல் தனித்தனி ஆட்கள் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லையே?
ஒரு வீட்டில்,ஒவ்வொரு உறுப்பினர்களிடையிலும்
சகித்துக்கொள்ளல் என்பது மிக மிக
அவசியமாக இருத்தல் வேண்டும்.ஏனெனில்,சில விடயங்களை விட்டுக்கொடுப்பது இலகுவாக இருக்கும்,சிலவை மன்னிக்கவே முடியாதன போன்று இருக்கும்.இந்த நேரத்தில் சகிப்புத்தன்மை மட்டுமே தீர்வாக இருக்க வேண்டும்.மாறாக மோதல்களோ வன்முறைகளோ அல்ல.
வன்முறை என்பது ஒருபோதும் தீர்வல்ல.அது ஒரு செக்கனில் எதனையும் செய்யத் துணிந்துவிடும்.வாழ்வின் நோக்கத்தையும் இலட்சியத்தையும் தொலைதூரக் கடலில் கொண்டுபோய் மூழ்கடித்துவிடும்.அதன் பிறகு திரும்பிப் பார்த்தால் எச்சங்கள் மட்டுமே மிச்சமாய்க் கிடக்கும்.
ஆக,வாழும் இக் குறுகிய வாழ்வில் இல்லம் என்பது மன அமைதிக்கான இடம் என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.மாறாக,அது ஆளும் அரண்மனையல்ல.
அமைதி என்பது வீட்டிலுள்ள ஆடம்பரப் பொருட்களாலோ அல்லது தானாகவோ உருவாவதில்லை.மாறாக ஒவ்வோரு தனி உறுப்பினர்களது விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு,மன்னிக்கும் பக்குவம்,சகித்துப்கொள்ளும் உள விருத்தி என்பவற்றினூடாகவே கட்டியெழுப்பப்படுகிறது.
ஆக,வீட்டின் அமைதிக்கும் சிறப்புக்கும் வீட்டிலுள்ள
ஒவ்வொரு தனியாட்களது மனப்பாங்கும் அடிப்படையாகிறது.
இல்லங்களை மட்டும் அழகுபடுத்திப் பார்ப்பவர்கள் வீடுகளில் அமைதி இருக்காது.முதலில் தமது உள்ளங்களை அழகுபடுத்திப் பாருங்கள்.நிச்சயமாக
உங்களது இல்லங்கள் மிக விரைவாகவே அபிவிருத்தியடையும்.