காளையார்கோயில்
காளையார்கோயில்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
பொய்ப்பிள்ளையை மெய்ப்பிள்ளையாக்கும் வைகாசி 7 -ம் திருநாள் வைபவம் ஏன்? - காளையார்கோயில் அற்புதங்கள்!சைலபதி
காளையார்கோயில்ஒரு கோபுரத்துக்காக, ஆலயத்துக்காக யாரேனும் தங்கள் உயிரைத் துறக்க முன்வருவார்களா என்று முதலில் ஐயம் கொண்டனர் ஆங்கிலேயர்கள். ஆனால, அந்தக் கோபுரத்தைக் கண்டதும் அவர்கள் அது உண்மையாக இருக்கும் என்று நம்பினர்.
வீரமும் ஆன்மிகமும் செழித்து வளர்ந்த நிலம். `கானப்பேரெயில்’ என்று சுந்தரர் மற்றும் சம்பந்தரால் போற்றிப் பாடப்பட்ட தலம். திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவராலும் பதினோராம் திருமறையில் கபிலதேவராலும், திருப்புகழில் அருணகிரிநாதராலும், அருட்பாவில் வள்ளலாராலும் போற்றப்பட்ட தலம். அற்புதங்களும் அதிசயங்களும் புராணகால நிகழ்வுகளும் அரங்கேறிய தலம். இவையனைத்துக்கும் மகுடம் சூட்டும்வகையில் மருது சகோதரர்களால் திருப்பணி செய்யப்பட்டு அவர்கள் இன்னுயிரையும் தந்து காத்த தலம். அதுதான் காளையார்கோயில் என்னும் அற்புதத் தலம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிவகங்கைச் சீமையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். அவர்களிடமிருந்து தப்பிய மருது சகோதரர்களைக் கண்டுபிடிக்க ஆங்கிலேயர்களால் முடியவில்லை. ஆனாலும், அவர்கள் மறைந்திருப்பது எப்படியும் தங்களின் ஆட்சிக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எண்ணிய ஆங்கிலேயர்கள், மருது சகோதரர்களை எப்படிப் பிடிப்பது என்று உள்ளூரில் அவர்களுக்குச் சேவகம் செய்த சிலரிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் ஓர் உபாயம் சொன்னார்கள்.
மருது சகோதரர்கள், காளையார்கோயிலையும் அதன் கோபுரத்தையும் மிகவும் பக்தியோடும் ஆசையோடும் எழுப்பினார்கள். அதற்கு ஓர் ஆபத்தென்றால் அவர்கள் பொறுக்க மாட்டார்கள் என்றார்கள். அதைக்கேட்ட ஆங்கிலேயர்கள் வியந்தனர். ஒரு கோபுரத்துக்காக ஆலயத்துக்காக யாரேனும் தங்கள் உயிரைத் துறக்க முன்வருவார்களா என்று முதலில் ஐயம் கொண்டனர். ஆனால், அந்தக் கோபுரத்தைக் கண்டதும் அவர்கள் அது உண்மையாக இருக்கும் என்று நம்பினர்.
சுமார் 155 அடி உள்ள கோபுரம். 9 நிலை. அதன் உச்சியிலிருந்து பார்த்தால் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரமும் குன்றக்குடி முருகன் ஆலயமும் தெரியும். எழில் மிகுந்த அந்தக் கோபுரத்தைக் காக்க மருது சகோதரர்கள் வருவார்கள் என்றே அவர்களுக்கும் தோன்றியது. `மருது சகோதரர்கள் சரணடையாவிட்டால், காளையார்கோயிலையும் அதன் கோபுரத்தையும் தகர்த்துவிடுவோம்’ என்று அறிவிக்கச் செய்தனர்.
இந்த மண்ணையும் மரபையும் நேசிக்கும் மருது சகோதரர்கள் தாங்கள் உயிரென மதிக்கும் கோயிலைக் காக்கச் சரணடைந்தனர். அவர்களைத் தூக்கிலிட ஆங்கில அரசு உத்தரவிட்டது. கடைசி ஆசையாகத் தங்களின் தலையை எப்போதும் கோபுரத்தை தரிசனம் செய்வதுபோலப் புதைக்க வேண்டிக்கொண்டனர் அந்த வீரர்கள். ஆங்கில அரசு அவர்களின் பக்தியைக் கண்டு வியந்து அவ்வாறே நிறைவேற்றியது.