STORYMIRROR

Siva Kamal

Drama Romance

4  

Siva Kamal

Drama Romance

காதலின் வருகை

காதலின் வருகை

2 mins
193

ஒரு கனவின் தொடக்கம் எதுவென்று எப்போதும் தெரியாதது போலவே அந்த காதலின் தொடக்கமும் தெரியவில்லை, காதலைப் பார்த்து கேட்டேன் நீ கனவுதானே என்று அதற்கு அது மௌனமாகவே இருந்தது


ஒரு காதல் எப்படி அழகாக இருக்குமோ அதுபோலவே அதுவும் மிக அழகாக இருந்தது

ஒரு காதல் ஒரு வாக்கியத்தை எப்படி பேசுமோ அப்படியே அதுவும் பேசியது

ஒரு காதல் எந்த இடத்தில் நம் இதயத்தை தொடுமோ அதுபோலவே அதுவும் இதயத்தை தொட்டது


காதலின் ஆடைகள் ஏன் கசங்கி இருக்கின்றன என்று கேட்டேன்

அதற்கு அது ஒரு கதையை சொன்னது


அதன் டைரியில் ஏன் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன என்று கேட்டேன்

அதற்கு அது இன்னொரு கதையை சொன்னது


அது ஏன் எப்போதும் பதற்றத்துடனும் பயத்துடனும் திரும்பி திரும்பிப்பார்க்கிறது என்று கேட்டேன்

அதற்கு அது சொன்ன கதைதான் எல்லவற்றையும் விட விசித்திரமானது


அது ஏன் வந்தது என்று கேட்டபோது அது மௌனமாகவே இருந்தது

எப்போதும் காதலின் மௌனங்கள் சொற்களை விட நம்மை மனம் கசிய வைக்கின்றன


எனக்கு ஒரு காதலிடம் எப்படி உரையாடுவது என்றே தெரியவில்லை

எல்லாவற்றையும் கதைகளாக மாற்றிவிடும் என் மனதினிடம் எடுத்துச் செல்லட்டுமா என்று கேட்டேன்

அதற்கு அது எல்லா காதல்களிடமும் தன்னுடைய உணர்ச்சிகளிடம் கலந்து விடுபவனிடம் தயவுசெய்து என்னை ஒப்படைத்து விடாதே என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டது


நீ ஏன் உன் வாழ்க்கையை விட்டு வெளியே வந்தாய் என்று கேட்டபோது

அரைகுறையாக ஆக்கப்பட்ட காதல்களின் துக்கத்தை ஒரு மனிதனால் ஒருபோதும் புரிய வைக்க இயலாது வேதனையோடு சொன்னது


காதல் என் கண்களை நேராகப் பார்த்து பேசுகிறது

நான் மனிதர்களின் கண்களை ஒருபோதும் சந்திப்பதேயில்லை

நாம் யாருடைய கண்களை பார்ப்பதில்லையோ அவர்களை பற்றி எல்லா பொறுப்புகளில் இருந்தும் விடுபட்டு விடுகிறோம்

ஆனால் ஒரு காதலின் கண்களை நம்மால் தவிர்க்க முடிவதேயில்லை

அது பல நேரங்களில் நமது கண்களைப் போலவே இருக்கிறது அல்லது நம்மால் ஒருபோதும் மறக்க முடியாதவர்களின் கண்களாக இருக்கிறது


புத்தகத்தில் இருக்கும் ஒரு காதலை துண்டிப்பது எளிது நீங்கள் அந்த பக்கத்தை மூடிவைத்து விடுகிறீர்கள்

நாடகத்தில் இருக்கும் ஒரு காதலை விலக்குவது எளிது திரைகள் விழுந்து விடுகின்றன

சினிமாவில் இருக்கும் ஒரு காதலை நீக்குவது எளிது விளக்குகள் எரிந்து விடுகின்றன


ஆனால் வாழ்க்கையில் ஒரு காதல் வரும்போது எல்லா ஒழுங்குகளும் குலைய துவங்கி விடுகின்றன

ஒவ்வொரு சிறிய செயலும் ஒவ்வொரு சிறிய எண்ணமும் ஒரு புனைவாக தொடங்கி விடுகின்றன


ஒரு மனிதனை வெளியேற்றுவதைப் போன்ற ஒரு காதலை செய்யவே முடியாது

ஒரு அன்பை புறக்கணிப்பது போல ஒரு காதலின் இருப்பை புறக்கணிக்கவே முடியாது


ஒரு நிஜ மனிதனும் ஒரு காதலும் எவ்வாறு ஒரு வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள முடியும் என்று காதலிடம் துக்கத்தோடு கேட்டேன்

அதற்கு அது எந்தவொரு காதலும் எப்போதும் ஒரு மனிதனாக ஆவதில்லை

ஆனால் எல்லா மனிதனும் ஏதோவொரு வகையில் ஒரு காதல் ஆகலாம்தானே என்று புன்னகைத்தபோதுதான் நான் காதலின் வருகையை புரிந்துகொள்ள துவங்கினேன்


Rate this content
Log in

Similar tamil poem from Drama