இயற்கை செயற்கை
இயற்கை செயற்கை
மேகநாதன் எப்போதும் போல் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய போவதற்கு தயாராகிக்கொண்டிருந்தான். அவன் பல்லாவரம் தாமரைப் பூங்காவில் உடற்பயிற்சி மற்றும் காலை ஓட்டம் செய்வது வழக்கம். அன்று கிளம்பும்போது கொஞ்சம் ஒரு இனம் புரியாத அவஸ்தை இருப்பது போல் உணர்தான். அவன் மனதில் அடுத்த பத்து நாட்களில் வேலை நிமித்தமாக மூன்று மாத பயணமாக செவ்வாய் கிரகம் செல்ல வேண்டியதை நினைத்துப் பார்த்தவுடன் வேர்த்தது. பலமுறை சென்று வந்திருந்தாலும் இந்த முறை ஒரு மனமாற்றத்தை அவனால் உணரமுடிந்தது.
2022ஆம் ஆண்டில் இந்தியா முதல்முறையாக வியோமநாட்ஸ் (இந்திய விண்வெளி விஞ்ஞானிகள்) விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தது. அமெரிக்கா,ரஷ்யா மற்றும் சீனா நாடுகளை காட்டிலும் வெகு தாமதமாக இந்த சாதனையை செய்தாலும், அதற்கு பிறகு மிக வேகமாக முன்னேறி இருபதே ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் ஒரு ஆராய்ச்சி மையம் திறக்கும் அளவிற்கு முன்னேறி இன்று ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு நூற்றுக்கணக்கான இந்தியத் தனியார் நிறுவனங்கள் மிக சர்வ சாதாரணமாக செவ்வாய் கிரகத்தில் வணிகம் செய்கின்ற அளவிற்கு முன்னேறிவிட்டது. இதை எல்லாம் நினைத்துக்கொண்டே மேகநாதன் ஓட ஆரம்பித்தான் செவ்வாய் கிரகம் செல்லும் பயணம் எவ்வளவோ மாறி இருந்தாலும் கடினமான ஒன்றுதான். ஐந்து விண்வெளி நிலையங்களில் விண்வெளி கோள்களில் மாற்றம் செய்து மூன்று மாத காலத்தில் செவ்வாய் கிரகம் சென்று அடையலாம். புவி ஈர்ப்பு இல்லாமை, குறைந்த புவி ஈர்ப்பு மற்றும் நச்சு காற்று சரி செய்யும் கருவிகளை பொருத்திக்கொண்டு, பல வகையான உணவு மற்றும் தாது பொருட்களினால் உடலில் ஏற்படும் உபாதைகளை சரி செய்வதற்கு பல சாதனங்களை ரத்தத்தோடு ரத்தமாக கலந்து அவைகளின் வேலையை கண்காணிக்க ஒரு கணினியை இரண்டாவது மூளையாக காதுகளில் பொருத்திக்கொண்டு ஒரு எந்திரனாகவே மாறவேண்டும். இவ்வாறு எல்லாம் மாறப்போகும் நான் ஒரு மனிதன்தானா என்ற ஒரு கேள்விக்குறி மேகநாதனுக்கு எப்போதும் உண்டு, அதுவும் செவ்வாய் கிரகம் செல்ல தயாராகும்போது இந்த மாதிரி சிந்தனைகள் நிறைய வரும் அவனுக்கு. அதை விட்டுவிட வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்து தோற்றுபோனது தான் மிச்சம்.
இப்படி பல கனத்த நினைவுகளையும், எண்ணங்களையும் அசைபோட்டுக்கொண்டே ஓடலானான். ஒரு சுற்று ஓடி முடிக்கும்போது தனது ஆராய்ச்சிமையத்தின் மருத்துவர் மற்றும் நண்பருமான மைத்ரேயனை சந்தித்தான்.
மைத்ரேயன்: என்ன மேகா முகம் சரியில்லையே, எப்போதும் பார்க்கற செவ்வாய் புத்துணர்ச்சியை காணோமே
மேகநாதன்: என்னமோ தெரியல மை ஒரே மனஉளைச்சலா இருக்கு. என்னவோ பற்றி எல்லாம் யோசிக்கிறேன் கேவலம் இந்த பணத்துக்காக மனிதத்தமையே இழக்கிறோமே இது சரியா, நீயே சொல்லு இப்பிடி செவ்வாய் போயிட்டு வர்றதுக்காக ஒரு எந்திரனாவே மாறறேனே நான் ஒரு மனிதனா?
மை: நல்லா கேட்ட போ! பதில் நண்பணா சொல்லட்டுமா இல்ல மருத்துவராவா!!
மே: காலங்கார்த்தாலேயேவா,
மை: ஹஹ்ஹா, அதாவது குரங்கிலிருந்து மனிதன் வந்தாங்கிறதை நீ ஒத்துக்கற இல்ல, அந்த மனிதத்தன்மைகிறது காலத்து ஏற்றமாதிரி மாறிக்கிட்டே இருக்கும். அதனால இப்ப ஒரு இயற்கை மூளை மட்டும் இருந்தா பத்தாது, அதோடு ஒன்னு ரெண்டு கணினி மூளை இருந்தாதான் மனிதன்
மே: இதென்ன சப்பக்கட்டு, உயிரியல் மூலமா இயற்கையா உருவாவதுதான் மனிதத்தன்மை. ஒரு மருத்துவரான நீ இப்படி பேசலாமா
மை: இதுக்குதான் நான் முன்னாடியே கேட்டேன், நண்பணா மருத்துவரான்னு, ஹஹ்ஹா இருந்தாலும் நான் சொன்னது சரிதான். இயற்க்கை, செயற்கை அப்பிடிங்கிற கருத்து உண்டாக்கியதே நாமதானே. மாற்றம் தான் முக்கியம், அதை யாராலயும் நிறுத்த முடியாது. நேற்றைய செயற்கை, இன்றைய இயற்கை, அதேமாதிரி இன்றைய செயற்கை நாளைய இயற்கை.
மே: ஹ்ம்ம், சரி அப்ப இன்னிக்கி உடற்பயிற்சியை விட்டுட்டு மனப்பயிற்சி எடுத்துக்க வேண்டியதுதான் உன்கிட்ட. ஆக மொத்தம் என்கிட்ட என்ன பிரச்சனைன்னு நினைக்கிற
மை: உனக்கு மனப்பிரச்னைங்குர போதே தெரியுது உனக்கு மனிதத்தன்மை இருக்குன்னு, அப்பறம் என்ன குழப்பம். உன்னோட மனப்பிரச்னைக்கு சுலபமான தீர்வு காலத்தினால் அழியாத பகவத்கீதைல இருக்கு.
"தஸ்மாதசக்த ஸததம் கார்யம் கர்மா ஸமாசர
அஸக்தோ ஹயாசரன்க்ரம பரமாப்னோதி பூருஷ"
பலனை எதிர்பார்க்காமல், எந்த ஒரு பற்று இல்லாம வேலையை செய்பவன் கர்ம யோகி ஆவான். எதைப்பத்தியும் கவலைப்படாம உன் ஆராய்ச்சியை கவனி, இந்த குழப்பம் எல்லாம் ஓடிப்போய்டும்.
மே: இன்னும் கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசிக்கிட்டுஇருந்தேன்னா பேசாம சன்யாசியா மாறிடுன்னு சொன்னாலும் சொல்வ. எனக்கு நேரமாச்சு, நான் கிளம்பறேன்.
கிண்டலாக பேசிவிட்டு கிளம்பினாலும் மேகநாதன் ஒரு புத்துணர்ச்சி பெற்றவனாக, குழப்பம் நீங்கியவனாக மனசுக்குள் மைத்ரேயனுக்கு நன்றி சொல்லியவாரே வீடு திருப்பினான்.
சூசி (சூரியசித்தன்)