"பீஷ்ம விரதம் part 2"
"பீஷ்ம விரதம் part 2"
சந்தனு சத்யவதிக்கு சித்ராங்கதன், விசித்ரவீரியன் என இரு மகன்கள் பிறந்தார்கள். வாரிசு இல்லாமல் அவர்கள் இறந்து போனதால், வ்யாஸரை ப்ரார்த்தித்து, மூத்த மருமகளிடம் சம்போகிக்கச் செய்தாள். ,அவள் வ்யாஸரின் நகம் முடி கண்டு அஞ்சி கண்ணை மூடிக் கொண்டதால் குருடனாக திருதராஷ்டிரனையும், இளைய மருமகள் நாணத்தால் தன் உருவம் காட்டாமல் வெண்மை வர்ணம் பூசிக்கொண்டதால், நீங்காத வெண்மை நிறமுடைய வ்யாதி கொண்ட பாண்டுவையும் பெற்றெடுத்தார்கள். குருடனும் ,வியாதியாளனுமாகப் பிறந்ததால் அரசுரிமைக்கு ஏற்றவர்கள் அல்லர் என்று, மீண்டும் இளைய மருமகளை வ்யாஸரிடம் அனுப்பினாள்.
ஆனால் அவளோ தன்னுடைய தாதியை அனுப்பினாள். அவள் வ்யாஸரிடம் முழு மனதுடன் சென்றதால், தர்மாத்மாவும், ஞானமுடையவரும் ஆசாரசீலருமான, யமனின் அம்சமான விதுரர் பிறந்தார். பின் பாண்டுவிற்கு முடி சூட்டி, விதுரரை மந்திரியாக்கி பீஷ்மர் ஆணைப்படி அரசாளும்படிச் செய்தாள் சத்யவதி. திருதராஷ்ட்ரன் சௌபலை, காந்தாரி என இருவரைத் திருமணம் செய்து கொண்டார். சௌபலைக்கு யுயுத்ஸு என்னும் மகனும், காந்தாரிக்கு துரியோதனனுடன் 100 பிள்ளைகளும் பெற்றாள். பாண்டுவுக்கு குந்தி, மாத்திரி என இரு மனைவியர்கள்.
குந்தி திருமணத்திற்கு முன் துர்வாஸருக்குப் பணிவிடை செய்து அவர் மகிழ்ச்சி அடைந்ததால், குந்திக்கு சில மந்திரங்களை உபதேசம் செய்தார். சில நாள் சென்று குந்தி தான் அறிந்த மந்திரத்தின் மகிமையை அறிந்து கொள்ள அதில் ஒரு மந்திரத்தை உச்சரித்த பொழுது, சூர்ய பகவான் தோன்றி, அவளை கர்பவதியாக்கி, அவளுக்கு கவசகுண்டலத்தோடு கூடிய கர்ணனை மகனாகக் கொடுத்தார். குந்தி திருமணம் ஆகாது பிறந்த குழந்தை என அஞ்சி, அதை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட, அது அதிரதன் என்னும் தேர்ப்பாகன் கையில் கிடைத்தது. அக்குழந்தையே கர்ணன். பின் பாண்டு குந்தி, மாத்திரி இருவரையும் மணந்து கொண்டு, ஒரு நாள் வேட்டைக்குச் சென்ற போது, குந்தமென் என்னும் முனிவர், மான் உருவத்தில் தன் மனைவியைப் புணரும் போது, மிருகம் என்று எண்ணி பாணத்தை விட்டான்.
அவர் நீ உன் மனைவியைப் புணரும் பொழுது மரணம் அடைவாய் எனச் சாபம் தந்தார். ஒரு நாள் பாண்டு கங்கைக் கரை வழியே தன் மனைவியருடன் போகும் பொழுது, ஒரு ஆஸ்ரமத்தில் முனிவர்கள்" அபுத்ரஸ்யகதிர்நாஸ்தி" அதாவது புத்திரன் இல்லாதவனுக்குக் கதி இல்லை எனச் சொல்வதைக் கேட்டு, குந்தியிடம் "என்னால் உனக்குப் புத்திரபாக்யம் இல்லை. அதனால் இந்த முனிவரிடம் சென்று புத்திர பாக்யம் பெறுவாய்" என்று சொன்னார். அதற்குக் குந்தி தான் துர்வாஸரிடம் உபதேசம் பெற்றதைச் சொல்லி, யமதர்மராஜனை நினைத்து மந்திரத்தைச் ஜபிக்க தருமரையும், வாயுபகவானிடம் பீமனையும், இந்திரனிடம் அர்ஜுனனையும் பெற்றெடுத்தாள்.
மாத்திரிக்கு அஸ்வினீ தேவதைகளின் மந்திரத்தை உபதேசிக்க, அவளும் நகுல, சகாதேவரைப் பெற்றெடுத்தாள். இவர்கள் பாண்டு புத்திரர்கள் எனப்பட்டனர். ஒரு நாள் மாத்திரியிடம் பாண்டு சுகிக்கும் பொழுது மரணம் அடைந்தார். நகுல சகாதேவரை குந்தியிடம் ஒப்படைத்து விட்டு மாத்திரியும் நாயகனுடன் மரணம் அடைந்தாள். குந்தியோடு பாண்டவர்கள் அஸ்தினாபுரம் சென்றனர். பாண்டுவின் சாபம் தெரிந்தவர்கள் குழந்தைகளைச் சந்தேகிக்க, குந்தியின் வேண்டு கோளுக்கு இணங்கி, யமன் முதலானோர், இக்குழந்தைகள் தேவ அம்சம் கொண்டவர்கள் என்று சொல்ல, இது சத்தியம் என்று குழந்தைகளை அன்புடன் நடத்தி வந்தனர். பாண்டவர்களுக்கு த்ரௌபதி மனைவியானாள்.
அவள் பொதுவாக இருந்தாலும் மஹா பதிவிரதை. அவளுக்கு 5 குழந்தைகள். கிருஷ்ணனின் சகோதரி சுபத்திரையை அர்ஜுனன் மணந்து அபிமன்யுவைப் பெற்றான். அவன் மனைவி உத்தரை. பாரத யுத்தத்தில் த்ரௌபதியின் 5 மகன்களும், அபிமன்யுவும் இறந்தார்கள். உத்தரையின் மகனை அஸ்வத்தாமா தன் பாணத்தால் மாய்த்தார். இதை அறிந்த கிருஷ்ணன் அக்குழந்தைக்கு உயிர் கொடுத்தார். தன் குலம் அழியும் காலத்தில் பிறந்ததால் இவன் "பரீக்ஷித்" என்று பெயர் கொண்டான்.
பிறகு சிலகாலம் பாண்டு புத்திரர்களிடம் இருந்துவிட்டு திருதராஷ்ட்ரர் தன் மனைவி, விதுரர் இவர்களுடன் ஆரண்யம் சென்ற போது குந்தியும் அவர்களுடன் சென்றாள்.. தாயைக் கனவிவிலே கண்ட தருமர் தன் சகோதரர்கள் ,உத்திரை, நகரத்தார் சூழ ஆரண்யம் சென்று , சதயூபர் ஆஸ்ரமத்தில் அவர்களைக் கண்டு மகிழ்ந்தார். அங்கு விதுரர் இல்லாததால் கங்கைக் கரை வழியே ஆரண்யம் சென்று, யோகத்திலிருக்கும் விதுரரை நமஸ்க்கரித்தார்.
தருமர் பலமுறை அழைத்தும் அவர் காதில் விழாத நிலையில், விதுரர் முகத்திலிருந்து ஒரு ஜோதி கிளம்பி அது தருமருடைய முகத்தில் சென்று மறைந்தது. இருவரும் யமன் அம்சத்தினர் ஆனதால் தருமரிடம் சென்று ஒன்றியது. இதுபோல் தருமரும் யமதர்மனிடம் அடக்குவார். வ்யாஸரும், நாரதமுனிவரும் அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களைக் கண்டதும் குந்தி கர்ணனையும், காந்தாரி தன் 100 பிள்ளைகளையும், சுபத்ரை அபிமன்யுவையும் காண விரும்புவதாகத் தெரிவித்தனர். வ்யாஸர் இவர்களது விருப்பத்தைக் கேட்டு மனம் இரங்கி, தேவியை த்யானித்து, அன்னையின் கருணையினால் அனைவரும் அவர்கள் முன் தோன்றிப் பின் மறைந்தார்கள். பாண்டவர்கள் மீண்டும் அனைவரையும் அழைத்துக் கொண்டு அஸ்தினாபுரம் சென்றனர்.
பிறகு திருதராஷ்ட்ரன், காந்தாரி, குந்தி மூவரும் காட்டிற்குச் சென்று தீயில் ப்ரவேசித்தனர். கௌரவ வம்சம் அழிந்தபின் யாதவர்களும் பிராமண சாபத்தால் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு அழிந்தனர். பலராமனும் தேகத்தை விட்டார். கிருஷ்ணனும் வேடனின் பாணத்தால் இறந்து போனார். கிருஷ்ணன் இறந்ததைக் கேட்டு வசுதேவரும், பலராமருடன் ரேவதியும், கிருஷ்ணனுடன் அவரது மனைவியர் ருக்மிணி, சத்யபாம, சாம்பவி அனைவரும் இறந்தனர். அர்ஜுனன் துவாரகைக்குச் சென்று அங்குள்ள அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றியதும், துவாரகை ஜலத்தில் மூழ்கிப் போயிற்று.
கோபிகா ஸ்த்ரீகள் திருடர்களால் துன்பம் அடைந்து இறந்து போயினர். அர்ஜுனன் இந்திரப்ரஸ்தத்தை அனிருத்ரன் மகன் வஜ்ரனுக்குப் பட்டாபிஷேகம் செய்தான். தருமரும் உத்தரையின் மகன் பரீக்ஷித்திற்கு அஸ்தினாபுர ராஜ்ய பரிபாலம் தந்து விட்டு வனத்திற்குச் சென்றார். இமயமலைச் சாரலில் உள்ள வனத்தில் பாண்டவர்கள் அனைவரும் அவரவர்கள் அடைய வேண்டிய கதியை அடைந்தனர்.