ஏழைகளின் பசி
ஏழைகளின் பசி
ஒரு செல்வந்தர், பழநி முருகப்பெருமான் கோயிலுக்குத் தன் பண்ணையில் விளைந்த முதல் வாழைத்தாரைத் தன் பணியாளர் மூலமாகக் கொடுத்தனுப்பினார். அதிலிருந்தவை, நல்ல கனிந்த வாழைப்பழங்கள். வாழைத்தாரை எடுத்துச் சென்ற ஏழைப் பணியாளருக்கு நல்ல பசி. `அதிலிருந்து இரண்டு பழங்களை எடுத்து உண்டால் யாருக்குத் தெரியப்போகிறது?’ என்று நினைத்து, இரண்டு பழங்களை எடுத்து உண்டும்விட்டார்.
எஞ்சிய பழங்களோ டிருந்த வாழைத்தாரை இறைவன் சன்னிதானத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார். வாழைத்தாரைப் பெற்றுக்கொண்ட கோயில் நிர்வாகி, `நீங்கள் அனுப்பிய வாழைத்தாரில் இரண்டு பழங்கள் இல்லை’ என்று அந்தச் செல்வந்தருக்குச் சொல்லி யனுப்பினார். செல்வந்தர், ``இறைவனுக்கு அர்ப்பணித்த வாழைப்பழங்களை நீ எப்படி உண்ணலாம்?’’ என்று அந்தப் பணியாளரை நையப் புடைத்துவிட்டார்.
அன்றிரவு செல்வந்தரின் கனவில் இறைவன் தோன்றினான். ``நீ அனுப்பிய வாழைத்தாரிலிருந்து இரண்டு பழங்கள் மட்டுமே என்னிடம் வந்து சேர்ந்தன. அவை எவை தெரியுமா... எந்த ஏழையால் சாப்பிடப்பட்டனவோ, அவை’’ என்று சொன்னான்.
இதுதான் வழிபாட்டுநெறி. ஏழைகளின் பசி தீர்ப்பதுதான் இறைநெறி..