கிருமி யுத்தம்..!
கிருமி யுத்தம்..!
ஆறு கால பூஜை எதுவும் நடக்கவில்லை.
அழகர் ஆற்றில் இறங்குவாரா தெரியவில்லை.
குருத்து ஞாயிறுக்கு ஓசான்னா பாடிக்கொண்டு யாரும் ஊர்வலம் போகவில்லை.
அல்லேலுயா சத்தங்கள் அடங்கிப்போய் விட்டன.
வெள்ளிக்கிழமை மதியத்திலும் பள்ளிவாசல்களில் பாதங்கள் கழுவிய ஈரம் காணமுடியவில்லை.
கருவறைகள் இருளடைந்து கிடக்கின்றன.
கடவுளர்கள் ஓய்வில் இருக்கிறார்கள்.
உலகத்தின் மன்றாட்டு ஓங்கி ஒலிக்கிறது.
அது பூமிக்குள்ளேயே எதிரொலித்து அடங்குகிறது.
எந்தக் கடவுளின் படைப்பு என்று தெரியவில்லை.
உலகமே மண்டியிட்டுக் கிடக்கிறது
கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்ற வைரஸிடம்.
என் சாதிக்காரனே என் இனத்துக்காரனே என்னைத் தொடக்கூடாது என்கிற `தீண்டாமை',
உலகமெங்கும் உருப்பெற்றிருக்கிறது. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள், மண்டபங்களின்றித் தள்ளிப்போகின்றன.
குடியுரிமைத் திருத்தச் சட்டம்,
தேசிய மக்கள் தொகைப் பதிவேடு,
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து,
வருமானவரி ரெய்டுகள்,
மத்தியப் பிரதேச அரசியல் மர்மங்கள்,
ஊழல் வழக்குகள் எல்லாம் மறந்து போயின.
அடுத்து ராணுவம் வருமா,
எமர்ஜென்ஸி வருமா
என்று தேசமெங்கும் விவாதங்கள் சூடு பறக்கின்றன.
கொரோனா அச்சம், எல்லா தேசங்களின் எல்லையையும் எளிதில் ஊடுருவும் பயங்கரவாதமாகியிருக்கிறது.
எப்போது இதெல்லாம் முடிவுக்கு வருமென்று திக்கு தெரியாமல் தவிக்கிறது மனிதகுலம்.
முதலில் விழுந்த சீனா முதலிலேயே எழுந்துவிட்டது.
இத்தாலியும் அமெரிக்காவும் இக்கட்டிலிருந்து மீளமுடியாமல் தவிக்கின்றன.
இந்தியாவும் ஊரடங்கை அறிவித்துவிட்டு,
கொரோனாவிலிருந்து தப்பிப்பதற்கு
எல்லா திசைகளிலும் வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது.!!!!!!!