நீரை விரித்ததால்
நீரை விரித்ததால்
ஒரு முறை சுர்வதமன் என்ற அரக்கன் தன் கடும் தவத்தால் சிவ பெருமானை மகிழ்வித்தான். அதன் மூலம் தான் என்றும் வெற்றி அடைய வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான் .
வரம் பெற்ற பின்னர் தன் கட்டுப்பாட்டுக்குள் உலகை கொண்டு வர வேண்டும் என ஆட்டி படைத்தான். தேவலோகத்திற்குச் சென்று அனைத்து தேவர்களையும் பிடித்து தன் சிறையில் அடைத்தான். ஆனால் சுர்வதமனிடம் சிக்காமல் இந்திரன் மற்றும் வருண பகவான் தப்பிச் சென்றுவிட்டனர்.
அசுரர்களின் தளபதி இந்திரன் தென் இந்தியாவின் மறைந்து ஒளிந்துகொண்டு விட்டார் அவரைப் பிடிக்க முடியவில்லை என தெரிவித்தார்.
இந்திரனை சிறைபிடித்தே ஆக வேண்டும் என வேட்கை கொண்டிருந்த சுர்வதமன், வானில் பறந்து கொண்டிருந்த போது வருண பகவானைப் பிடித்தார். உன்னையும் சிறையில் அடைக்காமல் இருக்க வேண்டுமெனில், தென் இந்தியாவில் ஒரு சொட்டு மழை கூட பொழியக் கூடாது. அப்படி செய்தால் தென் இந்தியாவில் அடைக்கலம் கொடுத்த மக்கள் இந்திரனை என்னிடம் ஒப்படைப்பர் என கட்டளை விதித்தார்.
வறண்ட தென் இந்தியா:
அதை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட வருண பகவான் தென்பகுதி மழை பொழிவதை நிறுத்தினார். இதனால் நீரின்றி தென்பகுதி பாலைவனமானது.
தமிழைச் சிறப்பித்துக் கொண்டிருந்த அகத்தியர், மக்கள் படும்பாட்டை பொருக்க முடியாமல், பிரம்ம தேவரை நோக்கி தவமிருந்தார். பிரம்மன் காட்சி அளித்த போது, தென் பகுதியை வளமாக்க வேண்டும் என வேண்டினார். ஆனால் பிரம்மாவோ, நீங்கள் சிவ பெருமானிடம் முறையிடுங்கள் அவர் உங்களுக்கு உதவுவார் என்றார்.
காவிரியைக் கமண்டலத்தில் கொடுத்த ஈசன் :
சிவனை வேண்டிய அகத்தியருக்கு தன் தலையிருந்து செல்லும் கங்கையின் ஒரு பகுதியை அகத்தியருக்கு கொடுத்தார். அதை கமண்டலத்தில் அடைத்து தென் பகுதிக்கு வந்தார்.
காகமாக மாறிய விநாயகர் :
பாரதத்தின் தென் பகுதியை பார்க்க விரும்பிய கணேசன், மூஷக வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தார். தென் பகுதியை அடைந்த அகத்தியர், சோர்வில் கமண்டலத்தை ஒரு இடத்தில் வைத்து விட்டு வறண்டு போன இடங்களைப் பார்த்து சோகத்தில் அமர்ந்திருந்தார்.
காகமாக உருவெடுத்த கணேசன்
அங்கு வந்த கணேசன், உடனடியாக தென் பகுதியை செழிப்பாக்க எண்ணி, காகமாக உருவெடுத்து, கமண்டலத்தில் உள்ள தண்ணீரைக் குடிக்க முயற்சிப்பது போல சென்று கீழே தள்ளினார்.
காவிரியை பொங்க செய்த கணேசன்:
இதைப் பார்த்து அதிர்ந்த அகத்தியர், தான் அரும்பாடுபட்டு கொண்டு வந்த சிவ பெருமான் வழங்கிய கங்கையை கொட்டிவிட்டாரே என நினைத்து காகத்திற்கு சாபம் வழங்கப்போவதாக கூறினார்.
அப்போது தன் சொந்த உருவத்திற்கு திரும்பிய கணேசனைப் பார்த்த உடன் கும்பிட்டார். விநாயகரோ, தென் பகுதி வறண்டு கிடப்பதை பார்க்க முடியவில்லை. அதை உடனடியாக செழிமையாக்க நினைத்ததால் தான் இப்படி செய்தேன். அங்கே பாருங்கள் ஆறு பொங்கி வருகின்றது என்றார்.
காவிரி பெயர் காரணம்:
விநாயகர் காகமாக மாறி நீரை விரித்ததால் (பரப்பியதால்), காவிரி என பெயர் பெறட்டும் என அகத்தியர், கர்நாடகா, தமிழகத்திற்கு வாழ்வாதாரமாக இருக்கும் காவிரிக்கு பெயர் வைத்தார்.