நான் இன்னும் காத்திருக்கிறேன்... -சுதந்திரத்தாய்..
நான் இன்னும் காத்திருக்கிறேன்... -சுதந்திரத்தாய்..
ஆயிரமாயிரம் கனவுகள்
மனதினில் சுமந்து
இந்தியர் அனைவரின்
இல்லத்தில் புகுந்து
இதயத்தில் நுழைந்து
இன்னும் காத்திருக்கிறேன்..
ஆண்டுகள் பலசென்றும்
ஆண்டோர் பலகண்டும்
என் கனவுகள் யாவையும்
நனவாக்கிடும்
நல்மனம் கொண்ட
நல்லோர் வரவுக்கு காத்திருக்கிறேன்..
ஏழைகள் பசிகண்டு
வெகுண்டெழும்
மனங்கொண்ட மனிதரால்
பட்டினி அரக்கனை
பலம் கொண்டு தாக்கி
அழிக்கும் நாளுக்கு காத்திருக்கிறேன்.
லஞ்சமும் ஊழலும் முழுவதும் ஒழிந்து
வஞ்சமும் பகையும் எங்கும் அழிந்து
பிஞ்சுகள் சிதைக்கும்மனிதமிருகங்கள்
அஞ்சி நடுங்கிட காத்திருக்கிறேன்..
விரைவில் எல்லாம் நல்லதாய் மாறி
தடைகளை தகர்த்து படிகளை அமைத்து
விடைகளை தந்திடும் விடியலுக்காக
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்..
இரா.பெரியசாமி..