Deviprasath Arunachalam

Action Crime Thriller

5.0  

Deviprasath Arunachalam

Action Crime Thriller

ஒரு சிப்பாயின் கதை

ஒரு சிப்பாயின் கதை

5 mins
398


"பயமா இருக்கா..?"


தன் கதிர்களை விரித்து ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் சூரியனின் எரிச்சலான ஒளி இந்த இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் போகும் ஒரு மிகவும் குறுகலான சந்தில் மெலிதாகவும் சாந்தமாகவும் பட்டும் படாமலும் ஒளிர்கிறது எரிச்சல் இல்லாமல். அந்த மிகவும் குறுகலான சந்தின் இரண்டு வாயில்களும் சந்திக்கும் இரண்டு வெவ்வேறு வீதிகளிலும் மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே போய் கொண்டு இருக்கிறது. போட்டியும் பொறாமையும் நிறைந்த இந்த நகரத்தில் இருக்கும் இரு கும்பல்களுக்கும் இடையே போர் நடக்கப் போகிறது என்று இந்த மக்களுக்குத் தெரியாது. அவர்கள் பேசிக் கொண்டே செல்லும் சத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு கேவலமான, சகித்துக் கொள்ள முடியாத, மற்றவர்களுக்கு இம்சைத் தரக்கூடிய ஒலி மாசுவாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் அந்த குறுகிய சந்தில் பிஸ்டல் ரீலோடு செய்யும் சத்தம் கேட்கிறது.


"கதிர்... பயமா இருக்கா..?" கதிருக்கு எதிரே இருந்தவர் அவர் கையில் வைத்திருந்த பிஸ்டலின் பின்பாகத்தை கழட்டி எரிந்துவிட்டு புதிதாக ஒன்றை அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து துப்பாக்கியில் வைத்து அவரது உள்ளங்கையால் தள்ளினார்.


கதிர் குனிந்து போலியோவால் செயலிழந்து போன அவனது வலது காலை மூச்சைப் பிடித்துக் கொண்டு பார்த்தான். பின், அவனது முதுகில் இருந்து ஒரு பிஸ்டலை எடுத்தான். அவனது வலது காலை எதிரே நின்றவரிடம் காட்டியபடி, "என்ன பாத்தா பயந்த மாதிரி தெரியுதா என்ன..?"


எதிரில் இருந்தவர் கதிரின் நம்பிக்கையைப் பார்த்து புன்முறுவல் செய்தார். கதிரை ஒருமுறை ஆழமாக பார்த்துவிட்டு, அவரது பிஸ்டலை அவரது முழுக்கை சட்டையின் கையில் சொருகி வைத்துவிட்டு வேகமாகத் திரும்பி சந்தின் ஒரு பகுதியில் தெரியும் வீதியை நோக்கி நடந்தார்.


"சோழா... எனக்கு பிளான் தெரியாது..." போய்க் கொண்டிருந்தவர் திரும்பினார். ஒரு புருவத்தைத் தூக்கி ஆச்சர்யமாகப் பார்த்தார். 


"நீ நேத்து நடந்த கான்ஃபரன்ஸ்ல இல்லையா...?"


"ராஜா, என்னோட காலோட நிலைமையப் பாத்துட்டு வேணாம்னு சொல்லிட்டாரு.."


தலையை ஆட்டியபடி பின்னந்தலையை சொரிந்துகொண்டே, "இப்போ அதையெல்லாம் தெளிவா சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. உனக்கு யார சுடணும்னுத் தோணுதோ சுட்டுத் தள்ளு..." சோழன் கதிரிடம் இருந்து திரும்பி மக்கள் போய்க் கொண்டிருக்கும் வீதியில் சென்று மறைந்தான்.


கதிர், சோழன் சென்று கூட்டத்தில் கரைவதை முழுவதும் பார்த்துவிட்டு அவனது வலது காலையும் கையில் வைத்திருந்த துப்பாக்கியையும் ஒருமுறைப் பார்த்தான். 


சோழன் ஜேஜே என்று வீதியின் இருபக்கத்திலும் பிரமாண்டமாக நிற்கும் கடைகளில் இருந்தும் வாடிக்கையாகவும் மேலோட்டமாகவும் பார்வையிட்டு கொண்டிருக்கும் இந்த பிரமாண்ட மக்கள் கூட்டத்தில் ஒருவராக கூட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து சந்தேகம் வராத வண்ணம் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தார்.


"நா இப்போ ராம்நகர் வீதியில இருக்கேன்... இப்போ என்ன செய்யணும்..." சோழன் காதில் இருந்த ப்ளூடூத்தில் வேறொருவரிடம் பேசினான்.


"நா உன்ன பாத்துட்டேன்... உனக்கு முன்னாடி இடது வலது ரெண்டு பக்கமும் ரோடு பிரியுது. அங்கேயும் கூட்டமாத் தான் இருக்கு. ஆனா எந்த பக்கம் ஆபத்து இருக்குன்னு என்னால் சொல்ல முடியாது. எந்த பக்கம் போகணும்னு நீதான் முடிவு எடுக்கணும். இன்னொரு பக்கத்த நா மேல இருந்து பாத்துக்குறேன்..." என்றது காதில் இருந்த கருவி. சோழன் உடனே அவருக்கு மேலே இருக்கக்கூடிய கட்டிடங்கள் அனைத்தையும் மேலோட்டமாக பார்வையிட்டார் பேசியவரைத் தேடி.


சோழன் போய்க்கொண்டிருக்கும் பாதை இரண்டாக பிரியும் அந்த மையப் பகுதியில் நின்றார். அவரது வலது கையில் பதுங்கியிருக்கும் பிஸ்டலை எடுக்க ஆயத்தமாக இருந்தார். மக்கள் கூட்டம் வெள்ளம் போல அடித்துக் கொண்டு போய்க்கொண்டிருக்கும் அந்த இடத்தில், எந்த பாதையில் போகவேண்டும் என்பதை தயாராகத் தீர்மானம் செய்துக் கொண்டிருந்தார்.


சோழனை எதிர்த்து இருவர் படக்கென இவரைப் பார்த்ததும் சாதாரணமாக இருப்பது போல நடித்து நின்றனர். சோழனுக்கு புரிந்து விட்டது. ஆனால் ஒரு சமயத்தில் ஒருவரை மட்டும் தான் கொல்லமுடியும் என்பதையும் அறிந்திருந்தான். கட்டிடத்தின் மேலே இருந்து பேசியவரின் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து அவரது வலது பக்கம் நின்றவரின் மீது வேகமாக பிஸ்டலை எடுத்துத் திரும்பினான். காற்றைப் போல செயல் பட்டான். சோழனின் வேகத்தில் அவர்கள் இருவருமே ஒரு சதவீதம் கூட செயல்படவில்லை. சோழனுக்கு வலதில் நின்றவர் குண்டடிபட்டு கீழே சாய்ந்தார். மேலும் அந்த வலது புறத்தில் இருந்த நபர் மடிந்த பின் சோழனை வீழ்த்த மேலும் இருவர் வேகமாக வந்தனர். சோழன் ஒரே குண்டில் இருவரது தலைகளையும் சிதற அடித்தார். சோழனுக்கு இடது புறத்தில் இருந்த மற்றொரு நபர், சோழனைத் தாக்குவதாக சொல்லி அருகில் போய்க் கொண்டிருந்த இரு பொதுமக்களை சுட்டு வீழ்த்திவிட்டார். சீராக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த மக்களுக்கு பயமும் பதட்டமும் ஒரு சேர வந்துவிட்டது. ஓடி ஒளிய முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின் கூச்சலும் பலமடங்கு உயர்ந்து அந்த வானத்தையும் தாண்டி ஒலித்திருக்கும். கட்டிடத்தில் இருப்பதாக சொல்லிய அவரோ எந்த வித உதவியும் செய்ததாகத் தெரியவில்லை.


மீண்டும் அந்த இடது புறத்தில் இருந்த நபர் சோழனை சுட முயற்சிக்கும் பொழுது அவருக்கு தலையில் குண்டு பாய்ந்து பீச்சியடிக்கும் ரத்தத்தோடு வெளியே வந்தது. சோழன் அவருக்கு மேலே உள்ள கட்டிடங்களைப் பார்த்தார். பின், தோட்டா எங்கே இருந்து பாய்ந்தது என்று மறுமுறை சிந்தித்து பார்த்து அவர் நடந்து வந்த ராம்நகரில் பார்த்தார். கதிர் அவனின் செயலிழந்த வலது காலை இழுத்து இழுத்து துப்பாக்கியை நேரே பிடித்தபடி ஒவ்வொரு அடியாக மெதுவாக வந்துக் கொண்டிருந்தான்.


சோழன் காதில் இருந்த கருவியைப் பயன்படுத்தி அந்த கட்டிடங்களில் இருக்கும் அந்த நபரைத் தொடர்பு கொண்டார். ஆனால் என்ன பயன், அவர் தான் சோழனுக்கு பதில் கூறிய அடுத்த வினாடியே இறந்து விட்டாரே. 


சோழன் கதிரை பெருமையாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது. மேலே உயரஉயர உயர்ந்திருக்கும் கட்டிடங்களில் இருந்து தோட்டா மழை பொழிய ஆரம்பித்தது. மேலும் நிறைய மக்கள் மடிந்தனர். சோழனும் கதிரும் உயிர் பயத்தில் அருகே இருந்த கடைகளில் புகுந்துத் தங்களை மறைத்துக் கொண்டனர். 


சற்று நேரத்தில் அங்கே அலைந்துத் திரிந்த கூட்டமெல்லாம் வற்றிவிட்டது. தூரத்தில் போலீஸ் ஜீப்களின் சத்தம் கேட்கிறது. போலீஸ் ஜீப்களில் இருந்து இறங்கிய கூட்டம் சட்டென அருகே இருந்த பெரிய கடை ஒன்றில் விறுவிறுவென ஆயுதங்களுடன் ஏறினார். கொஞ்ச நேரத்திற்கு பின் தடதடவென துப்பாக்கிகளின் சத்தம் கேட்டது. யாரோ கூட்டத்தில் இருந்தவர் போலீசிற்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். போலீஸ் போன கட்டிடத்தில் இருந்து தான் சோழனுக்கு ஒருவர் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார். 


போலீஸ் கூட்டம் அனைத்தும் இழப்பு இல்லாமல் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்து புழுதி பறக்க ஜீப்பில் ஏறி சோழனும் கதிரும் பதுங்கி இருக்கும் வளையல் கடையைத் தாண்டி சென்றனர். 


"இப்போ எங்க போகணும்..." கதிர் சோழனைப் பார்த்துக் கேட்டான்.


"அவுங்களோட எல்லையை தாண்டி..."


"அப்டின்னா...?"


"சொல்ல நேரமில்லை..."


இருவரும் இப்பொழுது அனாதையாக இருக்கும் வீதியை கடந்தனர். அந்த வீதிக்கு அடுத்து இருக்கும் மக்கள் வாழும் வீதியினுள் நுழைந்தனர். மெதுவாக ஊடுருவி சென்றனர். வீதிகளில் யாரும் இல்லை தூரத்தில் போலீஸ் ஜீப்கள் மக்களின் பாதுகாப்பிற்காக ரோந்து போய்க் கொண்டிருப்பதுத் தெளிவாகவும் லேசாகவும் கேட்கிறது.


"மத்தவங்க... எங்க...?"


"தெரியல.. பிளான்படி எல்லோரும் இந்த இடத்துக்கு வந்திருக்கணும். ஆனா யாரும் இன்னும் வரல.. அநேகமா செத்திருக்கலாம்..." 


கதிர் சோழனை ஆச்சர்யமாக பார்த்தான். உடனே அவர்களின் பாதையில் கவனத்தைத் திருப்பினான்.


"என் உயிரக் காப்பாத்துனதுக்கு நன்றி..."


மீண்டும் ஒரு முறை சோழனைப் பார்த்தான் கதிர். இருவரும் ஒரு தெருவில் இருந்த காருக்கு பின்னால் சென்று ஒளிந்தனர். சோழன் மீண்டும் பிஸ்டலை ரீலோடு செய்தான்.


இருவரும் காரின் பின் சாய்ந்தபடி அவர்களுக்கு நேரே படர்ந்து விரிந்து ஓரிருவர் செத்து அனாதையாக இருக்கும் வீதியைப் பார்த்தனர்.


"ஒரு வேளை செத்துட்டா என்ன பண்ணுவ...?" சோழன் கேட்டான்."


"இனிமே எனக்கு வலது கால பத்தின கவலை இல்லாம இருப்பேன்னு நினைச்சு சந்தோசப் படுவேன்னு நினைக்கிறேன்..."


இருவரும் சிரித்தனர்.


"இப்போ போகப்போற இடத்துல ஆபத்து அதிகம். எப்பையுமே காவலுக்காக ஒருத்தன நிறுத்தி வச்சிருக்காங்க... அவனத் தாண்டி போறது ரொம்ப கஷ்டம்."


கதிர் நன்கு கவனித்தான்.


"நா அவன திசைத் திருப்புறேன்.. நீ உள்ள போய்டு...?"


கதிர் தலையை ஆட்டினான். சோழன் வேகமாக இடது புறத்தில் இருந்த சந்தில் புகுந்து ஓட ஆரம்பித்த்தான். பின்தொடர்ந்து கதிர் மெதுவாக சென்றான். கதிர் போவதற்குள் துப்பாக்கிகள் மோதிக்கொள்ளும் சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது.


சோழன் வீதியில் இருக்கக் கூடிய காரின் பின்னால் ஒளிந்து கொண்டு தூரத்தில் இருக்கும் ஒரு பெரிய கட்டிடத்தின் முன்னால் நிற்கும் ஒருவரைப் பார்த்து சுட்டு கொண்டு இருக்கிறான். அந்த நேரத்தில் கார்களின் சைடுகளில் மறைத்தபடி, குனிந்தபடி, எதிரிக்குத் தெரியாமல் போனான் கதிர். 


செயலிழந்த வலது காலை வைத்துக் கொண்டு அவர்கள் டார்கெட் செய்த கட்டிடத்தை அடைந்தான். ஆனால், ஒரு நூலிழையில் தவறிவிட்டது. கதிர் கடைசியாக பதுங்கியிருந்த காரின் மீது அவனது கைத் தவறுதலாக பட்டதால், கார் கத்தியே காட்டிக் கொடுத்துவிட்டது. எதிரி சுதாரித்துக் கொண்டான். இப்பொழுது எதிரியின் கவனம் கதிரின் மீது இருக்கிறது. 


நிலைமையை உணர்ந்த சோழன் அவன் ஒளிந்திருந்த காரில் இருந்து கதிரிடம் ஓடி வந்தான். அதற்குள் எதிரி கதிரை சுட ஆரம்பித்துவிட்டான். 'டப் டப்' என்று பாய்ந்த தோட்டாக்களில் ஒன்று கதிரின் வலது காலின் தொடையை கிழித்தது. சுருண்டு விழுந்த கதிர் கட்டிடத்தை நோக்கித் தவழ ஆரம்பித்தான். சோழன் எதிரியின் கவனத்தைத் திருப்பும் விதமாக வேகமாக சுட ஆரம்பித்தான். எதிரியும் பதுங்க ஆரம்பித்தான். கதிர் மெதுவாக கட்டிடத்தை அடைந்ததை கவனித்தும் சோழனுக்கு அஞ்சி வெளியே வரமுடியாமல் இருந்தான் எதிரி. ஆனால், சோழனின் காப்பாற்றப்பட்ட உயிர் இப்பொழுது பின்னதலையில் பாய்ந்த தோட்டாவால் பிரிந்தது. சோழனுக்கு பின்னால் தூரத்தில் ஒருவர் தெரிந்தார். சோழன் முன்னே சரிந்தான்.


உள்ளே சென்ற கதிரைத் தடுக்க எதிரி உள்ளே ஓடினான். ஆக்ரோஷமாக ஓடினான் அனால் சற்று நேரத்தில் கப்ச்சிப் என்று சினத்தை அடக்கியபடி துப்பாக்கியை கீழே போட்டு சரணடையும் விதமாக நிராயுதபாணியாக நின்றான். எதிரியின் கண்களுக்கு கதிர் திணறியபடி எழுந்து நிற்பதுத் தெரிகிறது. மேலும் துப்பாக்கி முனையில் இருக்கும் அவர்களது தலைவன் தெரிகிறான். அந்த எதிரியை தொடர்ந்து வந்த மற்றொருவனும் நிலைமையைப் புரிந்து ஆயுதத்தைக் கீழேப் போட்டுவிட்டு கைகளைத் தூக்கியபடி நின்றான். அவர்களின் தலைவனின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து அழுத்தியபடி கதிர் நின்றான்.


சற்று நேரத்துக்கெல்லாம் நிராயுதபாணியாக இருந்த இருவரும் சரிந்தனர். தோட்டாக்கள் அவர்களது உடலில் பாய்ந்தது. கதிரின் குழுவை சேர்ந்தவர்கள் கட்டிடத்தின் உள்ளே சுலபமாக உயிர் சேதம் இல்லாமல் வந்தனர். 


கதிரின் செயலைக் கண்டு அனைவரும் கரகோஷம் எழுப்பிக்கொண்டே அருகில் வந்தனர். கூடவே தூரத்தில் ரோந்தில் இருக்கும் போலீஸ் ஜீப்பின் சத்தம் இவர்கள் இருக்கும் கட்டிடத்தை நோக்கி ஒலித்தது. அனைவரும் அவர்களுக்குத் தயாராக நிற்காமல் ஓடி ஒளிந்து கொண்டனர். ஜீப் அவர்கள் இருக்கும் கட்டிடத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டு, சென்றது. 


அந்த தலைவன் இவர்கள் ஒளிந்திருக்கும் இடத்தைக் காட்டிகொடுத்திருக்கலாமே என்று அவரைத் தேடினால், அவர் நெற்றி பொட்டில் ஓட்டையுடன் படுத்துக் கிடக்கிறார்...


Rate this content
Log in

Similar tamil story from Action