கடவுள்
கடவுள்
ஒரு பௌத்த ஆலயத்துக்குள் வயது முதிர்ந்த ஒரு பெரியவர் இரவு நேரத்தில் அடைக்கலமாகப் புகுந்தார். கடுங்குளிர்காலம். அங்கே புத்தரின் மரச்சிற்பங்கள் நிறைய இருந்தன. குளிரைத் தாங்க முடியாத முதியவர், அந்த மரச்சிற்பங்களிலிருந்து சிலவற்றை எடுத்து நெருப்பிலிட்டுக் குளிர்காய்ந்தார். அதை பௌத்த ஆலயத்தின் காவலன் பார்த்து விட்டான்.
``புத்தர் சிற்பங்களையா எரிக்கிறாய்... வெளியே போ!’’ என்று கடுமையாகத் திட்டி வெளியே விரட்டினான். மீதமிருந்த இரவுப்பொழுதைக் கடுங்குளிரில், சாலையோரமாக அமர்ந்து அந்த முதியவர் கழித்தார்.
விடிந்தது. சாலையிலிருந்த மைல்கல் ஒன்றைப் பார்த்தார் முதியவர். `இதுதான் புத்தர்’ என்று சொன்னபடி அதற்குப் பூசை செய்ய ஆரம்பித்தார். அப்போது அந்த வழியாக வந்த பௌத்த ஆலயத்தின் காவலன் அதைப் பார்த்தான். ``உனக்கு மைல்கல் புத்தராகத் தெரிகிறதா?’’ என்று கேட்டான்.
``உனக்கு மரச்சிற்பங்கள் புத்தராகத் தெரியும்போது, எனக்கு மைல்கல் ஏன் புத்தராகத் தெரியக் கூடாது?’’ என்று கேட்டார் பெரியவர்.
எதுவுமே நாம் பார்க்கும் பார்வையைப் பொறுத்தது. கல்லாகப் பார்த்தால் கல். `அதற்குள் கருணையுள்ள கடவுள் இருக்கிறான்’ என்று நினைத்தால், அது கடவுள்.