கலங்கும் கர்னல்மனைவி
கலங்கும் கர்னல்மனைவி
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
என் மகளும் ராணுவத்தில் பணியாற்ற விரும்புகிறாள்!’ - கலங்கும் கர்னல் அஷுதோஷ் ஷர்மா மனைவி
கர்னல் அஷுதோஷ் ஷர்மா இதுவரை இரண்டு முறை கேலண்ட்ரி விருது பெற்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் வடக்கு எல்லையான குப்வாரா மாவட்டத்தின் ஹண்ட்வாரா பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினரை மே 2-ம் தேதி தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாகப் பிடித்து செல்லும் தகவல் ராணுவத்துக்குக் கிடைத்துள்ளது. இதையடுத்து ராணுவத்தினரும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரும் ஹண்ட்வாரா பகுதிக்கு விரைந்தனர். மாலை நேரம் கடுமையான மழையின் காரணமாகத் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது. 3-ம் தேதி தீவிரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியைச் சுற்றி வளைத்தனர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் கர்னல் அஷுதோஷ் ஷர்மா, ராணுவ மேஜர், காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மே-4 தேதி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தீவிரவாதிகள் உயிரிழந்த வீரர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ``வீரர்களின் வீரமும் தியாகமும் ஒருபோதும் மறக்கப்படாது. ஹண்ட்வாராவில் உயிரைத் தியாகம் செய்த வீரர்கள், பாதுகாப்புப் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் தேசத்துக்குச் சேவையாற்றிள்ளனர். நாட்டின் குடிமக்களைப் பாதுகாக்க அயராது உழைத்தவர்கள்’’ எனவும் கூறியுள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.கர்னல் அஷுதோஷ் ஷர்மா இதுவரை இரண்டு முறை கேலண்ட்ரி விருது பெற்றுள்ளார். சிறு வயதிலிருந்தே ராணுவத்தில் சேர்ந்து நாட்டை காப்பது மட்டுமே வாழ்க்கை என எண்ணி மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியவர். 21 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப் பிரிவில் உயர் அதிகாரியாக இருந்தவர். அஷுதோஷ் ஷர்மாவின் இழப்பு குறித்து பேசிய அவரின் மூத்த சகோதரர், ``சிறு வயதிலிருந்து அவருக்கு ராணுவம் மட்டுமே கனவாக இருந்தது, ஆறரை ஆண்டுகளாக 13 முறை முயற்சி செய்து ராணுவத்தில் சேர்ந்தார்’’ எனக் கூறினார்.மே 4-ம் தேதி (திங்கள் கிழமை) அஷுதோஷ் ஷர்மாவின் உடல் ஜெய்ப்பூருக்கு சிறப்பு ராணுவ விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. கர்னல் அஷுதோஷ் ஷர்மாவின் மனைவி பல்லவி ஷர்மா. இவர்களுக்கு 11 வயதில் பெண் குழந்தையும் உண்டு.
அஷுதோஷ் ஷர்மாவின் மனைவி கூறுகையில், ``அவர் இறப்புக்குப் பின் நான் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன். ஆனால், எனக்கு வயதாகிவிட்டது. எங்கள் குழந்தை தமன்னா கடந்த இரண்டு நாள்களாக அவளைச் சுற்றி நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விருப்பப்படுகிறாள்’’ எனக் கூறியுள்ளார். மேலும், பேசிய அவர், ``அவள் ராணுவத்தில் சேர்வது அவளது விருப்பமே. அவள் மனித நேயமிக்க பெண்ணாகவும் பொறுப்புள்ள குடிமகளாகவும் வளர்வது முக்கியம்’’ என்றும் தெரிவித்தார்.