இதயத்தில் தைத்திருந்த முள்
இதயத்தில் தைத்திருந்த முள்
ஆபிரஹாம் லிங்கன் குடியரசுத் தலைவராக இருந்த நேரம். ஒருமுறை வாஷிங்டனுக்கு கோச் வண்டியில் போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு புதைகுழியில் பன்றிக்குட்டி ஒன்று விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. லிங்கன், வண்டியை நிறுத்தச் சொன்னார். இறங்கி ஓடினார். பன்றிக்குட்டியைக் காப்பாற்றினார். அப்போது அவருடைய நாகரிகமான, அழகான உடையில் சேறும் சகதியும் பட்டுவிட்டன.
அந்த உடையுடனேயே வெள்ளை மாளிகைக்குப் போனார். செய்தியைக் கேள்விப்பட்ட பலரும் அவரைப் பாராட்டினார்கள். லிங்கன் குறுக்கிட்டு, ``என்னை யாரும் புகழாதீர்கள். அந்தச் சின்னஞ்சிறிய உயிர் புதைகுழியில் சிக்கி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது என் இதயத்தில் ஒரு முள் தைத்ததுபோல உணர்ந்தேன். அதன் உயிரைக் காப்பாற்றினேனோ இல்லையோ, என் இதயத்தில் தைத்திருந்த முள்ளை நான் அப்புறப்படுத்தி விட்டேன். அதை மட்டும் செய்யத் தவறியிருந்தால், என் இதயத்தில் தைத்த முள் என் வாழ்நாள் முழுவதும் ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்கும்’’ என்று சொன்னார்.