அறிவாற்றல்
அறிவாற்றல்
சீன அரசர், லாவோட்சின் அறிவாற்றலை அறிந்து, அவரை நீதிபதியாக்கினார். வழக்கு ஒன்று வந்தது. ஒரு திருடன், ஒரு பணக்காரன் வீட்டில் திருடியிருந்தான். திருடனுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தார் லாவோட்சு. அதோடு, பணக்காரனுக்கும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தார். பணக்காரன் கோபத்தில் கொந்தளித்தான். ``என்ன அநியாயம்... உரிமையாளருக்குச் சிறைத்தண்டனையா?’’
``பொருளைப் பறிகொடுத்த உனக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கியிருக்க வேண்டும். நான் கொஞ்சம் கருணையோடு நடந்திருக்கிறேன். ஏன் தெரியுமா... இந்த நகரத்தின் ஒட்டுமொத்தச் செல்வத்தையும் நீ ஒருவனே வைத்துக்கொண்டிருக்கிறாய். அப்படியென்றால், நீ எத்தனை பேரை ஏமாற்றியிருப்பாய்... எத்தனை பேரிடம் கொள்ளையடித்திருப்பாய்... அதுமட்டுமல்ல, நீ இந்தத் திருடன் திருடுவதற்கு வாய்ப்பாக இருந்திருக்கிறாய். அதனால் நீயும் குற்றவாளியே.’’
நடந்ததைக் கேள்விப்பட்ட அரசர், அன்றைக்கே லாவோட்சை நீதிபதி பதவியிலிருந்து விடுவித்தார். ``நீங்கள் ஞானி. ஆனால், நல்ல நீதிபதி கிடையாது. நீதிபதியென்றால், சட்டங்களைப் பின்பற்ற வேண்டும். என் நாட்டுச் சட்டதிட்டங்களைப் பின்பற்றினால், நீங்கள் நீதிபதியாகத் தொடரலாம்’’ என்றார் அரசர்.