நண்பர்களுடனான ஒரு நாள்..
நண்பர்களுடனான ஒரு நாள்..
சிறுவர் சிறுமியராய்
பார்த்தது..
நீண்ட இடைவெளிக்குப் பின்
வியந்து பார்த்துக் கொண்டோம்..
உயர்தர உணவகம் ஒன்றில்
பத்து பேர் சந்திப்பு!
தருவிக்கப் பட்ட உணவுகள்
சுவாரசியமாய் இவர்களை
வேடிக்கை பார்த்தன...
உருவ மாற்றங்கள் பற்றிய
விமர்சனங்கள் -
குடும்பத்தினர் பற்றிய
விசாரிப்புகள் -
இடைச் செருகலாய்
"இன்னொரு சூப்"
"ஒரு கோபி மஞ்சூரியன்"
எங்கள் கூட்டத்தில் ஒருவன் தான்...
ஏகமாய் திட்டினோம்
"சோறு சோறுன்னு"
"எங்கள பாக்க வரலியா"
சளைக்காமல் உணவு தருவித்தான்
சிறு வயதில் வாங்கிய
அடிகளும் திட்டுக்களும்
பேச்சினூடே அனைவரையும்
சிரிக்க வைத்தன..
உணவகத்தின் உரிமையாளர்
நான்கு முறை
முறைத்துப் போனார்..
வெளியேறும் நேரம்
மௌனத்தின் அடர்த்தி மிகுந்தது
குறிஞ்சிப் பூவாய்
மலர்ந்த தருணங்களை
கரங்களுக்குள் பொத்தி வைத்தவாறே
கடையை விட்டு வெளியேறினோம்
சரவெடியாய் அதிர்ந்த கூட்டம்
தேர்வறை மாணவர்களாய்
நகர்ந்து சென்றது..
ஒரு பனிக்கூழ் கடையை
கடக்கும் போது
திட்டு வாங்கியவன்
மெதுவாய்க் கேட்டான்
"ஐஸ் கிரீம் சாப்பிடலாமா"
ஒன்பது பேரும் ஒரே "சரி" என்றோம்
வெடித்துச் சிரித்தான் நண்பன்...
உறைந்து நின்ற காலம்
பத்துக் கரங்களிலும்
பனியாய் உருகி ஓடியது...!!