அது ஓர் கனாக்காலம் !
அது ஓர் கனாக்காலம் !
● கார்மேகங்கள் கடல்போல் சூழ
வண்டுகளின் ரீங்காராம் தான் ஒலிக்க,
நினைவுகள் அலைப்போல பாய்ந்திட,
அது ஓர் கனாக்காலம்..........................
● மேகம் கார்குழலியாக விரிந்திட;
கண்களில் நீர்தான் சொறிந்தது.
முதல் தூறல் என்னை வந்து தீண்டிட,
மெய்சிலிர்த்து சிலையாகி நான் போனேன்!
● பிஞ்சு விரல்களால் மழைநீரை எண்ணிட,
முடியாமல் தோற்ற காலம் அது.
அதை எண்ணி ஒருமுறை பார்க்கையிலே
மனதோரம் சிறு புன்னகை தோன்றி மறைந்தது!
● அளவில்லா காகித கப்பல்களை செய்து
கர்வத்துடன் ஓட்டிய காலம் அது!
கர்வம் முழுமை அடைவதற்குள்,
மழை கப்பல்களை மூழ்கடித்த காலம் அது!
● இடியுடன் மழைதான் பெய்தாலே
அர்ஜுனா - என துதித்த காலம் அது !
துதித்த அடுத்த ஒருகணமே;
இடி காணாமல் போன கனாக்காலம் அது.
● மழை தன் வருகையை கூறிடவே,
மண் வாசம் முன்னே தந்திடுமே !
அதனை ஒருமுறை முகர்கையிலே,
பேரானந்தம் எங்கிருந்து வந்திடுமோ ?
● பாட்டி மடியில் படுத்தபடி,
மழையினை ரசித்த காலம் அது.
அளவில்லா மழை நீரினைப்போல்
மணிக்கணக்கினில் கதைத்த கதைகள்
- பல உண்டு!
● மழையினை இரசித்த காலங்கள் தான்,
கண்முன் வந்து போகையிலே!
நினைத்து ஒருமுறை புன்னகைப்பதற்குள்,
மழையோ வேகம் எடுத்ததே!
● குளிர்ந்த மழையில் நனைந்தபடி;
வீதியின் ஓரம் நான் நடக்க,
என்னையறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்க,
செய்வதறியாமல் நான் தவித்தேன்!!
● இருநீரை வேறுபடுத்த தெரியாத
மழலையாய் சாலையில் நடக்கையிலே!
வாழ்வின் கோணங்களை எண்ணியபடி,
மனதின் நினைவுகள் மழையில் கரைந்தபடி,
கால்கள் வீட்டை நோக்கி நடைப்போட்டதே !
