மண்ணாளனே!!
மண்ணாளனே!!
வைகறை வெளிச்சம்
துயில் எழுப்பும்….
கூவும் சேவலோசை
நேரம் கூறும்…
கந்தையைத்
துவைத்துக் கட்டி…
குளியல் பின்
காதற்மனைவி
கைக்கூழ் உண்
அமிர்தகஞ்சி….
திசைகாட்டும் செங்கதிரோன்
இறையென நம்பி..
வானோக்கிக் கும்பிட்டு
நடைபோடும் விவசாயி…
நீ மண்ணாளன்!
களரையும் உவரையும்
பயிர்நிலமாக்கும்
வித்தையாளன் நீ!
தரிசையும் செதுக்கி
அன்னம் அளிப்பாய்
பரிசாய்!
களைநீக்கும் நீ
களைப்பறியாய்!ஏர்க்கொண்டு
உழுத
நிலம் தொழுவாய்!
மண்வாசம் நித்தம்வீசும்
நின்தேகம்…
உழைப்பின் சாட்சி கூறும்…
சேற்றில் அமிழ்ந்த
காலிரண்டும்…
மண்ணோடு உறவாடும்…
என்றும் தருமத்திற்குத் துணையுண்டு இறையைப்போல்!
நினது தருமத்தின்
துணைநிற்கும்
எருதுகள் வழங்கும்
விருதுகள் அன்றோ
நெற்பொன் விளைந்த
பசும்பூமி!
மண்ணின் மைந்தனே!
நீயின்றி உயிரேது!
மக்கள்தம் வாழ்வேது!
மழைநம்பி நீவிர்!
ஏர்பின்னது உலகம்…
நாடாளும் மன்னனும்
உண்ணும் அமுதளிக்கும்
மண்ணின் தலைவனே!
மண்ணாளனே!
உழைப்பளித்து….
வரவுப் பெறா
நிலையறிந்தும்
வயல்வெளியை நீங்கா
நின் பேராண்மை
உதயன் உள்ளவரை
ஒளிர்விடும் பெருஞ்சுடராய்!
உமை தலைவணங்குதல்
அன்றி எம்கடன் நன்றிக்
கடனாய்
எமை இறுக்கும்.
வயல்வெளிகள்
தொழிற்சாலைகளாக,
அடுக்குமாடி குடியிருப்புகளாக
மாறும் அவலம் எதிர்ப்போம்..
தடுப்போம்.
எமக்கு
என்றும்
உணவளிக்கும்
தனியொருவனுக்கு
உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திட
துணிவோம்!
மாரியை மட்டும்
நம்பிடாமல்….
மாற்றுவழி நீர்ப்பாசனம்
துணைக்கொண்டு
நீவிர் உழைத்தால்…
உம் உதிரம்
விழலுக்கு இரையாகா.
வெயிலின் குடை
தந்த கொடை
விவசாயி கருமையுடல்….
வைரம் பாய்ந்த
உடம்பு….
கடின
உழைப்பின் தழும்பு!
சந்ததியாய்
தொடரும்
வறுமை
இனித்
தொடரா
நிலைத்தரும் காலமே
விவசாயி!!
உம் பொற்காலம்!!!
மண்ணாளனே!
உம் நலன் பேணுவோம்...
எம்உயிர் காக்க!
அன்புடன்!!
சக்திதேவி
எழுத்தாளர்
