சும்மா இருக்காதே மனது
சும்மா இருக்காதே மனது
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
"சும்மா இருக்காதே மனது" !!
பொல்லாப் பிள்ளை போலே,
சொன்னாலும் கேட்காது !!
எட்டி நடை போடயிலே,
எகிறிக் குதித்து - தலை
தட்டாத சுவரைக் கொஞ்சம்
கை தொடுமா - பார்க்க சொல்லும்.
தூரத்துக் கிளை மேலே,
துடிப்பாகப் பூத்திருக்கும்,
மலரிழுத்து மணம் குடித்து,
மறுபடி மேலனுப்பச் சொல்லும்.
குயிலுக்குப் பதில் கொடுத்துக்
கூவி அழைக்கச் சொல்லும்;
அணிலோடு கொஞ்சி - கண்ணா
மூச்சி விளையாடச் சொல்லும்.
நிலவுதிக்கும் வேளையிலே,
நீண்ட மாடி மீதினிலே,
நிறுத்தாமல் சுருதி மீட்டி,
நித்தமும் பா இசைக்கச் சொல்லும்.
பள்ளி முடிந்து வரும்
பிள்ளையைப் பிடித்திழுத்துத்
தலைகாணிச் சண்டையிட்டு
தட்டாமாலை சுற்றச் சொல்லும்.
காரியமே கண்ணாகிக்
கண்டு கொள்ளா கணவனது
காது கிழிய கத்தி
கடுப்பேற்றிப் பார்க்கச் சொல்லும்.
அவசரக் காலைகளில்,
அசர வைக்கும் பாடலொன்றைக்
கேட்டு விட்டால் போதும் - நின்று
குதியாட்டம் போடச் சொல்லும்.
உரத்துச் சிரிக்கச் சொல்லும்,
நிலைத்து ரசிக்கச் சொல்லும்,
நினைத்து வியக்கும் எதையும்
கவித்துவமாய் வடிக்கச் சொல்லும்.
சும்மா இருக்காத மனது- இது
சும்மா மட்டும் இருந்து விட்டால்,
செல்லரித்துச் சீரழிந்து போயிடுமே ஆதலால்
சும்மா மட்டும் இருக்கவே வேண்டாம் மனது !!