சிவராத்திரியில்
சிவராத்திரியில்
சிவராத்திரியில் `லிங்கோற்பவ’ வழிபாடு!
திருவாதிரை தினத்தில் நடராஜப் பெருமானையும், உமா மகேசுவர விரத காலத்தில் உமாமகேசுவரரையும், திரிசூலவிரதத்தின்போது அஸ்திர தேவரையும் வழிபடுவது போன்று, சிவராத்திரி தினத்தில் லிங்கோற்பவ மூர்த்தியை வழிபடவேண்டும்.சிவராத்திரி புண்ணிய தினத்தில் நான்குகால பூஜைகள் நிகழும். சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தருணம் அது. இதுவே, சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும்.
இந்த வேளையில் சிவபூஜை செய்வது அதிக சிறப்புத் தருவதாகும். லிங்கோத்பவ காலத்தில், இறைவனுக்கு நெய்பூசி வென்னீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் நெய்த ஆடைகளை அணிவித்து, தாழம்பூக்களாலும் மற்றும் பிற மலர்களாலும் அலங்கரிக்க வேண்டும். இந்த ஒரு காலம் தவிர, வேறு தருணங்களில் தாழம்பூவை சிவபெருமானுக்கு அணிவிக்கலாகாது. சிவனாரின் திருவடிவங்களில் ஒன்றான லிங்கோற்பவ மூர்த்தி வடிவத்துக்குக் காரணமாக, அயனும் அரியும் அடிமுடி தேடிய திருக்கதையைச் சொல்வார்கள்.சிவராத்திரியில் லிங்கோற்பவ காலத்தில்தான், சிவபெருமான் நெருப்புத்தூண் நடுவில் இருந்து மான், மழு, அபய வரத முத்திரைகளுடன் தோன்றி அருள்பாலித்தார்.
நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானை பிரமனும் திருமாலும் ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். அதனை நினைவுகூரும் வகையில், உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓத வேண்டும். மேலும் சிவ சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள இருநிலனாய் தீயாகி எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகையையும் தவறாது ஓதி வழிபடலாம்.