யார் இந்த மதுரை ரேவதி?
யார் இந்த மதுரை ரேவதி?
யார் இந்த மதுரை ரேவதி?
பாட்டியின் அரவணைப்பு, கைகூடிய ஒலிம்பிக் கனவு;
மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி, டோக்கியோவில் நடை பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலப்புத் தொடர் ஓட்டம் பிரிவில் இந்தியா சார்பாகக் கலந்து கொள்ளத் தேர்வாகியுள்ளது மதுரை மக்களை மகிழ்ச்சி யடைய வைத்துள்ளது.
வருகின்ற ஜூலை 23-ம் தேதி டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியைக் காண உலக மக்கள் அனைவரும் ஆவலாகக் காத்திருக்கின்றனர். பல்வேறு பிரிவுப் போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வாகியுள்ளனர். இதில் தமிழகத்திலிருந்து கலந்து கொள்ளும் 11 வீரர்களில் மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதியும் ஒருவராகத் தேர்வாகியுள்ளது, மதுரை மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, சக்கி மங்கலத்தைச் சேர்ந்த ரேவதி, சிறு வயதிலயே பெற்றோரை இழந்தவர். ஏழ்மையான நிலையில் பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார். பள்ளியில் படிக்கும்போது ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் ஏற்பட்டு அதில் பயிற்சி பெற ஆரம்பித்து போட்டிகளில் முதலிடம் பெறத் தொடங்கினார்.
அதை தொடர்ந்து மாவட்ட, மாநில, தேசிய அளவில் பல போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளைப் பெற்றார்.
ப்ளஸ் டூவுக்குப் பிறகு அரசு விளையாட்டு விடுதியில் தங்கிப் படித்தார் ரேவதி. ஏழ்மையான குடும்பச் சூழ்நிலை என்பதால் பயிற்சிக்குத் தேவையான பொருள்கள் வாங்க முடியாத நிலையிலும், தடகளப் பயிற்சியாளர் கண்ணனின் வழிகாட்டலும் ரேவதி தன்னம்பிக்கையுடன் பயிற்சி பெற்று பல போட்டிகளில் முதலிடத்தை பெற்று வந்தார். ரேவதி தற்போது சரக்கு ரயில்வே துறையில் சரக்கு போக்குவரத்து பிரிவில் மதுரையில் பணியாற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு முதல், டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டு மென்ற ஒரே இலக்கில் கடுமையான பயிற்சிகளை எடுத்து வந்தார் ரேவதி. அந்தக் கடின உழைப்புக்கு இப்போது பலன் கிடைத்து விட்டது. கடந்த 4-ம் தேதி பாட்டியாலாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு முகாமில் கலந்து கொண்டவர், 4 × 400 கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாகப் பங்கேற்கத் தேர்வாகியுள்ளார். இவருடன் திருச்சியைச் சேர்ந்த சுதா, தனலெட்சுமியும் இதே போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் பிறந்து, சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, தன்னம்பிக்கையுடன் பயிற்சி பெற்று, ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் தன் இலக்கை அடைந்து, நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் ரேவதி. அவருக்கும், அவர் பயிற்சியாளர் கண்ணனுக்கும், சக்கிமங்கலத்திலுள்ள அவருடைய பாட்டிக்கும் மதுரை மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது பாட்டியாலாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் ரேவதி. ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வர வாழ்த்துகள்!