நஞ்சை வீணாக்கிய நாகங்கள்
நஞ்சை வீணாக்கிய நாகங்கள்
வழியெங்கும் காலை சுற்றும்
நாகங்கள் இருக்கின்றன.
கூர் பற்களின் வழி
விஷம் தெளிக்கும்
பல்வகை நாகங்கள்.
கொத்திய கணத்தில்
உயிர் போனால் நன்றே என
அவைகளை கண்டும்
கால்களை அவை உரசி சென்றும்
என் பாதையில்
என் பயணத்தை நான் நிறுத்தவே இல்லை.
சாம்பல் விழிக்கொண்ட
நீண்ட கரு நாகத்தை
ஓர் முறை தெரியாமல் மிதித்துவிட்டேன்.
தலையெழும்பி சீறியவாறே
என்முன் நின்றது.
அக்கணத்தில் தான் உணர்கிறேன்
அதன் நீலம்
என் உயரத்தின் இரட்டிப்பு என்று.
என் அசைவுகளை
அதன் நாவசைவில் உணர்ந்தபடியே
சில நிமிடங்கள் நின்றது.
நானும் நகராமல் இருப்பதே சிறந்ததென அங்கேயே நின்றேன்.
தலைக்குமேல் சென்ற கதிரவன்
என் தலையை நிழலில் நீக்கினான்.
எதிர் நின்ற நாகத்தின் தலையையும் நிழலில் காணவில்லை.
தப்பிக்க இதுவே தக்கச்சமயமென
முண்டமாய் நகர்ந்தேன்.
நான் முண்டமில்லைமென
உணர உணர்த்த
என் நெற்றியில்
இரண்டு பொட்டு வைத்தது போல்
கொத்தியது அந்நாகம்.
கருநீலம் என் உடலில் பரவ
கால்களை சுற்றியிருந்த நாகங்கள்
என் இறப்பை உணராமல்
அதன் நஞ்சை
என் சடலத்தில் பாய்ச்சி வீணடிக்கின்றன.