சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
*நாம் இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டே ஸ்ரீமன் நாராயணனை ஜபித்துக்கொண்டிருந்தால் பலன் கிடைத்து விடுமா என விளக்கும் எளிய கதை* .
சந்திரபுரி மன்னரும் மந்திரியும் வேட்டையாடிக் கொண்டே வெகுதூரம் சென்றுவிட்டார்கள். அதனால் அவர்களுக்குப் பசியும் களைப்பும் ஏற்பட்டன.
இருவரும் ஒரு மரத்தடியில் இளைப்பாறினார்கள். அந்தக் காட்டில் உண்ண எதுவும் கிடைக்கவில்லை. அமைச்சரோ, ‘நாராயண’ மந்திரத்தை உச்சரித்தபடியே இருந்தார்.
அதைக்கண்ட மன்னர் `‘என்ன அமைச்சரே, நாராயண மந்திரத்தைச் சொல்லிக்கொண்டிருந்தால் பசி தீர்ந்துவிடுமா. வாருங்கள் உணவு தேடிச் செல்வோம்'’ என்று கிண்டல் செய்தார்.
ஆனால் அமைச்சரோ, ‘`மன்னா! மிகுந்த சோர்வால் அவதியுறுகிறேன். நீங்கள் சென்று உங்கள் பசிக்கு உணவு தேடிக்கொள்ளுங்கள். எனக்கானதை அந்த நாராயணன் பார்த்துக்கொள்வார்’ என்றார். மன்னர் அருகிலிருக்கும் கிராமத்துக்குச் சென்றார்.
பக்கத்து நாட்டு மன்னர் வந்திருக்கிறார் என்பதை அறிந்த அவ்வூர் மக்களும் அதிகாரிகளும், அவரை வரவேற்று சுவையான உணவும் பானங்களும் தந்து உபசரித்தார்கள்.
மன்னருக்கு அமைச்சரின் நினைவு வர, அமைச்சர் வனத்திலிருக்கும் விஷயத்தை ஊராரிடம் தெரிவித்தார். அவருக்காகவும் அந்த ஊர் மக்கள் உணவும் பழமும் கொடுத்தனுப்பினார்கள். உணவு பதார்த்தங்களைச் சுமந்துகொண்டு அமைச்சரிடம் வந்து சேர்ந்தார் மன்னர்.
‘அமைச்சரே! பார்த்தீரா... நாராயணனை நம்பி நீர் இங்கேயே இருந்துவிட்டீர். நானோ அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றேன். அடடா! என்ன வரவேற்பு... என்ன உபசரிப்பு தெரியுமா'' என்றார். அத்துடன் அவருக்கான உணவையும் கொடுத்தார்.
புன்னகையோடு உணவை வாங்கிக்கொண்ட அமைச்சர், `‘மன்னா! நீங்கள் வெகுதூரம் சென்று பசியாறினீர்கள். ஆனால் நானோ எங்கும் செல்லாமல் நாராயணின் மந்திரத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தேன்.
இதோ, உட்கார்ந்த இடத்திலேயே எனக்கான உணவைப் பெற்றுக்கொண்டேன். அதுவும் மன்னரான நீங்களே சுமந்துகொண்டு வந்த உணவு! இப்போது புரிகிறதா நாராயண மந்திரத்தின் மகிமை” என்றார். மன்னர் மாலவனின் மகிமையை உணர்ந்தார்.
மனதாரத் துதிப்பவர்க்கு, அந்த மாலவன் கேட்காமலேயே எதையும் கொடுத்துவிடுவார் என்பதே உண்மை.
*சர்வம் கிருஷ்ணார்ப்பணம்*
