ட்வீட்
ட்வீட்
லண்டன் நகரத்தின் மிக பழைமையான புத்தகக் கடைகளில் ஒன்றான பீட்டர்ஸ் பீல்டு புத்தக நிலையம் சமீப காலமாக விற்பனை இல்லாமல் தவித்து வந்தது. தொடர் வியாபார மந்தத்தைக் கண்டு மனம் வருந்திய அந்தக் கடையின் ஊழியர் ஒருவர் கடையின் பரிதாப நிலையை மக்களுக்கு விவரிக்க ட்வீட்டரில் கடந்த ஜனவரி 14, இரவு 9.55 ஒரு பதிவினை இட்டார்.
புராதன நூல்களுக்கும், வரைபடங்களுக்கும், பழைய புத்தகங்களுக்கும் பெயர் போனதாக விளங்கும் இந்த 100 வருடப் பழைமையான புத்தக நிலையம் அந்தப் பகுதியில் மிக பிரபலமே.
ஆனாலும் புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டதாலும், டிஜிட்டலுக்கு மக்கள் மாறி விட்டதாலும்தான் இந்த நிலைமை நிலவுவதாக இணைய வாசிகள் தங்கள் ஆதங்கத்தினை ட்வீட்டரில் பகிர்ந்து வருகின்றனர். வெறும் பொழுபோக்கிற்காக மட்டுமல்ல சமூக வலைதளங்கள் என்பதனை அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் நிரூபிக்கின்றன. சமூக வலைதளங்கள் சமூக மாற்றத்திற்கும் வழி வகிக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அந்தப் பதிவில் ``எங்கள் வியாபார அனுபவத்தில் இன்றுதான் மிகவும் மோசமான நாள் என நினைக்கிறோம். இன்று ஒரே ஒரு புத்தகம் கூட விற்கவில்லை. நீங்கள் உதவ விரும்பினால் எங்கள் புத்தகங்களை 25% தள்ளுபடியில் பெற்றுச் செல்லுங்கள் என்று பதிவிட்டிருந்தார்
இந்தப் பதிவைப் பார்த்த பிரபல எழுத்தாளர் 'நீல் கைமன்' அந்தப் பதிவை ரீ-ட்வீட் செய்தார். அவர் ரீ-ட்வீட் செய்ததை அடுத்து அவரை பின் தொடரும் மில்லியன் கணக்கான ரசிகர்களும் அந்தப் பதிவை ஆதரித்து புத்தக ஆர்டர்களையும் லைக்குகளையும் அளித்து ஆதரிக்க இரவு 9.55 பதிவிடப்பட்ட அந்த ட்வீட் மறுநாள் காலைக்குள் இணையத்தில் வைரலாக, ஒரே இரவில் 100 புத்தக ஆர்டர்களும் 300 மெசேஜ்களும் வந்து அந்தக் கடைக்காரரை நெகிழவைத்துள்ளது.