ஐயம் தீர்த்திடு
ஐயம் தீர்த்திடு
அம்மா! நீயே என் வையம்
என்னுள்ளே எழுந்தது ஓர் ஐயம்
அதைப் பகிர்கிறேன் நானும்
அதைத் தீர்ப்பாயோ நீயும்?
விதியின் கட்டாயத்தினால்
நானும் பிறந்தேன் பெண்ணாக உனக்கு
மிகவும் காயப்படுகிறது மனமோ எனக்கு
என்னைவிட அதிகம் - என்
தமையனை விரும்புகிறாயோ என்று?
அம்மா! உன் அன்பைக் காண்கிறேன்
நான் சமைத்து சுத்தம் செய்ய கற்றுக்கொள்ளும்போது
உன் அன்பை ஆழமாக உணர்கிறேன்
நீ தினசரி வேலைகளைக் கற்றுத்தரும்போது!
பிடிக்கும் எனக்கு : உன் வியர்வையின் வாசனை
உன் முகம் கண்டறிவேன் உன் அகத்தின் யோசனை
நீ சமைக்கும் உணவின் சுவையோ ஏற்றம்
அது தருமே ௭ன் உணர்வுகளுக்கு ஓர் அழகிய மாற்றம்!
மகிழ்ச்சியின்போது ரீங்காரம் செய்வாய் நீயும்
மனகுழப்பத்தின்போது உதடு கடிப்பாய் நீயும்
அச்சத்தின்போது கூச்சலிடுவாய் நீயும்
இரகசியத்தின்போது மட்டும், வேறாே நானும்?
நீ அதிகம் நேசிப்பாய் - என்னை
விலைப்பேசி திருமணம் எனும் பெயரில் விற்கும்போது
நானும் மதிப்பற்றுப் போவேன் வெறும் காகிதம் போல
மா மதிப்புள்ள உன் பொன் நகையுடன் ஒப்பிடும்போது!
நாம் துணிகளைத் துவைக்கிறோம் சேர்ந்து - அப்பொழுது
நம் சிரிப்பின் அலைகளோ உறவாடும் கை கோர்த்து
இல்லை பள்ளியும் விளையாட்டும் பெண்களுக்கு
உண்டு அவ்வுரிமை அனைத்தும் ஆண்களுக்கு!
தமையன் பள்ளியிலிருந்து வீடு வரும்போது
உயிரற்ற கருவி போல் ஆகிறேன் நானும்
அவனுடைய புத்தகமும் பையும் நான் சுமக்க - நான்
உன் மகள் என்பதை மறந்துவிடுகிறாய் நீயும்!
நான் சொல்லற்று ஏங்குகிறேன்
கொஞ்சி அவனை நீ முத்தமிடும்போது
நான் ஓரத்தில் தேங்குகிறேன்
கெஞ்சி அவனுக்கு நீ உணவு பரிமாறும்போது!
அம்மா! நீயே கூறிடு
உன் அன்புக்குரியவர் யாரென்று?
என் ஐயம் தீர்த்திடு - ௭ன்னைவிட
தமையனை அதிகம் நேசிக்கிறாயா நீயும்?
