Charushri Nagarajan

Drama

5.0  

Charushri Nagarajan

Drama

இதுவும் காதல் தான்

இதுவும் காதல் தான்

3 mins
210


மதியம் வெயில் முகத்தில் அடித்தவுடன் தன் கையில் இருந்த புத்தகத்தால் தன் முகத்தை மூடினாள் அவள். அவள் தான் நம் கதையின் நாயகி சரண்யா. அவள் முகம் கோபத்தில் சிவந்திருந்ததது. அதே நேரம் அவள் கையில் இருந்த செல்போன் அடித்தது. அதில் ஒளிர்ந்த பெயரை கண்டவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.


எவ்வளவு நேரம் காத்திருக்கிறது நரேன்.

இதோ இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் தான், சிக்னலில் மாட்டிகிட்டேன்.

சரண்யா சற்றே கோபம் குறைந்தாள். மணியை பார்த்தாள். அது மதியம் 1 என்றது. சரி வா என்றவாறு போனை வைத்தவள், மறு நிமிடம் யோசித்தபடி தன் அம்மாவிற்கு போன் செய்தாள்.


என்ன சரண்யா மாப்பிள்ள வந்திட்டாரா.

இல்ல மா எப்பவும் போல லேட் தான்.

சரி அவர் வந்தவுடனே முகத்தை தூக்கி வச்சுக்காதே, நான் ரொம்ப கேட்டேன்னு சொல்லு.

சரிம்மா என்றவள் , தன் பக்கத்தில் வந்து நின்ற வண்டியை பார்த்தவுடன் நிமிர்ந்தாள்.

ஹாய் குட்டிமா என்றவாறு ஒரு காலை தரையில் ஊன்றி வண்டியில் இருந்தவாரே அவளை பார்த்து புன்னகைத்தான் நரேன்.


எதுவும் பேசாமல் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

அப்புறம் ஊர் எப்படி இருந்துச்சு. அத்தை எனக்கு நிறைய பலகாரம் செய்து கொடுத்திருப்பாங்களே என்றவனிடம், கோபமாக தொண தொணக்காம வாங்க என்றாள்.

அவனோ அதை கண்டுகொள்ளாமல், ஆமா பத்து நாள் இருக்கப் போறேன்னு சொல்லிட்டு போன ஒரே வாரத்துல வந்துட்ட என்றான்.


ஓ அப்ப நான் சீக்கிரம் வந்தது உங்களுக்கு வருத்தமா, காதலிக்கும் போது மட்டும் உன்ன பிரிஞ்சி இருக்கவே முடியலன்னு சொல்லுவீங்க, இப்ப ஏன் வந்தேன்னு கேக்குறீங்க.

அப்ப நான் வர சொன்னா அரை மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து காத்துக்கிட்டு இருப்பீங்க, இப்ப ஆடி அசைந்து மெதுவா வர்றீங்க.


நானே ஆட்டோ புடிச்சி வந்திருக்கணும். காதலிக்கும் போது என் பின்னாடி சுத்திகிட்டே இருப்பீங்க, ஆனா கல்யாணம் ஆன உடனே எல்லாம் மறந்து விட்டது என்றவாறு அழுதாள். எல்லாம் என்னோட அம்மாவை சொல்லணும் ஒரு வாரம் ஆச்சு மாப்பிள்ளை தனியா இருப்பாரு கிளம்பு கிளம்பு என அவசர படுத்திட்டாங்க. அதன் பிறகு நரேன் எதுவும் பேசவில்லை.


வண்டியை வீட்டின் தெரு முனையிலேயே நிறுத்திவிட்டான் நரேன்.

இப்பதான் ஞாபகம் வந்துச்சு, என்னோட பிரண்டு சுரேஷ் போன் பண்ணினான் நான் போய் என்னன்னு பார்த்துட்டு வந்துடறேன் நீ வீட்டுக்கு போ நான் பத்து நிமிஷத்துல வந்துடறேன்.

கோபம் தலைக்கேறியது சரண்யாவிற்கு, உங்களுக்கு என்ன விட உங்க பிரண்டு தான் முக்கியம் எப்பவுமே.வீட்டு வாசலில் இறக்கி விட மாட்டீங்களா நீங்க. அவனோ அதற்குள் சென்று விட்டிருந்தான்.


அப்பா என்ன வெயிலு,இதுல இந்த அம்மா வேற மாப்பிள்ளைக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும்னு நிறைய பலகாரம் வேற. வேர்த்து விறுவிறுக்க வீட்டு வாசலில் வந்து நின்றாள்.

அட என்ன இது புதுசா ரோஜாச்செடி அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்ச சிவப்பு ரோஜா என ஆச்சரியப் பட்ட வாறு கதவைத்திறந்தாள்.


என்ன இது ஒரே இருட்டா இருக்கு ஒரு ஜன்னலையும் திறந்து வைக்கிறது கிடையாது. இந்த வீட்டில் எல்லா வேலையும் நான் தான் செய்யணும் என்றவாறு லைட் சுவிட்சை தேடிப்பிடித்து போட்டாள்.


வீட்டின் வரவேற்பறையில் அவளுக்குப் பிடித்த கிருஷ்ணரின் ஓவியம் அழகான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. சற்றே திகைத்தவாரே படுக்கை அறைக்குள் நுழைந்தவள் பிரமித்துப் போனாள். சுவர்களில் வண்ணத்துப்பூச்சிகள் பல வண்ணங்களில் பறந்துகொண்டிருந்தன.

அவளுக்கு சந்தோஷத்தில் கண்ணீர் வந்துவிட்டது. கண்களைத் துடைத்தவாறு சமையலறைக்குள் தண்ணீர் குடிக்க சென்றாள். அங்கே பாத்திரங்கள் எல்லாம் புதியது போல் துலக்கி வைக்கப்பட்டிருந்தது.


என்ன மேடம் என்ன பண்றீங்க என்றவாறு உள்ளே நுழைந்தான் நரேன். அவனைக் கண்டவுடன் ஓடிச்சென்று அணைத்தாள் சரண்யா, ஒரு நிமிடம் அவளை தள்ளி நிறுத்தியவன் தன் மணிக்கட்டில் இருந்த வாட்சில் மணி பார்த்தான்.


மணி மதியம் 2 காட்டியது. அவள் முன் ஒரு காலில் மண்டியிட்டு ஒரு கையை நீட்டி அவள் கையை பிடித்தவாறு சரண்யா நீ என் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம். நான் உன்னை எப்பவுமே காதலிச்சு கிட்டு தான் இருக்கேன். அது எப்பவும் மாறாதது.சரியா ஒரு வருஷத்துக்கு முன்னாடி இதே நாளில் தான் நான் உன்கிட்ட என்னோட காதலை சொன்னேன். இப்பவும் சொல்றேன் நான் எப்பவுமே உன்னைக் காதலித்துக் கொண்டே தான் இருப்பேன் ஐ லவ் யூ சோ மச் என்றான்.


சரண்யா ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றாள். அதே நேரம் அவளின் தொலைபேசி அழைத்தது.என்ன சரண்யா வீட்டுக்கு வந்துட்டியா மாப்பிள்ளை எங்க, உன்னை உடனே அனுப்பி வைக்க நேத்தே எனக்கு போன்ல கண்டிப்பா சொல்லிட்டாரு. ஏதோ முக்கியமான விஷயம் அப்படின்னு சொன்னாரு என்னம்மா அது. உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு வேற சொன்னாரு.


அம்மா அது ஒன்னு இல்ல நான் இப்ப ரொம்ப பிஸியா இருக்கேன் நான் உனக்கு ராத்திரி போன் பண்றேன் என்றவாறு போனை வைத்தாள்.

நரேனை பார்த்து புன்னகைத்து எனக்கு இப்போ பசிக்குது என்றாள். அவன் புன்னகைத்தவாறே ஒரு பிரியாணி பார்சலை அவளிடம் கொடுத்தான்.ஓ இது தான் உங்க ஃப்ரெண்ட் பார்க்க போனதா என்று நகைத்தாள்.அவனும் அடடா நான் மாட்டிக்கிட்டேன் என்று கூறி சிரித்தான்.



Rate this content
Log in

Similar tamil story from Drama