என்றும்
என்றும்
சில நேரங்களில் சந்தியா என் நலம் விரும்பி
சில நேரங்களில் சந்தியா என் அன்பு காதலி
சில நேரங்களில் என் எண்ணங்களை பிரதிபளிப்பவள்
சில நேரங்களில் நித்யாவின் சிறுவயது தோழி சில நேரங்களில் நித்யாவின் எதிரி
சில நேரங்களில் நித்யா அம்மாவின் பிரியமான இரண்டாவது மகள்
சில நேரங்களில் சேட்டைகள் செய்யும் செல்ல தங்கை
சில நேரங்களில் கவிதைகளின் எழுத்தாளர்
சில நேரங்களில் சமூகத்தினால் புறக்கணிப்பட்டு வெறுக்கப்பட்டவள்
சில நேரங்களில் செல்ஃபி கேமராக்களில் தன் சிரிக்கின்ற முகங்களை மட்டும் படம் எடுப்பவள்
சில நேரங்களில் தான் என்ற அகங்காரத்துடன் வாழ்பவள்
சில நேரங்களில் எந்தவொரு இலக்கும் இல்லாமல் பல மணிநேரம் காற்றில் கதை பேசுபவள்
சில நேரங்களில் எதையும் அலட்சியப் படுத்துபவள்
சில நேரங்களில் தன் மெல்லிய குரலில் மெய்மறந்து கீர்த்தனைகள் பாடுபவள்
சில நேரங்களில் அவள் வேலை பார்த்த பேங்கில் நல்ல மேலதிகாரி
சில நேரங்களில் தான் வாழும் வாழ்க்கையின் போக்கை நிலாவிடம் உரையாடுபவள்
சில நேரங்களில் தள்ளுவண்டி கடையில் பானிபூரியும் பஞ்சு மிட்டாயும் சாப்பிடுபவள்
சில நேரங்களில் ஸ்டார் ரெஸ்டாரன்ட்களில் ஸ்பைஸி ப்ரான் பெப்பர் சிக்கன் சாப்பிடுபவள்
சில நேரங்களில தன் மிகப்பெரிய கஷ்டங்களை ஜோக்குகளாக என்னிடம் சொல்பவள்
சில நேரங்களில் இருண்ட தன் அறையில் சுருண்டு படுத்து தூங்க முயற்சி செய்பவள்
சில நேரங்களில் தன் நீலவேக யமஹாவில் காற்றில் பறந்து கரைபவள்
சில நேரங்களில் டி-சர்ட்டும் ஜீன்ஸும் போட்டு அழகு காட்டுபவள்
சில நேரங்களில் பனிக்கட்டிகளுக்கிடையில் செம்பொன்னாய் நிறங்காட்டி சேலையில் ஜொலிப்பவள்
சில நேரங்களில் என்னை சுகிக்க வைத்து படுக்கையில் படுக்க வைப்பவள்
சில நேரங்களில் யாருமே எழுத முடியாத கவிதைகளை எழுதுபவள்
சில நேரங்களில் வசீகரா பாடி என்னை தாலாட்டுபவள்
சில நேரங்களில் எல்லாம் இழந்தவள் போல தத்துவம் பேசுபவள்
கடைசியில் எல்லா நேரங்களுக்கும் நினைவிருக்கும்படியான ஒரு காரியத்தை சந்தியா போனவாரம் செய்தாள். சந்தியா போனவாரம் ஒரே அடியாக என் வாழ்க்கையை திடீரென்று நிறுத்திவிட்டு சென்றாள்.
போனவாரம் சந்தியா அவள் திருமண பத்திரிக்கையை என்னிடம் தயங்கியபடியே நீட்டினாள்,என்னிடம் எந்தவொரு பதிலையும் எதிர்பார்க்காமல். தற்கொலையில் தோற்ற ஒருவனை உட்காரவைத்து எவ்வளவு கேட்டாளும் அவனிடம் வார்த்தைகளே இருக்காது.பேசவே முடியாத தோல்வியுற்ற மௌனியாய் இருப்பான்.அதுபோலவே என் எல்லா வார்த்தைகளும் அற்று போயிருக்கும் அந்த கணத்தை கடக்க முயலும் தருணம் அவள் கண்களை கண்ட போது அவை குளமாகி இருந்தது.என்னேரமும் விழுகப்போகும் அந்த கண்ணீரை அதற்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை.
சந்தியா என்னிடம் 'என்ன மறந்துரு' என திக்காமல் கூறினாள்.அந்த நேரத்தில் அந்த வார்த்தையை சந்தியா திக்காமல் கூற எவ்வளவு முறை பயிற்சி எடுத்திருப்பாள் என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே சந்தியா அந்த இடத்தை விட்டு ஒரு புகையென மறைந்தாள்.
2019-2020 இந்த வருடங்களுக்கு இடையில் போடப்பட்டுருக்கும் அந்த சின்ன கோட்டிடையேதான் எனக்கும் அவளுக்குமான அந்த உறவு இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் கடல் பாசியை போல அந்த சிறு கோடும் அழிந்து போனது.நிஜம் நினைவுக்கு வந்தால் மட்டுமே நினைவுகளை தொடர முடியும் அல்லவா.. திருப்பூரில் நாடகத்தனமான சாரல் மழையையே பார்த்த எனக்கு பேயடித்த மாதிரி அன்று பெய்த மழை வேறு நினைவை கொண்டு வந்து நிறுத்தியது.
ஒன்றிரண்டு முறை என்னை உலுக்கிய பின்னர் வண்டி வேகம் பிடித்தது.ஒரு வளைவில் வேகமாக வண்டியை திரும்பியபோது சக்கரங்கள் ஆழத்தேய்ந்து டயரின் நீ்ண்ட அடையாளங்களை சாலையில் ஆழப்பதித்தது.அன்று இரவு தூங்க முடியாது என்று எனக்கு அப்போதே தெரிந்திருந்தது.
வீட்டிற்கு வந்தபோது எனக்கு தனிமையைவிட தூங்க வேண்டும் என்ற நினைவே வந்தது.இந்த தூக்கம் மனதை விடவும் சோர்ந்து போன என் உடலுக்கு தேவையான தூக்கம்.இதுதான் வேறு ஒரு வாழ்க்கையின் தொடக்கமாய் அமையும் தூக்கம்.அந்த இரவு ஒரு பிசாசைப் போல என் தலையில் இறங்கிக் கொண்டிருந்தது.உடலின் மறதிக்கு ஆற்றலை அனுப்பி படுத்திருக்கும் போது தான் சந்தியா என் வாழ்க்கையில் இல்லாத முதல் நாள் இதுதான் என்பது நினைவுக்கு வந்தது.அவள் இல்லாத அந்த என் அறையை நான் உணர்ந்தேன்.
அந்த நினைவை முழுமையாய் உணர நான் அழாமல் அப்படியே கண் மூடி படுத்துக்கிடந்தேன்.அப்போதுதான் தோற்றவர்களின் மீதான வாழ்பவர்களின் மேலாதிக்கம் எனக்கு புரிய ஆரம்பித்தது.தோற்றவர்கள் மௌனிகள் என்பதின் இயல்பான மறுபக்கம் வாழ்பவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.தோற்றவர்களை பற்றி கூட்டியும் குறைத்தும் எந்தவொரு எதிர்க்கருத்தும் இல்லாமல் அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் அதற்கு மேல் அந்த நினைவை கடக்க முடியாத ஒரு நொடியில் என் அருகில் இருந்த திருமண பத்திரிக்கையை அப்போது தான் பார்த்தேன்.அதில் சந்தியாவின் படமும் அந்த மூன்றாம் நபரின் படமும் அருகருகே இருந்த ஒரு படத்தை பார்த்தும் என் கோபம் எல்லை மீறியது.சந்தியாவின் மீது அப்போது கூட எனக்கு கோபம் வர மறுத்தது.
அவன் மீது தான் என் வெறுப்பு.யார் இவன்.எதற்கு என் வாழ்க்கையில் இவன் வந்தான் என அடுக்கடுக்கான பல கேள்விகளும் விடை தெரியா தர்க்கங்களும் எழ ஆரம்பித்தது.
எனக்கு காதல் கண்ணீர் உனக்கு கல்யாண பத்திரிக்கை, எனக்கு சோக காதல் உனக்கு கல்யாண கோலம், எனக்கு நேரம் பார்த்து பேசுபவள் உனக்கு இனி எல்லா நேரமும் கூட இருக்கப்போகிறவள்.எனக்கு உனக்கு எனக்கு உனக்கு எனக்க உனக்கு என புலம்பித் தவித்த பொழுது அழுகை எனக்கு ஒரு பழக்கமாகவே மாறியிருந்தது.
என் அழுகையின் சப்தம் அதிகமானது.இம்முறை என் மன விகாரங்களுக்குள் தட்டி எழுப்பப்பட்ட பொறாமையின் வெளிப்பாடாக நான் அழுது கொண்டிருந்தேன்
சந்தியா இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்த பொழுது முக்கியமாக சந்தியா ஒரு மூன்றாம் நபருடன் ஒன்றாக இருக்கும் ஒரு தருணத்தை நினைத்துப்பார்த்த பொழுது என்னால் நிற்க நடக்க யோசிக்க முடியவில்லை. நான் வீட்டின் அறைகளுக்கு நடக்க முடியாமல் நிற்க நடக்க என்றபடி என் விரல்களை தேய்த்தேன்.தூக்க மாத்திரையால் கூட அழுத்தி மங்க வைக்க முடியாத உணர்வுடன் நான் சமையலறையின் அலமாரியை திறந்து விஸ்கி சேகரிப்பில் இருந்து கிளென்ஃபிடெச் பச்சை பாட்டிலை திறந்து அளவை பார்க்காமல் ஐஸ்கட்டிகள் நிறைந்த கண்ணாடி டம்ளரில் ஊற்றி இருண்ட வரவேற்பறையில் போய் உட்கார்ந்தேன்.அங்கே திறந்திருந்த டிவி யின் ஒற்றை வெளிச்சம் மட்டுமே இருந்தது.அதன் இருட்டுக்கு இருட்டும் வெளிச்சத்திற்கு வெளிச்சமுமாய் பார்த்தபடி குளிர்ச்சியால் வேர்த்துப்போன சில்லிட்ட கைகளால் விஸ்கி குடித்துக் கொண்டிருந்த போது பின்னால் அம்மா நின்று கொண்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன்.பாவம் என் தலைமுடியை தடவிவிட்டு கொண்டே என் பின்னால் நின்றார்.அழுகை ஒரு தொற்று வியாதியாகவே அம்மாவுக்கும் மாறியிருந்தது. அம்மாவின் கையை விலக்கி அறைக் கதவை அறைந்து சாத்திய பிறகு என் தலையணைகள் ஒவ்வொன்றாக சுவற்றை நோக்கி தூக்கி எறிந்தேன்.அழுகையின் மற்றோரு வெளிப்பாடாய் அது இருந்தது.கதவின் வெளியில் அதைத் தட்டும் தைரியமின்றி அம்மா ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்.
இந்த நிலையை கடக்க முடியாத எனக்கு கனவில் வந்த என் சந்தியாவின் நினைவை கற்பனையில் கொண்டு வந்து நிறுத்தினேன்.பளபளப்பான காகிதத்தில் சுற்றப்பட்ட நீண்ட பூச்செண்டை சந்தியா என் பின்னால் இருந்து தட்டினாள்.நீண்ட கூர்மையான முனையுடைய மலர்ந்திராத மஞ்சள் சிவப்பு நிறத்தில் இருந்த இதழ்களைக்கொண்ட பூக்கள் எனக்கு புதுமையாக இருந்தது.நான் பட்டென எல்லாம் மறந்து என் இடக்கையில் சந்தியாவின் கழுத்தைச் சுற்றி வளைத்தபடி ஒயின் சுவையுள்ள அவள் உதடுகளைக் குடித்தேன்.
அந்த சந்தியாவை என்னிடமிருந்து யாருமே பறிக்கமுடியாது.அந்த என் சந்தியாவை என்னிடமிருந்து யாருமே பறிக்கமுடியாது...