சிறப்பான நடவடிக்கை
சிறப்பான நடவடிக்கை


கொடிய கொரோனா நோய்க்கு எதிராக எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால், இந்தியா தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்துள்ளது என அமெரிக்கா பாராட்டி உள்ளது.
வாஷிங்டன்
இந்திய - அமெரிக்க விவகாரங்களுக்கான, பாராளுமன்ற குழு இணை தலைவரான ஜார்ஜ் ஹோல்டிங் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொடிய கொரோனா நோய்க்கு எதிராக எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால், இந்தியா தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா-இந்தியா இடையிலான நட்பு, தனிச் சிறப்பு வாய்ந்தது. இது, தற்போதைய சூழலில் மேலும் வலுவடைந்துள்ளது.
இந்தியா, உள்நாட்டில் கொரேனாவை தடுக்க கடுமையாக போராடி வரும் நிலையிலும், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு உதவி வருவது பாராட்டத்ததக்கது.அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இந்தியா, கொரோனா பரவலை தடுக்க, மருந்துகள், மருத்துவ உபகரணங்களை, அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த,1,500 பேரை பத்திரமாக விமானத்தில் அனுப்பி வைத்தது. இந்திய அரசு மட்டுமின்றி, அந்நாட்டைச் சேர்ந்த, சேவா இண்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனமும், அமெரிக்காவுக்கு லட்சக்கணக்கான முக கவசங்கள், மருந்துகள், உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறது. அமெரிக்காவில் வசிக்கும், இந்திய வம்சாவளியினர், ஏராளமான இந்திய மாணவர்கள் தங்க, இலவசமாக ஓட்டல் அறைகளை அளித்துள்ளனர்.
இந்தியாவின் மகத்தான சேவைகள், 10 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அமெரிக்காவில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், வியக்க வைக்கிறது. சர்வதேச பிரச்சினையில், சமூக, கலாசார எல்லைகளை தாண்டி, இந்தியா ஆற்றிய பணியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.