நினைத்த நல்லகாரியம்
நினைத்த நல்லகாரியம்
நினைத்த நல்ல காரியம் தடங்கல் இல்லாமல் உடனே வெற்றி பெற, வீட்டில் வணங்க வேண்டிய பூஜை முறைகள் பற்றி பார்ப்போம்*
பொதுவாகவே விநாயகர் வழிபாடு தடைகளை தகர்க்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். இருப்பினும் குறிப்பாக இந்த விநாயகரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யும்போது எப்பேர்ப்பட்ட பெரிய பெரிய தடைகளும் சுலபமாக தளர்ந்து விடும். வாழ்க்கையில் எதை தொட்டாலும் தோல்வி எதைத் தொட்டாலும் துயரம் என்பவர்கள் உங்களுடைய வீட்டில் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இந்த விநாயகரை வைத்து தொடர்ந்து வழிபாடு செய்து வருவது தொடர் வெற்றிகளை குவிக்கும். இந்த விநாயகரை வழிபடுவதோடு சேர்த்து உங்களுடைய முயற்சிகளை நீங்கள் கைவிடக்கூடாது என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டும்.
பொதுவாகவே எருக்கன் மாலை விநாயகருக்கு உகந்தது. எருக்கஞ்செடி விநாயகருக்கு உரிய செடியாக சொல்லப்பட்டுள்ளது. இந்த வெள்ளருக்கு செடியினால் உருவாக்கப்பட்ட வெள்ளெருக்கு விநாயகரை நம்முடைய வீட்டில் வைத்து பூஜை செய்வது நம் வீட்டிற்கு அதிகப்படியான நன்மையை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
வெள்ளெருக்கன் விநாயகர் சிலையை முதலில் துளசி தண்ணீரை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின்பு சந்தனத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன்பின்பு வாசனை நிறைந்த பன்னீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படியாக மூன்று நாட்கள் மேல் சொன்ன மூன்று பொருட்களை அபிஷேகம் செய்துவிட்ட பின்பு தான் பூஜை அறையில் வைத்து வெள்ளெருக்கு விநாயகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும். பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு அந்த விநாயகரை பூஜை அறையில் வேறு ஏதாவது ஒரு இடத்தில் ஒரு சிறிய மன பலகையின் மேல் அமர வைத்து விடுங்கள்.
துளசி தண்ணீர் அபிஷேகம் சந்தன அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் இந்த மூன்று அபிஷேகங்களை முடித்த பின்பு, முடிந்தால் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலில் இந்த விநாயகரை 3 நாள் வைத்தும் வாங்கி வரலாம். முடியாதவர்கள் மேல் சொன்ன மூன்று அபிஷேகங்களை செய்து விட்டு உங்களுடைய பூஜை அறையில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
இந்த விநாயகரை வீட்டில் எப்படி பிரதிஷ்டை செய்து, எப்படி வைத்து பூஜை செய்தால் உடனடி பலனை பெறலாம் என்பதில் தான் சூட்சமமே அடங்கியுள்ளது. ஒரு பித்தளைத் தாம்பாளத் தட்டில் பச்சரிசியை பரப்பி அதன்மேல் இந்த வெள்ளெருக்கு விநாயகரை வைக்கலாம். அப்படி இல்லை என்றால் நெல் கிடைத்தால் அதை பரப்பி அதன் மேல் விநாயகரை பிரதிஷ்டை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
விநாயகரை அப்படியே வைத்து வழிபாடு செய்வதைவிட இந்த தானியத்தின் மேல் விநாயகரை அமரவைத்து தினம்தோறும் உங்கள் வீட்டு வழக்கப்படி சாதாரணமாக அருகம்புல்லால் அலங்காரம் செய்து விநாயகருக்கு ஏதாவது பிரசாதத்தை நிவேதனம் செய்து தீபம் ஏற்றி வைத்துவிட்டு உங்களுடைய வேண்டுதல்களை வைத்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த வெள்ளெருக்கு விநாயகருக்கு தனியாக ஒரு மண் அகல் தீபம் ஏற்றவேண்டும். எப்போதுமே வெள்ளெருக்கு விநாயகரை நோக்கியவாறு தான் அந்த மண் அகல் தீபத்தின் சுடர் எரிய வேண்டுமே தவிர, தீபம் நம்மை பார்த்தவாறு ஒளிர கூடாது.
இப்படியாகத் தொடர்ந்து வெள்ளருக்கன் விநாயகரிடம் உங்களது வேண்டுதலை வைத்து, தினந்தோறும் பூஜை செய்து வரும் பட்சத்தில் தடைகள் தகர்க்கப்பட்டு வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பார்க்கலாம்.
