நீயும் நானும் நிலவும்
நீயும் நானும் நிலவும்
என் இதயத்திற்கு மிக நெருக்கமானவனே!
என்னை உன்னோடு இணைத்த காதலுக்கு ஐம்பது வயது ஆகிவிட்டது
இன்றும் நினைவில் உள்ளது
நாம் முதன் முறை சந்தித்த
மழைக்காலை பொழுது
தீண்டியும் தீண்டாமலும் எனைத்
தொடும் உந்தன் பார்வையில்
வீழ்ந்து தான் போகிறேனடா
அன்று எனை அணைத்த
அரவணைப்பின் சுகத்தை
இன்றும் உணர்கிறேன் நானடா
வயதாகி போனால் என்ன
சப்தமின்றி மலரும் உன் புன்னகையில் தொலைந்து தான் போகிறேன் நானடா
நீ உறங்குகையில்
உன் முகம் நான் ரசிக்க
உறங்கா இரவுகளில்
வெண்ணிலவை நாம் ரசிக்க
ஒரு ஆயுள் போதாதடா
இரண்டு தலைமுறையை
கண்ட பின்னும்
என் காதலும் பிடித்தமும்
நீ தானடா
தேடித் தேடி கிடைத்த பொக்கிஷமும்
நீ தானடா
என் கண்களின் கனவுகள்
உயிர் பெறுவதும்
உன்னால் தானடா
கடைசி வரை
காதல் மொழி பேசிடுவோம்
வானில் உலாவும் நிலவுடன்
நீயும் நானுமடா...

