முருகனின் மேனி மின்னுகிறது
முருகனின் மேனி மின்னுகிறது
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர்கள் மலேசியாவில் கூலித் தொழிலாளர்களாக பணிசெய்து வந்தனர். அப்போது தொழிலாளர்களின் தலைவராக இருந்தவர் காயாரோகணம் பிள்ளை. இவரது முயற்சியால் கோலாலம்பூரில் 1873 மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. ஒருநாள் கனவில் தோன்றிய அம்பிகை என் இளைய மகன் முருகனுக்கு அந்த மலைக் குகையில் கோயில் கட்ட உத்தரவிட்டார். இதையடுத்து காயாரோகணம் பிள்ளையின் மகனான தம்புசாமி பிள்ளை, கண்ணப்பதேவர் என்பவர் இணைந்து காடாகக் கிடந்த பத்துமலையில் 1888இல் வேல் ஒன்றிணை வைத்து வழிபடத் தொடங்கினார்.
இவ்விதம் வழிபாட்டுக்கு உரிய கோயிலாக மக்கள் மத்தியில் புகழ் பெற்றதும் பத்துமலை முருகன் கோயிலை அப்புறப்படுத்தும்படி, கோலாலம்பூர் ஆட்சியாளர் ஜோஸ் துரை கட்டளையிட்டார்.
ஆனால் பக்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர். அதையடுத்து கோயிலுக்கு செல்லும் படிகள் அமைக்கப்பட்டன.
1939இல் இருவழித் படிகளாக மாற்றப்பட்ட நிலையில் தற்போது மூன்று வழி படிகளைக் கொண்ட 272 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
காயோராகணம் பிள்ளை கட்டிய கோயில்:
நாகப்பட்டினத்தின் அருகில் உள்ள திருமலை நாயக்கன் பட்டிணத்தை சேர்ந்த காயோராகணம் பிள்ளை மலேசியாவில் குடியேறி நிறைய சம்பாதித்துள்ளார். அவர் சம்பாதித்ததில் ஒரு பகுதியை கோயில் பணிகளுக்காக செலவழித்துள்ளார்.
கோலாலம்பூரில் மாரியம்மன் கோயில், கோர்ட்டு மலைக்குப் பக்கத்தில் விநாயகர் ஆலயம் போன்றவைகளைக் கட்டுவித்த இவர் 1791 ஆம் ஆண்டுகளில் பத்துமலைக் குகை முருகப் பெருமானுக்கும் ஆலயத்தை கட்டியிருக்கிறார். இந்த மூன்று ஆலயங்களிலும் அனைத்து விழா நாட்களிலும் காயோராகணம் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.
புராண கதை
இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வதாகவும் மிகவும் இருண்டதாகவும் உள்ளது. மற்றொரு குகையில் தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார்.
புலவர் நக்கீரரை ஒரு பூதம் ஒரு குகைக்குள் அடைத்து விட்டதாகவும் அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரரையும் சேர்த்து இவர்கள் எண்ணிக்கை 1000 ஆகிவிட்டதாகவும், நபர்களின் எண்ணிக்கை ஆயிரமான பின்பு இவர்களைத் தின்ன பூதம் திட்டமிட்டிருந்தது. முருகனின் வேல் வந்து பூதத்தை பிளந்து நக்கீரனை காப்பாற்றியதாகவும் புராண வரலாறு.
ஆயிரம் பேர் அடைத்து வைக்கக் கூடிய அளவிலான குகைகளை உடைய முருகனின் மலைக் கோயில்கள், தமிழ்நாட்டில் எதுவுமில்லை. பூதங்கள் கடல் கடந்து செல்லக் கூடிய ஆற்றலுடையவை என்பதால் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசிய பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும். எனவேதான் இங்கு முருகனின் வேல் தமிழ்ப் பக்தர் ஒருவருக்குத் தென்பட்டது. அதன் பிறகுதான் இங்கு முருகன் கோயில் அமைக்கப்பட்டது என்றும் இங்குள்ள ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
முருகப் பெருமான் சிலையின் பெருமைகள்
பத்துமலை முருகன் கோவிலில் சிறப்பு முருகப்பெருமான் அந்த மலையின் அடிவாரத்தில் பக்தர்களை வரவேற்க காத்து நிற்கிறார். சிலையின் உயரம் 42.7 மீட்டர் (140.09 அடி).
உலகளவில் மலேசியாவை அடையாளம் காட்டும் விதமாக இந்த கோயில் அமைந்துள்ளது.
இந்த சிலை அமைக்கும் பணி 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது. சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. தாய்லாந்தில் இருந்து தயாரிக்கப்பட்ட விஷேச பொன்னிற கலவையால் முருகனின் மேனி மின்னுகிறது.